“இனிமே தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் தான்” – தமிழ்க்குமரன் !
‘ஏசிஎம் சினிமாஸ்’ பேனரில் சூர்யகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்படக் கல்லூரி மாணவரான ஜெகன்ராயன் டைரக்ட் பண்ணியிருக்கும் படம் ‘ரூம் பாய்’. வரும் ஏப்ரலில் ரிலீசாகும் இப்படத்தில் தயாரிப்பாளர் சூர்யகலா சந்திரமூர்த்தியின் மகன் சி. நிகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக ஹர்ஷா, மற்றும் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உட்பட பலர் நடித்துள்ளனர். பி.ஆர்.ஓ. : புவன் செல்வராஜ்.
‘ரூம் பாய்’-ன் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, மார்ச்.14-ஆம் தேதி இரவு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் பேசியவர்கள்….
கலைப்புலி தாணு,
“படத்தின் தயாரிப்பாளரிடம் எவ்வளவு பட்ஜெட் எனக் கேட்ட போது, கோடிகளில் செலவழித்திருக்கேன்னு சொன்னார். கோடிகளை செலவழித்த அளவுக்கு படத்தில் தரம் இருந்தால் கண்டிப்பா வெற்றி பெறும்னு சொன்னேன். படம் வெற்றியடைந்து அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கட்டும்”.
“தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவருமே முக்கிய ஆலோசனை நடத்தி சில முடிவுகளை எடுத்துள்ளோம். அந்த முடிவுகள் தமிழ் சினிமாவுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான முடிவு. அதற்கான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் வகுக்கப்படும். அதே போல் புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் சில வழிமுறைகள் கொண்டு வருவோம். இனிமே தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் தான்”.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசன்,
“இன்றைய தேதியில் படத்தின் தயாரிப்புச் செலவு 30% என்றால் ஹீரோக்கள் சம்பளம் 70% . படம் ஓடாவிட்டால் ஹீரோக்கள் கண்டு கொள்ளவே மாட்டர்கள். தயாரிப்பாளர்கள் தான் நடுத்தெருவில் நிற்கிறார்கள். ஹீரோக்களில் ரஜினி சார் ஒருத்தர் மட்டும் தான் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தில் பங்கெடுத்து உதவுகிறார்”.
படத்தின் டைரக்டர் ஜெகன் ராயன்,
“இந்த நாளுக்காக இந்த மேடைக்காக இருபத்தஞ்சு வருசம் காத்திருந்தேன். இந்த விழாவை எனது அப்பா என்.வி.சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என்றாவது ஒரு நாள் சினிமா டைரக்டராக வருவான் என பெரிதும் நம்பிக்கை வைத்தவர் அவர் தான். சினிமா என்பது கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர், மூழ்கிப் போகிறவர்கள் பலர். நான் முத்தெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு.
இந்த ரூம் பாய் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்த போது கூட நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன். அவரோ எனது மகனை ஹீரோவாக வைத்து படம் எடுங்க, நானே தயாரிக்கிறேன் என்றார். என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். அதே போல் என்மீது நம்பிக்கை வைத்து இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கேன்”.
— ஆண்டவர்









Comments are closed, but trackbacks and pingbacks are open.