“சடக்குன்னு அட்வான்ஸ் கொடுத்து, படக்குன்னு போட்டோ எடுத்து”–‘கருடன்’ விழாவில் சசிகுமார் லீக் பண்ணிய சீக்ரெட்!

0

“சடக்குன்னு அட்வான்ஸ் கொடுத்து, படக்குன்னு போட்டோ எடுத்து”–‘கருடன்’ விழாவில் சசிகுமார் லீக் பண்ணிய சீக்ரெட்! இயக்குநர் ஆர். எஸ். துரை. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.

கருடன்' விழா
கருடன்’ விழா

https://businesstrichy.com/the-royal-mahal/

மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா மே.21-ஆம்தேதி சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசியவர்கள்.

பாடலாசிரியர் சினேகன், “நம்மில் ஒருவன் என்ற உணர்வை ஏற்படுத்தும் சில கதாநாயகர்களில் மண்ணின் மைந்தனான சூரியும் ஒருவர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அவருக்குள் இருந்த இதுபோன்ற ஆளுமை செலுத்தும் நடிப்புத் திறனை கண்டறிந்ததற்காகவும், தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்றிருந்த வரைமுறையை உடைத்தெறிந்து எங்கள் ஊர் திருவிழாவில், கூட்டத்தில் ஒருவராக.. எங்கள் ஊர் ஜனத்திரள்களில் ஒருவராக.. உலா வரும் ஒருவனை.. அவனுக்குள் இருக்கும் நாயக பிம்பத்தை ஹீரோவாக திரையில் செதுக்கியதற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் “.
நடிகர் சமுத்திரக்கனி,

” தம்பி சூரி நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தலைமை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்கு அப்படத்தின் வெளியீடு என்பது பூக்குழிக்குள் இறங்குவது போன்றது. வெளியிலிருந்து பார்க்கும் போது பூக்குழி என்பது பூவின் புதையல் போன்று தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் அது தீமிதி என தெரியவரும். அவருடைய முதல் படத்தில், அவரை அருமையான பூசாரி ஒருவர் அவருக்கு கை பிடித்து அழைத்து வந்தார்.

இந்தப் படத்தில் அவருடைய உழைப்பு அசாதாரணமானது. ஒவ்வொரு நொடியும் படத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். இதனாலேயே அவர் திரைத்துறையில் மிக உயரத்திற்கு செல்வார். அதற்காக மனமார வாழ்த்துகிறேன்”.

நடிகை ரேவதி சர்மா,
” இது எனக்கு இரண்டாவது திரைப்படம். வெற்றிமாறன்- துரை. செந்தில்குமார் -சசிகுமார் -சமுத்திரக்கனி -சூரி போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க இயலாததாக இருந்தது.

நான் நடித்த முதல் திரைப்படமான ‘1947 ஆகஸ்ட் 14’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். என்னுடைய இரண்டாவது படமான ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இதனை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி– அதிதி பாலனுடன் இணைந்து பணியாற்றும்போது அவரை சந்தித்து பேசி இருக்கிறேன். அவரும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.

நடிகர் சசிகுமார்
நடிகர் சசிகுமார்

நடிகர் சசிகுமார்,
“இந்தப் படத்தில் நான் தான் கடைசியாக இணைந்தேன். படத்தில் ஏனைய நட்சத்திரங்களையெல்லாம் தேர்வு செய்த பிறகு கடைசியாக என்னை அழைத்தார்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார் கதையை விவரித்தார். இயக்குநர் கதையை சொல்லி முடித்தவுடன் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று கூட கேட்கவில்லை. அதில் நடிக்க உங்களுக்கு சம்மதமா? என்று கூட கேட்கவில்லை. சடக்குன்னு தயாரிப்பாளர் ஒரு தட்டில் பழங்கள் இனிப்புடன் அட்வான்ஸ் கொடுத்துட்டார்.படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த திரைப்படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொல்லி, படக் குழுவினருடன் போட்டோவும் எடுத்து அதனை வெளியிட்டு விட்டனர். தயாரிப்பாளர் குமார் இந்த படத்தில் நான் நடிப்பேனா, நடிக்க மாட்டேனா..! என்ற சந்தேகத்தோடு இருந்திருக்கிறார். கதை கேட்ட பிறகு மனம் மாறி விடுவேன் என்று பதற்றம் அடைந்தார். உண்மை என்னவென்றால் இந்தப் படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ.. என் நண்பன் சூரிக்காக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முன்பே தீர்மானித்து விட்டேன். சூரியின் வளர்ச்சிக்காக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் சூரியின் நல்ல மனதிற்காகத்தான் வந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் சூரிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த எண்ணம் எனக்கும் இருந்தது. இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. நான் படத்தை பார்த்துவிட்டேன். சூரி இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும்”.

டைரக்டர் துரை செந்தில்குமார்
டைரக்டர் துரை செந்தில்குமார்

இயக்குநர் துரை செந்தில்குமார்,
” இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பணியாற்றும்போது வெற்றிமாறன் எனக்கு சீனியர். நான் கடைசி உதவியாளர். அன்று முதல் இன்று வரை என்னை ஒரு சகோதரராகவே பாவித்து , அனைத்து வித ஆதரவுகளையும் வழங்கி, என் நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னுடன் தொடர்ந்து பயணிப்பவர். அவருக்கு முதலில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் குமார்- தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகு படத்திற்கு தயாரிப்பாளராகியிருக்கிறார். அவரிடம் கதையை சொல்லி முடித்த பிறகு, 55 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்துவிடலாம் என சொன்னேன். அதற்காக ஒரு பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். படத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் குறித்து ஒரு பட்டியலை அவர் என்னிடம் சொன்னார். அதைக் கேட்கும் போது 55 நாட்கள் பட்ஜெட் என்ற விசயத்தை நினைவு படுத்தினேன். அப்போது அவர் படத்தை பிரமாண்டமாக உருவாக்குவோம் என்றார். படத்திற்கு இசை யார்? என்று கேட்டபோது, யுவன் சங்கர் ராஜா என்று சொன்னார். நான் மீண்டும் அவரிடம் 55 நாட்கள் + பட்ஜெட் என்று நினைவுபடுத்தினேன். மீண்டும் அவர் படைப்பை பிரம்மாண்டமாக உருவாக்குவோம் என்றார். படத்தை விளம்பரப் படுத்துவதற்காக தனியாக படப்பிடிப்பு நடத்துவோம் என்றார். அப்போது, ‘சார் ! பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு தானே அதை செய்வார்கள்’ என்று சொன்னபோது, நம்முடைய படமும் பிரம்மாண்டமான படம் தான் என்றார்.

இப்படி படம் முழுவதும் நான் சொன்ன பட்ஜெட்டை விட அவர் ஒரு பட்ஜெட்டை சொன்னார். படத்தின் பணிகள் தொடங்கும் போது இயக்குநரான என்னிடம் ஒரு பட்ஜெட்டை சொல்லிவிட்டு ஆனால் அவர் மனதில் அதைவிட பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறார். அதை நோக்கி என்னையும், படக் குழுவினரையும் சிறிது சிறிதாக அழைத்துச் சென்றார். இப்போது கூட இப்படத்தின்இசை வெளியீட்டு விழாவை ஆன்லைனில் நடத்துகிறோமா? எனக் கேட்ட போது இல்லை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்துகிறோம் என்றார். இதை தொடர்ந்து படத்தின் வெளியீடு இருக்கிறது. அதையும் பிரம்மாண்டமாகவே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.இந்த படத்தில் சொக்கன் கதாபாத்திரம் எப்படியோ… அவனுக்கேற்ற வகையில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம். அந்த கதாபாத்திரத்தின் நீட்சியாகவே அனைத்து சண்டைக் காட்சிகளையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கருடன் பட விழாவில்
கருடன் பட விழாவில்

படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து அவர் படம் பார்க்கும் போது சொன்ன ஒரே விசயம் படத்தில் சண்டைக் காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறாய், என பாராட்டினார். இந்தத் திரைப்படத்தில் வடிவுக்கரசியையும் சேர்த்து ஐந்து நாயகிகள். அனைவரும் இந்த திரைப்படத்தில் அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஏனெனில் கதை அப்படித்தான் அமைந்திருக்கிறது.

சமுத்திரகனிக்கு தொலைபேசி மூலமாக கதை சொன்னேன். கதையைக் கேட்டதும் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அப்போதே எனக்குள் அவரிடம் உள்ள எனர்ஜி கிடைத்து விட்டது. அவர் தண்ணீர் போன்றவர். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை துல்லியமாக உணர்ந்து நடிப்பவர்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது முதல் பாசிட்டிவிட்டி உன்னி முகுந்தன் தான். படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதாபாத்திரத்திற்கு உன்னி முகுந்தனிடம் கேட்கலாம் என தயாரிப்பாளர் ஆலோசனை சொன்னார். அப்போது ‘மாளிகாபுரம்’ எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அவர் பல கதைகளை கேட்டு எதிலும் நடிக்காமல் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் நாங்கள் அவரை சந்தித்தோம். இந்த கதையை கேட்டு முடித்தவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரும் தனுஷின் ‘சீடன்’ படத்திற்கு பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறார். அவருக்குள்ளும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் வேட்டைக்கு செல்லும் புலியின் தாகத்துடன் இருந்தார்.

இந்தப் படத்தின் கதைக்கு இரு தூண்கள். அதில் ஒருவர் சசிகுமார். அவர் ஏற்று நடித்திருக்கும் ஆதி எனும் கதாபாத்திரம் தான் இப்படத்தின் மையப் புள்ளி. இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்ற தயக்கம் எங்களிடமிருந்தது. ஆனால் சூரியின் நட்புக்காக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் உன்னி முகுந்தன் புலி என்றால்.. சசிகுமாரை வேட்டைக்குச் செல்லும் சிங்கம் என்று சொல்லலாம்.

சிங்கத்திற்கும், புலிக்கும் இடையே சிக்காமல் தப்ப வேண்டிய வேட்டைக்காரர் சூரி. படத்தை தொடங்கும் போது வெற்றிமாறன் சூரிக்காக நான் ஒரு அளவுகோலை உருவாக்கி இருக்கிறேன். அதனை நீயும் மீறி விடாதே, சூரியையும் மீற விடாதே என எச்சரித்தார். அதனால் படப்பிடிப்பு முழுவதும் சூரி முழுமையான அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தார். அதனால் படத்தை பார்த்துப் பார்த்து நேர்த்தியாக செதுக்கி இருக்கிறோம்.

சில படங்களில் எல்லா கதாபாத்திரங்களின் கோணத்திலிருந்தும் கதை அமையும் என எதிர்பார்ப்போம். அதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தும் கதை பயணிக்கும். அது போன்று கதை அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களில் ஒவ்வொருவருடைய
கோணங்களிலிருந்தும் இந்த கதையை பார்க்கலாம். இதனை அந்த வகையில் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம் என நினைக்கிறேன். மூன்றாண்டு இடைவெளிகளில் நான் கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும் இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

கருடன்' விழா இயக்குநர் வெற்றிமாறன்
கருடன்’ விழா இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்,
“விடுதலை படத்திற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை தான் சூரியை சந்தித்து பேசி இருக்கிறேன். விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும் போது தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி ‘கருடன்’ என்று ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார், செந்தில் தான் இயக்கவிருக்கிறார் என என்னிடம் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

செந்தில் என்னை சந்தித்து இப்படி ஒரு கதாபாத்திரம்… இப்படி ஒரு நடிகர்… என இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது கதை விவாதத்தின் போது ஆலோசனை சொல்வது போல் இதனை இப்படி செய்து கொள்ளலாம்.. அதனை அப்படி செய்து கொள்ளலாம்.. என்று நான் சொன்னேன்.

அதன் பிறகு ஆதி கதாபாத்திரத்திற்கு சசிகுமாரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வியந்தேன். அவர் ஒப்புக் கொள்வாரா..! என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இந்த கதையில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்படி சொல்வதற்கும், அதை செய்வதற்கும் ஒரு மனசு வேண்டும். இதற்காக நான் சசிக்குமாரை மனதார பாராட்டுகிறேன்.

படம் பார்த்துவிட்டேன். படத்தில் சசிகுமாருக்கு அழுத்தமான வேடம். அது அவருக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல அனைவரும் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் மூலம் கதைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்திருக்கிறது. இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்திய சமுத்திரக்கனிக்கும் என்னுடைய பாராட்டுக்கள். படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் குமார் படைப்பின் மீது அக்கறை கொண்ட தயாரிப்பாளர் என்று மட்டும் தெரிய வருகிறது. அவருக்கும் இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசுகையில், ” இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை தவற விட்டிருந்தால்… என்னுடைய செல்லப் பிள்ளைகளை மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. சூரி போன்ற திறமையான நடிகரை கண்டறிந்து வழங்கியதற்காக இயக்குநர் வெற்றி மாறனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் தாமதமாகத்தான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் இரவு தான் நான் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டேன். பிரபஞ்சம் கொடுக்கும் அதிர்ஷ்டத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக சென்னையிலிருந்து காரில் கிளம்பி இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன்.

இந்தத் திரைப்படத்தில் உன்னி முகுந்தனின் அப்பத்தாவாக நடித்திருக்கிறேன். அவருக்கு நண்பர் சூரி. இவர்கள் இருவருக்கும் நண்பர் சசிகுமார்.

சமீப காலங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய திரைப்படம் இது. ஒரு திரைப்படத்தில் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியாகவும் பணியாற்றும்போது எங்களை அறியாமல் எங்களுடைய ஆசிகள் இந்த படத்திற்கு உண்டு. இவை ரசிகர்களிடமும் பரவி படம் வெற்றி அடையும்”.

கருடன் பட விழாவில்
கருடன் பட விழாவில்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், ”

இந்த நிகழ்வில் வடிவுக்கரசி அவர்களின் பேச்சு தான் பிரமாதம். அவருடைய பேச்சில் ஒரு இயக்குநர் படப்பிடிப்பு தளத்தை எவ்வளவு உற்சாகமாக .. சௌகரியமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

வெற்றிமாறன் செந்தில்குமாரைப் பற்றிச் சொல்லும் போது சக மனிதர்களை நேசிக்கும் மிக இனிமையான மனிதர். நல்லவர் வல்லவர் எனக் குறிப்பிட்டார். இதனால் விரைவில் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

யாராவது ஒருவர் வெற்றி பெற்று விட்டால் அவரது தொடக்க காலகட்டத்தில் தான் முன்னேறுவதற்கு ஊக்கமளிப்பார்கள். அதன் பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் சூரி நடிகராக அறிமுகமாகி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய சாதனை தான்.நானும், சூரியும் ஒரு சில படங்களில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கிறோம்.
விடுதலை படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் பல உயரங்களை தொடுவார். அவருடைய அடுத்தடுத்த படங்களும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூரியைப் பார்த்து மிகவும் நான் ரசிக்கிறேன். நம் மண்ணுக்கேற்ற முகம். கருப்பான அழகன். மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

சிவகார்த்திகேயன்,
” இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ ஆகிய படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு புன்னகையுடன் தான் வேலை செய்வார். யாரையாவது திட்ட வேண்டும் என்றாலும் கூட சிரித்துக் கொண்டே தான் திட்டுவார். அவரின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் கருடன் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அவர் என்னை சந்தித்து முதல் முதலாக கதையை சொன்ன போது.. நான் உதவி இயக்குநராக பணியாற்றியதால் … என்னிடமிருந்த சில கதைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன். வேறு யாரிடமும் கதையை சொல்லவில்லை. ஏனெனில் அவருடன் பேசும்போது ஒரு சௌகரியமான சூழலை ஏற்படுத்தி தருவார். வடிவுக்கரசி அம்மா குறிப்பிட்டது போல் எப்போதும் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் செந்தில் குமார் கவனமாக இருப்பார். அந்த விசயத்தில் அவரை யாராலும் வெல்ல முடியாது.

இந்த கருடனின் தயாரிப்பாளர் குமார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். அப்போதே அவர் படப்பிடிப்பு பணிகள் எதிலும் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். சிக்கனமாக செலவு செய்வார். தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்ற போதே அவர் சிக்கனமாக செலவு செய்தார் என்றால்.. இப்போது அவரே தயாரிப்பாளர் என்பதால், இந்த படத்தையும் நல்ல முறையில் தயாரித்திருப்பார்.. இந்தப் படம் வெற்றி அடைந்து மேலும் அவர் படங்களை தயாரிக்க வேண்டும்.

சூரி – உண்மையிலேயே எனக்கு அண்ணன் தான். அவரை எப்போதும் ஆத்மார்த்தமாக அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை எப்போதும் ஆத்மார்த்தமாக தம்பி என்று தான் அழைப்பார். இது சினிமாவை கடந்த நட்பு.

சூரியை முதன்முதலாக கதையின் நாயகனாக நீங்கள் நடிக்கலாம் என்று சொல்லி, அதற்காக அவரிடம் கதையும் சொன்னது நான்தான். ‘சீம ராஜா’ ஷூட்டிங் கில் நீங்கள் ஏன் கதையின் நாயகனாக நடிக்க கூடாது? என கேட்டேன். அப்போது அதற்கு சிரித்துக் கொண்டே மறுப்பு தெரிவித்தார்.

அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து ‘தம்பி! வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன் என்றார். உடனே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு “உங்களது திரையுலக பயணத்திலேயே பெரிய திருப்புமுனை ஏற்பட்டுவிடும். பேசாமல் நடித்து விடுங்கள்” என்று சொன்னேன். அப்போது படத்தின் கதை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் சூரியின் நடிப்பு திறமை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவருடன் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன்.

காமெடியாக நடிக்கும் ஒருவரால் நிச்சயமாக உணர்வுப்பூர்வமாக நடிக்க முடியும். இதனால் காமெடியாக நடிக்கும் நடிகர்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதற்கு சிறந்த உதாரணம் சூரி அண்ணன்.

வெற்றிமாறன் அண்ணன் சூரிக்கு ‘விடுதலை’ படத்தின் மூலம் புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார். நாங்கள் தயாரித்திருக்கும் கொட்டுக் காளி படத்தில், சிறிதளவு கூட குறையாமல் அதற்கு ஒரு படி மேலே தான் சூரியை பயன்படுத்தி இருக்கிறோம் என நான் நம்புகிறேன்.

நடிகர் சூரி, ”இந்த தம்பிக்காக வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், அனைத்து அண்ணன்களுக்கும், தம்பிகளுக்கும் நன்றி. இதுபோன்றதொரு மேடை மீண்டும் அமையுமா? என தெரியாது எனக்கு அமைந்திருக்கிறது. இதுவே பதட்டமாக இருக்கிறது. இந்த மேடை இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன்.

விடுதலைக்கு முன் – விடுதலைக்கு பின் என இந்த சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த நேரத்திலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று உரிமையுடன் நிற்கிறேன் என்றால்… பெருமிதத்துடன் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால்.. அதற்குக் காரணம் வெற்றி அண்ணன் தான். விடுதலை படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களால் தான் இந்த கருடன் படமே உருவானது. அதுதான் உண்மை.

இந்தியாவில் எங்கு சென்று டீ குடித்தாலும் அங்கு கிடைக்கும் பேப்பரில் சேது மாமாவின் போட்டோ இருக்கிறது. ரூபாய் நோட்டில் எத்தனை மொழி இருக்கிறதோ.. அத்தனை மொழிகளிலும் சேது மாமா நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

கதையெல்லாம் எழுதி முடித்த பிறகு இந்த வேடத்திற்கு சசிகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் சொன்னவுடன் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அவரிடம் இதை எப்படி கேட்பது என்று தான் தயக்கம் இருந்தது. அப்போது நான் தான் அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னேன். எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சசிகுமார் அண்ணனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி சிவகார்த்திகேயன், சினிமாவை கடந்து என்னுடைய சிறந்த நண்பர். என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயனை பிடிக்கும். விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் என்னுடைய மனைவியிடமும் அதன் பிறகு தம்பி சிவகார்த்திகேயனிடம் தான் பகிர்ந்து கொண்டேன். கேட்டவுடன் தம்பி மிகவும் சந்தோசமடைந்தார். இந்த வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நடித்த பிறகு உங்களுடைய தோற்றமே மாறிவிடும் என்று நம்பிக்கை கொடுத்தார். அத்துடன் நிற்காமல் ‘கொட்டுக்காளி’ படத்தைக் கொடுத்து நீங்கள் கதையின் நாயகனாகவே தொடருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

கொட்டுக்காளி படத்தைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனிடம் சொன்னேன். அவர்தான் வினோத் அற்புதமான இயக்குநர். இந்தியாவில் தலை சிறந்த இயக்குநராக வருவார். அவரைத் தவற விட்டு விடாதே என்றார்.

விடுதலை படத்திற்குப் பிறகு வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தால் அவர்கள் எப்படி இயக்குவார்கள் என்பது எனக்கு நிச்சயமாக தெரியாது. ஆனால் நான்கு படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமாரின் நேர்த்தியான உழைப்பு எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் “.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.