தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்த சொல்லாடல்களில் ஒன்று, “வரலாறு முக்கியம் அமைச்சரே”. அதுபோல, சாத்தான்குளம் வழக்கில், அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை விளக்கும், 24.06.2020 தேதியிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு எண்: 099 முக்கிய ஆவணமாகிவிட்டது.
அந்த அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு பணியாக சாத்தான்குளம் கடைவீதியில் கடந்த 19.06.2020 அன்று ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜெயராஜ் (வயது 58) என்பவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து அவரது கைப்பேசி கடையை திறந்து வைத்திருக்க, கடையின் முன்பு ஜெயராஜ், அவரது மகன் திரு.பென்னிக்ஸ் (வயது 31) மற்றும் சிலர் கூட்டமாக நின்றிருந்துள்ளனர். ரோந்து காவலர்கள் அவர்களை கடையை மூடிவிட்டு, கலைந்து செல்லுமாறு கூறியபோது, மற்றவர்கள் உடனே கலைந்து சென்றுவிடட்டனர். ஜெயராஜ் மற்றும் திரு.பென்னிக்ஸ் ஆகியோர் கடையை மூட மறுத்துவிட்டதால், இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் திரு.பென்னிக்ஸ் ஆகியோர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சாத்தான்குளம் காவல் துறையினர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை 19.06.2020 அன்று இரவு கைது செய்து, 20.06.2020 அன்று அதிகாலை சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில், 22.06.2020 அன்று இரவு 7.35 மணிக்கு சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் பென்னிக்சை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், 23.06.2020 அன்று அதிகாலை சிறையில் இருந்த பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறை காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சையில் இருந்த ஜெயராஜ் அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1 அவர்களின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
… இதற்கிடையே, திரு.ஜெயராஜின் மனைவி திருமதி. செல்வராணி தனது கணவர் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக, அவர்களது பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு ஒன்றை 23.06.2020 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருநெல்வேலி அரசு மருத்துவமனை முதல்வர், உயிரிழந்த நபர்களின் பிரேத பரிசோதனையை, மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் நடத்தவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து இன்று (ஜூன் 24) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, தென்மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் மற்றும் தலைமைக் காவலர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்த திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார், அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி.
தொடர்ந்து பேசுவோம்.
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.