பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை – வரவேற்பும் பாராட்டும் ! ஐபெட்டோ அண்ணாமலை
ஏப்ரல் 24, 25ல் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அளித்த விவாதங்களுக்குப் பதிலும் கொள்கை விளக்கக் குறிப்பு 172 பக்கம் தனித்தமிழில் தொகுத்தளித்து ஆற்றொழுக்கான தாய்த் தமிழில் சட்டப் பேரவையில் ஆற்றிய உரையும் மகிழக் கூடியதாக அமைந்தது!
முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசியுள்ளார்:
பள்ளிகளை மூடுகின்ற அலுவலர்களின் அநீதி எண்ணத்திற்கு மாறாக புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்குகிற அறிவிப்பு வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.
பத்தாண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆட்சியில் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பாகவும், தனித்தனியாகவும் முந்தைய ஆட்சி காலத்திலும் போராடிக் கொண்டிருந்தார்கள்.
மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அரசிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதார்த்தமான உண்மையாகும். காரணம், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆதரித்துப் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியமனத் தேர்வை உடன் இரத்து செய்து விடுவோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை உடன் அமல்படுத்துவோம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு உடன் தீர்வு காண்போம். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவோம். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்கள்.

சாட்சியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசிய காணொலியினை போட்டு, போட்டு கேட்கிறார்கள். அனைவரையும் கேட்கச் செய்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் கால கல்வி கட்டமைப்பு விதிகளை புறந்தள்ளி பெருத்த பண இழப்பினையும் ஏற்படுத்தி வருகிறார்கள்!
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லாத பதவி என அறிவித்து தேர்வு நிலைக்குத் தர ஊதியம் ரூ.5400 என தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிதித்துறை முதன்மைச் செயலாளர்கள் இருவர் காலத்தில் அரசாணை வெளியிட்டு தெளிவுரை வழங்கி அமல்படுத்தப்பட்டு வந்தது. 80 விழுக்காடு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணப்பயன் பெற்று பணிநிறைவு பெற்றுவிட்டார்கள்.
தற்போது மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை துணைச் செயலாளர் ஒருவரின் கடிதத்தினை மேற்கோள் காட்டி 10 லட்ச ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டுமென திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. தந்தை கலைஞர் கொடுத்தார். மகன் முதலமைச்சர் ஆன காலத்தில் அதிகாரிகள் பறிக்கிறார்கள்!
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் முன்னுரிமைப் பட்டியல் அனைத்து ஆட்சிக் காலத்திலும் பேணப்பட்டு வந்ததை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பதவி ஏற்றதற்குப் பின்னர் மாநில அளவில் சீனியாரிட்டிப் பட்டியலை அமல்படுத்தும் அரசாணை 243ஐ வெளியிட்டு 80 விழுக்காடு பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வினை பாதிக்கச் செய்தார்கள்.
திரும்பப் பெற வலியுறுத்தி போராடி வருகிறோம். பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் மீண்டும் அரசாணையினை பரிசீலிக்கும் முடிவில் உள்ளோம் என்றுகூட தெரிவிக்கவில்லை.

எதிர்க்கட்சிக்காரர்கள் ஏதாவது கேட்டால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நாங்கள் செய்யாமல் வேறு யார் செய்யப் போகிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் இதயத்தைத் தொடும் வார்த்தைகளால் எங்களை தொடுகிறீர்கள்.
கங்காரு தன் குட்டியை வயிற்றில் வைத்துக் கொண்டு பாதுகாத்து வருவது போல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இதயத்தில் வைத்து போற்றி பாதுகாத்து வருவதாக பேசி வருகிறார்கள். நடிகர் ஒருவரின் காமெடி போல்…
நாங்கள் செய்தாலும், எதையும் செய்யாவிட்டாலும், அவர்கள் எங்களை விட்டு போகமாட்டார்கள். ‘எங்களை இன்னமும் மிகவும் நல்லவங்க என்று தானே பாராட்டி வருகிறார்கள்’ என்பது போல் அரசின் செயல்பாடு உள்ளது.
ஏப்ரல் 30க்குள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 110 விதியின் கீழ் தீர்வு வருமா? என்று எதிர்பார்க்கிறோம்.
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் முத்தமிழிர் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் தயக்கமின்றி அமைத்திடுவோம் என்ற அறிவிப்பு இதயங்களை குளிரச் செய்கிறது.
*சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்*
அரசுப் பள்ளிகளில் 6 – 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் ‘திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்’ ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.
கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் “கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100ரூ தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.
ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும். ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.
இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில், 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
வரவேற்க வேண்டிய அறிவிப்புகள்… ஆனால் ஆசிரிய இயக்கங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படக்கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது. இன்னமும் நம்பிக்கைத் தளராமல் ஆட்சியின் மீது அக்கறை கொண்டுள்ளோம் என ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை அவா்கள் தொிவித்துள்ளார்.
தமிழக ஆசிரியர் கூட்டணி