பூமியின் நட்சத்திரங்களை வரவேற்கத் காத்திருக்கும் நான்
நாளை (ஜூன் 2) இந்தக் கல்வி ஆண்டு, முதல் நாள் பள்ளி திறக்க இருக்கிறது. மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
நாளைய தினத்தில் என் குழந்தைகளை எப்படி எதிர்கொள்வது ! ஒவ்வொரு குழந்தையும் தன்னை அடுத்த வகுப்புக்கு செல்ல எத்தனை ஆர்வமாகத் தயாரிப்பு செய்து வருவார்கள்! தங்கள் நண்பர்களுக்காக எத்தனை கற்பனைகளுடன் வருவார்கள்! ஆசிரியர்களைக் கண்டால் எப்படி ஓடி வருவார்கள்! அவர்களது விடுமுறைக் கதைகளைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் வளர்ந்து இருப்பார்கள் உடலாலும் உள்ளத்தாலும். பூமியின் நட்சத்திரங்கள் அவர்கள் ❤
(மாணவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

அடிக்கடி பள்ளிக்கு வராத சிறப்பு கவனம் தேவைப்படும் ஆறாம் வகுப்புக் குழந்தை சுரேஷ் நாளைக்கு முதல் நாள் பள்ளிக்கு வருவானா ?
துணையை இழந்து தவிக்கும் அந்த அம்மா நாளை ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரும் தனது மகன் கமலேஷை நம்பிக்கையுடன் பள்ளிக்கு அனுப்பி வைப்பார் தானே. இந்த ஒரு மாதமும் அப்பா இல்லாத அவன் அம்மாவை என்ன பாடு படுத்தினானோ!
எட்டாம் வகுப்பு சுட்டிப்பெண் வானதி இந்த வருடமாவது ஒன்பதாம் வகுப்பில் எந்த ஆசிரியரிடமிருந்தும் திட்டு வாங்கக் கூடாது என்று இன்று காலையில் இருந்து யோசித்துக் கொண்டு இருக்கிறது இந்த மனசு.
பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற குழந்தை கணக்குப் பாடமான எனது பாடத்தில் 90 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். அவரை புத்தகம் கொடுத்து வாழ்த்த வேண்டும்.
எப்போதும் எனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து உற்சாகமாக ரியாக்ட் செய்யும் சுஜிதா நாளை என்னவெல்லாம் கூறப் போகிறார்.
விடுமுறையிலேயே சில குழந்தைகளிடம் இருந்து அலைபேசி அழைப்புகள். டீச்சர், இந்த வருஷமும் நீங்க தானே எங்களுக்கு கிளாஸ் டீச்சர்? என்கிறார் உரையாடலின் முடிவில் கவிதா.
டீச்சர்…. இந்த வருஷம் யாரை க்ளாஸ் லீடராகப் போடலாம் என்கிறார் யுவஸ்ரீ. இப்படி குழந்தைகளுக்குள் ஏராளமான கேள்விகள். கடந்த ஆண்டு இறுதியிலேயே நீங்க தான் அடுத்த வருஷமும் எங்களுக்கு வரணும்னு சொன்ன குழந்தைகள் ஏராளம்.
களத்தில் நிற்கும் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு சவால்கள் நிறைந்த நிகழ்காலமாக இருந்தாலும் ஒற்றை நம்பிக்கை எங்கள் குழந்தைகளே. அவர்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் தான் மிகவும் பிடித்த விடயங்களாக இருந்து வருகிறது. அந்தப் பேச்சும் எழுத்தும் தான் எனக்கு இலக்கியம் என்று சில நூல்கள் சொல்லிக் கொடுத்துள்ளன.
அந்த வரிசையில்…
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய இலக்கியமான குழந்தைகள் வாழ்க ஷ. அமனஷ்வீலி புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு வாசித்தேன். எத்தனைப் புத்தகங்கள் இருந்தாலும்கூட குழந்தைகள் குறித்தும் , கல்வி குறித்தும் கண்களில்படும் புத்தகங்கள் என்றால் கூடுதல் ஆர்வத்துடன் படிக்க முயற்சி செய்வது எனது வழக்கமாகிவிட்டது. அந்தப் புத்தகத்தை வாசிக்க வாசிக்க எனக்கு நானே அதை எழுதியது போல உணர்வு. ஆம் நான் எனது பள்ளிக் குழந்தைகளுடன் எப்படி எல்லாம் உறவாடுவேனோ அதே போல இருந்தது. நான் எப்போதும் அவர்களுடனான உரையாடல்களை இங்கு கூட அடிக்கடி பதிவு செய்வேன். அதோ போல உரையாடல்கள் நிறைந்தது நான் இந்தப் புத்தகம். உரையாடல்களின் வழியாக குழந்தைகளின் நடத்தைகள் வழியாக ஒரு இலக்கியம் படைத்துள்ளார் நூலாசிரியர்.
இதோ நாளை முதல், நானும் புதிய இலக்கியம் படைக்கத் தயாராகி விட்டேன் எனது குழந்தைகளுடன்❤
— உமா.