கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!
கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளம் மேலத்தெருவைச் சேரந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் மனைவி வெள்ளத்துரைச்சி (28). இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 9ம்தேதி இரவு குமரரெட்டியாபுரத்திலிருந்து கட்டாரங்குளத்திற்கு ஆட்டோவில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவர் கோவில்பட்டி வானரமுட்டி, வடக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் சண்முகராஜ் (33) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சண்முகராஜ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இக்கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்த தனிப்படையினர் சண்முகராஜிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல் வெளியாகின. அதாவது வெள்ளைத்துரைச்சிக்கும், சண்முகராஜுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. குமரெட்டியாபுரத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 9ம்தேதி இரவு வந்த வெள்ளத்துரைச்சி அங்கிருந்து கட்டாரங்குளத்திற்கு செல்ல பஸ் இல்லாததால் தன்னை ஆட்டோவில் ஊருக்கு கொண்டு விடும்படி சண்முகராஜுடம் கூறியுள்ளார். அதன்படி குமரெட்டியாபுரத்திற்கு அவரை அழைத்துச் சென்ற சண்முகராஜ் வழியில் ஒரு காட்டுப்பகுதியில் கண்மாய் அருகே அவருடன் உல்லாசமாக இருக்க அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், அவர்களிடம் தகராறு செய்து வெள்ளத்துரைச்சியையும், சண்முகராஜையும் அரிவாளால் வெட்டினர். இதில் வெள்ளத்துரைச்சி இறந்து விட்டார்.
ஆனாலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. மேலும் சண்முகராஜ் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் வெள்ளத்துரைச்சியின் கொலை குறித்து போலீசார் சண்முகராஜிடமும், பெண்ணின் உறவினர்களிடமும் விசாரணை நடத்திய போதிலும் எந்த துப்பும் துலங்கவில்லை. இதுவரை பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தப் படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், சிசிடிவி கேமரா, செல்போன் டவர் அழைப்புகள் என பல்வேறு முயற்சிகளிலும் தோல்வியே மிஞ்சியது. சுமார் 60க்கும் மேற்பட்ட புகைப்படங்களை சண்முகராஜிடம் காட்டியும் அவர் யாரையும் சுட்டிக் காட்டவில்லை.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்படாத கொலைகளை மட்டும் துப்புத் துலக்கும் ஒரு டீமை இந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் களம் இறக்கினார். கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் ஏட்டுகள் கழுகாசலமூர்த்தி, கார்த்திக்ராஜா, ரமேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா, செல்போன் டவர் அழைப்புகளை ஆய்வு செய்து வானரமுட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் (29), அதேபகுதி சின்னப்பா நகரைச் சேர்ந்த அவரது சகோதரர் ராஜா (32), கோவில்பட்டி இந்திரா நகர் வெள்ளைசாமி மகன் சங்கிலிபாண்டி (55), கயத்தார் வடக்கு கோனார்கோட்டை தெற்கு தெரு வேல்பாண்டி மகன் சங்கிலிபாண்டி (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சண்முகராஜ். ஊருக்கு வந்ததும் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். மேலும் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து ஆட்டோ சங்க தலைவராகவும் ஆனார். இது அங்குள்ள மற்ற ஆட்டோ டிரைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராவதற்கு பணமும் கேட்டுள்ளார். இவை தவிர கணேசன் உள்ளிட்டோரை ஆட்டோ சங்க உறுப்பினராக சேர்க்கவும் மறுத்து விட்டார். நேற்று வந்தவன் பண பலத்தால் ஆட்டோ சங்கத் தலைவராகி விட்டானே என்று அவர் மீது வெறுப்பு அடைந்ததோடு, அவரை தீர்த்துக் கட்டவும் திட்டம் தீட்டினர்.

அதன்படி கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 9ம்தேதி வெள்ளத்துரைச்சியுடன் ஆட்டோவில் வந்த சண்முகராஜை கணேசன் உள்ளிட்ட 4 பேர் வழிமறித்து அரிவாளாலும், கம்பாலும் சரமாரியாக தாக்கினர். இதை வெள்ளத்துரைச்சி தடுத்தார். இருப்பினும் அவரை தள்ளி விட்டு விட்டு சரமாரியாக தாக்கியதில் சண்முகராஜ் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்த கணேசன் உள்ளிட்ட 4 பேரும், கொலைக்கு சாட்சியாக வெள்ளத்துரைச்சி இருக்கிறாரே என்று நினைத்து, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கணேசன் உள்ளிட்ட 4 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் 4 பேரை கைது செய்த தனிப்படை போலீஸாரை நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேரில் வந்து பாராட்டினார். பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாலாட்டின்புதூர் அருகே நடந்த வெள்ளத்துரைச்சி கொலை வழக்கில் தனிப்படை 8 மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு 4 பேரை கைது செய்துள்ளனர். கொலை வழக்கில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாத வழக்குகளில் தற்போது தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தப்பலாம் என நினைத்தால் அது நடக்காது. இதனால் தான் மாவட்டத்தில் 35 சதவீதம் கொலை உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளன. அதே போல், துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால் கொலை குற்றவாளிகள் ஏராளமானோர் சிறையில் உள்ளனர். இதனால் மற்றொரு கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடு அவர்கள் யோசிப்பார்கள். காவல்துறையின் இந்த நடவடிக்கைகளால் தான் தூத்துக்குடி மாவட்டம் அமைதியாக உள்ளது.
நாலாட்டின்புதூர் காவல் நிலையம் ஆய்வாளர் நிலையமாக விரைவில் மாற்றப்படும். அதற்குரிய வேலைகள் நடந்து வருகின்றன. புதிதாக குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதிதாக குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள், இளைஞர்கள் மீதும் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளோம். கோவில்பட்டி பகுதியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா வழக்கில் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார்.