ரஜினியுடன் மோத விரும்பாத சூர்யா! –‘கங்குவா’ ரிலீஸ் தேதி மாற்றம் !
ரஜினியுடன் மோத விரும்பாத சூர்யா! –‘கங்குவா’ ரிலீஸ் தேதி மாற்றம் ! 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் பிரேம்குமார் டைரக்ஷனில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிக்கும் ‘ மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை கொடிசியா அரங்கத்தில் ஆக. 31 சனிக்கிழமை மாலை நடந்தது.
இதில் நடிகர் சூர்யா பேசுகையில், “நேற்று இரவு இந்தப் படத்தை நான் பார்த்தேன். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்து உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் அனவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன். ஜெய்பீம் இயக்குநர் மூலம் தான் இப்படம் என்னிடம் வந்தது.
தொப்புள் கொடி உறவு, எங்களுடைய வேர், எங்களின் அடையாளம் கோவை தான். நடிக்க வந்து 27 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு கோவையில் விழா எடுப்பது ரொம்ப மகிழ்ச்சி. இரத்த சொந்தங்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்பு மிக பரிசுத்தமானது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தியை கட்டிப் பிடித்த படம் இது.
அரவிந்த் சுவாமி, கார்த்தி இருவருக்கும் உள்ள பழக்கம் மிகவும் பொறாமைபடும் அளவிற்கு உள்ளது. என் மகன் ஜோதிகா பெயரைத் தான், பெயருக்கு பின்னால் எழுதுவான். அதேபோல் தான் இசையமைப்பாளர் கோவிந்த் தன்னுடைய அம்மா வசந்தா பெயரை பின்னால் வைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் படம் தான் மெய்யழகன். 96 படம் மீது பெரிய மரியாதை எனக்கு உள்ளது. படத்தை படமாக மட்டும் பாருங்கள்.
வசூல் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்க இல்லாமல் நான் எதும் செய்ய முடியாது. உங்களுக்கு தலை வணங்குகிறேன். கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது எனக்குத் தெரியும். இரண்டரை வருடமாக ஆயிரம் பேருக்கு மேல் உழைக்கும் படம் என்றால், அது கங்குவா தான்.
அக்டோபர் 10 ம் தேதி வேட்டையன் படம் வருகிறது. ரஜினி சாருக்கு வழிவிடுவோம். அவர் மூத்தவர், சினிமாவின் அடையாளம். 50 வருடங்களாக நடித்து வருகிறார். அவர் படம் வருவது தான் சரி. கங்குவா ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்து கொள்வீர்கள். கங்குவா படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். வெறுப்பை காண்பிக்க வேண்டாம். அன்பை மட்டும் பகிர்வோம். கங்குவா படம் வரும்போது நின்று பேசும்” என்றார்.