“வாசகர் கடித கருத்துப் போராளியின் மரண சாசனம்”

0

 

“வாசகர் கடித கருத்துப் போராளியின்
மரண சாசனம்”

தோழர் தெ. சுந்தர மகாலிங்கம்
தோழர் தெ. சுந்தர மகாலிங்கம்

 

மரணத்தின் பின்னும் வாழும் மாமனிதர் – தமிழ்நாடான் தனது முகநூல் பதிவில்
——————————————————–

- Advertisement -

உடல் தானம் மூலம், தன் மரணத்திற்குப் பின்னரும் உயிர்ப்போடு வாழத்தொடங்கி இருக்கிறார் முற்போக்கு எழுத்தாளரான வத்திராயிருப்பைச் சேர்ந்த தெ.சுந்தர மகாலிங்கம்.
நக்கீரன் இதழின் துணை ஆசிரியரும் கவிஞருமான இனிய நண்பர் வத்திராயிருப்பு தெ.சு.கெளதமன் அவர்களின் தந்தையார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திலீபன் கோபிநாத், என்ற மகன்களும் உள்ளனர்.
.
ஆசிரியராய்ப் பணியாற்றிய சுந்தர மகாலிங்கம், ஓய்வுக்குப் பின்னரும் தன் வாழ்க்கையைப் பொதுவுடமையாக்கிக் கொண்டு, 82 வயது வரை, ஓய்வின்றித் தன்னை மக்களுக்காகக் கரைத்துக்கொண்டிருக்கிறார்.

‘துரோகம் வெட்கமறியாது’, ’காலத்தை வாசித்தல்” ஆகிய கட்டுரைத் தொகுப்புகளை எழுதியவர் இவர். கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல்களைத் தமிழில் மொழிபெயர்த்து ’ஆண்டுகள் பல கடந்தாலும்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளை எழுதிவந்ததோடு, இலக்கிய இதழ்களின் மீதும் தீராத் தாகம் கொண்டு தொடர்ந்து வாசித்து வந்தவராவார்.

அக்கம்பக்கம் ஊர்களில் விழிப்புணர்வுப் பாசறைகளையும் நடத்திவந்த சுந்தர மகாலிக்கம், த.மு.எ.க.ச. பொறுப்பாளராகவும் செயலாற்றி வந்தார்.

தோழர் தெ. சுந்தர மகாலிங்கம் உடல்
தோழர் தெ. சுந்தர மகாலிங்கம் உடல்

.
“நான் இறந்தபிறகு எனது உடலின் மீது எத்தகைய சாதி, மத அடையாளங்களையும் இடக்கூடாது. எவ்விதமான சடங்குகளையும் செய்யக்கூடாது” என்று தனது குடும்பத்தினரிடம் சொல்லி வந்த அவர், கடந்த 2014 ஜனவரி 27-ஆம் தேதியே, முத்து முத்தான கையெழுத்தில் தனது மரண சாசனத்தை இப்படி எழுதியிருக்கிறார்.
*
1. என் உடலை விட்டு உயிர் பிரிந்த செய்தி அறிந்த சில நொடிகளிலே என் கண்ணை தானமாக வழங்கும் நடவடிக்கையை மக்கள் மருத்துவர் பால்சாமி, சதாசிவம் ஆகியோர் முன்னின்று செய்யவேண்டும். இதற்கு என் துணைவி அல்லது பிள்ளைகள் என யாரேனும் ஒருவர் ஒப்புதல் கையெழுத்திடலாம். ஒருவேளை, அவர்கள் ஒப்புதலளிக்க மறுத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

2. நான் மரணம் அடைந்ததும் எனது உயிரற்ற உடலை மதுரை மருத்துவக்கல்லூரி மெய்யியல் கழகத்திற்கு தானமாக வழங்கும் முறையை மருத்துவர் பால்சாமி, என் இரண்டாவது மகன் கோபிநாத், மூன்றாவது மகன் கவுதமன், வழக்கறிஞர் பால்ராஜ், இதழாசிரியர் குறிஞ்சி கபிலன் ஆகியோர் முன்னின்று செய்யவேண்டும்.

3. எனது உயிரற்ற உடலை, மெய்யியல் கழக ஆய்வுக்குக் கொடுப்பதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால் வத்திராயிருப்பு சுடுகாட்டில் எனது உடலை எரிப்பதற்குரிய பணியை மேற்சொன்னவர்கள் இணைந்து செய்யவேண்டும்.

4. நான் இறந்தபிறகு எனது உடலின் மீது எத்தகைய சாதி, மத அடையாளங்களையும் இடக்கூடாது. நிறை மரைக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எவ்விதமான சடங்குகளையும் செய்யக்கூடாது. சவம் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சாம்பிராணி, பத்தி பயன்படுத்தலாம்.

5. சவத்தை வீட்டிலிருந்து எடுக்கும் முன் என் வீட்டு ஆண்களும், பெண்களும் வீட்டின் முன் உள்ள குழாயில் குளிக்கலாம். ஆனால் அவர்களுக்கு எவ்வித மதச்சடங்கும் செய்யக்கூடாது. நீர்மாலை எடுக்கக்கூடாது.

6. என் பிள்ளைகள், பேரன்மார்கள் யாருக்கும் மொட்டை போடக்கூடாது.

7. சடலத்தை வண்டியில் எடுத்துச் செல்லும்போது மேளதாளம் ஆட்டம் பாட்டம் கூடாது. வாய்ப்பிருந்தால் ஒலிப்பெருக்கியின் மூலம் பெரியாரின் உரையை ஒலிபரப்பலாம்.

8. சடலத்தை எரிப்பதற்கு முன் மதச் சடங்குகள் செய்யக்கூடாது.

9. மறுநாள் சுடுகாட்டுக்குச்சென்று எந்த மதச்சடங்கும் செய்யக்கூடாது.

4 bismi svs

10. எனது மரண சாசனத்தின் அசல் பிரதிகள் மருத்துவர் பால்சாமி மற்றும் இதழாசிரியர் குறிஞ்சி கபிலன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனது வாழ்நாள் முடிய என்னோடு துணை நின்ற அனைத்து இயக்கத்தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி

– இப்படி நிதானமாகவும் அழுத்தமாகவும் எழுதிக் கையொப்பமிட்டார்.
.
அவர் ஏதோ இதை விரக்தியில் எழுதியதாகக் கருதவேண்டால். மரணம் எப்போது வந்தாலும், என் உடலை இப்படித்தான் கையாளவேண்டும் என்று தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து எழுதியிருந்தார்.
அப்படி எழுதியவர், அதன் பிறகும் 8 ஆண்டுகள் தனது முதுமையை வென்றபடியே தனது பணியைத் தொடர்ந்துகொண்டு இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் துணைவியார் மறைந்த துயரம் அவரை கடுமையாகப் பாதிக்க, அது அவரது உடல்நிலையையும் பாதித்தது. சில நாள் படுக்கையில் இருந்தவர், கடந்த 30 ஆம் தேதி அதிகாலை மரணத்தைத் தழுவினார்.
.
அவரது மரணம், அந்தப்பகுதியில் துயரச் சூறாவளியை ஏற்படுத்தியது. அவர் மீது பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்த குடும்பத்தினரும் நண்பர்களும், அவர் வீட்டு முகப்பிலேயே இரங்கல் கூட்டத்தை நடத்திக் கண்ணீர் அஞ்சலி செய்தனர்.

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையின் துணைச்செயலாளரான வழக்கறிஞர் சி.அன்னக்கொடி
”அண்ணாச்சி எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம் அவர்களின் இல்ல வாசலில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தினோம்.

.எழுத்தாளர்கள் தோழர் தேனி வசந்தன், தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தோழர் தமிழச் செல்வன் தோழர் மணிமாறன் தோழர் லட்சுமிகாந்தன், அண்ணாச்சியின் மகன் நக்கீரன் துணை ஆசிரியர் தெ.சு கெளதம், வழக்கறிஞர் பால்ராஜ், சி.அன்னக்கொடி வி.கே.சாந்தாராம் மற்றும் பலர் இரங்கலுரை ஆற்றினர்.

வீரவணக்கம் செலுத்தி அவர் விருப்பபடி மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம். வாழ்ந்த போது மக்களுக்காக வாழ்ந்தார்.

மறைந்த பின்பு மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணிக்கப் போகிறார்.” என்கிறார் நெகிழ்ச்சியாய்.
.
நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் முன்னிலையில். மருத்துவமனையில் உடலை ஒப்படைத்துவிட்டு, அதற்கான சான்றிதழையும் கனத்த இதயத்தையும் சுமந்துகொண்டு வீடு திரும்பியிருக்கிறது அவர் குடும்பம்.
மரணத்தாலும் தன்னை ஒரு மாமனிதன் என உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார் சுந்தர மகாலிங்கம்
அவருக்கு வீரவணக்கம். !

 

விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு கிராமம்.

தெ. சுந்தர மகாலிங்கம்
தனது 82 வயதில், 2022 ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியன்று
இயற்கை எய்தி விட்டார்.


“வாசகர் கடித கருத்துப் போராளியின்
மரண சாசனம்”

அதற்கு முன்னதாக
2014 ஜனவரி 27 ஆம் தேதியன்று
தன் கைப்பட தனது மரண சாசனம்
ஒன்றினை எழுதிப் பதிவு செய்துள்ளார்.

தமிழின்
தினசரி நாளேடுகளில்
வார மாத இதழ்களில்
தனது “வத்திராயிருப்பு தெ. சுந்தர மகாலிங்கம்” என்கிற பெயரில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் பகுதியில்
தனது எண்ணங்களைப் பதிவு செய்து வந்துள்ள கருத்துப் போராளி அவர்.

தனது அறிவுக்கும் மனதுக்கும் பட்டதைத் தயக்கமின்றி
தடுமாற்றம் ஏதுமின்றி
தன் ஆயுளின் இறுதி வரை வாசகர் கடிதங்கள்
எழுதி வந்தவர்.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்.

பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள் எழுதுவதில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்று விட்ட கருத்துப் போராளி அவர்.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

 

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.