மெகா திட்டத்துடன் கோலிவுட்டில் களம் இறங்கியுள்ள கண்ணன் ரவி!
திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவி என்பவர் துபாயில் பெரும் தொழில்களுக்குச் சொந்தக்காரராகி, கோடிக்கணக்கில் பணம் கொட்டோ கொட்டென கொட்டுகிறது. அங்கே இருக்கும் தமிழ்ச் சங்கத்திற்கு ஏகப்பட்ட நன்கொடைகளை வாரி வழங்கும் கண்ணன் ரவி, இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல, சினிமா பிரபலங்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல் தான். துபாயில் அவருக்குச் சொந்தமான ஸ்டார் ஓட்டல் திறப்புவிழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்-நடிகைகள், டைரக்டர்களை அழைத்துப் போய் சிலிர்ப்பூட்டினார்.
பல தொழில்களில் பல நூறு கோடிகள் குவிந்தாலே, தொழிலதிபர்களின் அடுத்த குறி சினிமா தானே. அந்த குறியின்படி மெகா திட்டத்துடன் கோலிவுட்டில் குதித்துள்ளார் தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவி.
2023-ல் கே.ஆர்.ஜி.[ கண்ணன்ரவிகுரூப் ] என்ற தனது பேனரில் சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு உட்பட பலரை வைத்து ‘இராவண கோட்டம்’ என்ற படத்தைத் தயாரித்தார். விக்ரம் சுகுமாறன் டைரக்ட் பண்ணியிருந்தார். கே.பாக்யராஜின் அதிதீவிர ரசிகர் என்பதால், படத்தயாரிப்பின் முழுப்பொறுப்பையும் சாந்தனுவிடம் ஒப்படைத்தார் கண்ணன் ரவி.
அந்தப் படத்தின் ஆடியோ & டிரெய்லர் வெளியீட்டு விழாவைக் கூட துபாயில் தான் நடத்தினார் கண்ணன் ரவி. இந்த விழாவுக்கு தனக்கு வேண்டப்பட்ட சில பத்திரிகையாளர்களை மட்டும் அந்தப்படத்தின் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றியவர் அழைத்துச் சென்றதால் அப்போது பெரும் சர்ச்சையும் பலத்த சலசலப்பும் கிளம்பியது. இதற்கடுத்த சில வாரங்களில் சென்னை வடபழனியில் உள்ள க்ரீன்பார்க் ஓட்டலில் படத்தின் பிரஸ்மீட் நடந்த போது, மேடையிலேயே பகிரங்க மன்னிப்புக் கேட்டனர் கே.பாக்யராஜும் சாந்தனுவும்.
எல்லா சலசலப்புகளும் ஓய்ந்து ஒருவழியாக படம் ரிலீசாகியது. ஆனால் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ஆனாலும் அசராத கண்ணன் ரவி, ரிலீசாக முடியாமல் தவித்த சில படங்களுக்கு ஃபைனான்ஸ் உதவி செய்து ரிலீஸ் பண்ண உதவினார். இவ்வளவுக்கும் கண்ணன்ரவி துபாயிலிருந்து சென்னை வந்ததே கிடையாது. அவரது மகன் தீபக்ரவி தான் இங்கு எல்லாமே. அவரின் கண்ணசைவில் தான் அனைத்தும் நடக்கும்.
இந்த 2026 பொங்கலுக்கு கே.ஆர்.ஜி.பேனரில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை ரிலீஸ் பண்ணினார் கண்ணன் ரவி. ‘இராவண கோட்டம்’ சர்ச்சைகள் கண்முன்னே வந்து போனதால், ‘த.த.த.வின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழாவை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடத்தினார் தீபக்ரவி. மீடியாக்களிடமிருந்து சின்ன அதிருப்தி கூட வெளிப்படமால் கவனமாக பார்த்து டிரெய்லர் ரிலீஸ் விழாவை சிறப்பாக நடத்தினார் படத்தின் பி.ஆர்.ஓ. ‘எஸ்-2’ சதீஷ்.
படம் பம்பர் ஹிட்டானது. இதனால் சக்சஸ் மீட்டை சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் ஓட்டலில் வெகு விமரிசையாக நடத்தினார் கண்ணன் ரவி.
‘தலைவர் தம்பி தலைமையில்’ தந்த சக்சஸ் உற்சாகத்தில் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ஷனில் யுவன்சங்கர் ராஜா இசையில் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு நடிக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழாவையும் அதே லீலா பேலஸ் ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை [ மார்ச்.06] நடத்தினார்.
தொடக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக லதா ரஜினிகாந்த், டைரக்டர் பாலா, சமுத்திரக்கனி, நாதக சீமான், தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, சுஜாதா விஜயகுமார், டி.சிவா, மியூசிக் டைரக்டர் அனிருத் ஆகியோர் ஆஜராகியிருந்ததால் லீலா பேலஸ் ஓட்டல் காலையிலேயே ஜேஜே என இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் தான் முதன்முதலாக மைக் பிடித்தார் கண்ணன் ரவி. ‘டெக்ஸ்லா’வின் இண்ட்ரோ வீடியோவை ரிலீஸ் பண்ணிய பிறகு கண்ணன் ரவி பேசியது,
“பிஸ்னெஸ் சம்பந்தப்பட்ட மீட்டிங்னா கொஞ்சம் தலைக்கனத்துடன் தான் பேசுவேன். ஆனால் சினிமாவைப் பொறுத்த வரையில் நான் எல்.கே.ஜி.தான். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் மகள் ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் படம் தயாரிப்பது எனது பாக்கியம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் அன்பானவர், கனிவானர். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். பதினாறு படங்களைத் தயாரிக்கப் போகிறேன். எனது வெற்றிப்பயணம் தொடரும். இதற்கு மீடியாக்கள் பேராதரவு தர வேண்டும்” என தன்னடக்கமாகப் பேசினார் கண்ணன் ரவி.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.