அங்குசம் பார்வையில் ‘தடயம்’ வெப் சீரீஸ்
அஜய் கிருஷ்ணா தயாரித்து நவீன்குமார் பழனிவேல் டைரக்ட் பண்ணியுள்ள இந்த வெப் சீரிஸ், பிப்.27-முதல் ஜி5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மொத்தம் ஆறு எபிசோட், இரண்டு மணி நேரம்.
தமிழ்நாடு—ஆந்திரா எல்லையில் இருக்கும் திருவள்ளூர் பொதட்டூர்பேட்டை போலீஸ் லிமிட்டுக்குள் தொடர்ச்சியாக நான்கு கொலைகள் நடக்கின்றன. முதல் இரண்டு கொலைகள் நடந்தவுடனேயே ஸ்பாட்டில் ஆஜராகி தீவிர விசாரணையில் இறங்கி சில தடயங்களைக் கண்டு பிடிக்கிறார் நேர்மையான சப்-இன்ஸ்பெக்டர் அதியமான்[ சமுத்திரக்கனி]. ஆனாலும் டிஎஸ்பி மூணார் ரமேஷுக்கு இவர் மீது பழைய கடுப்பு ஒன்று இருப்பதால், இவரை அலட்சியப்படுத்திவிட்டு, புதிதாக அந்த ஸ்டேஷனுக்கு வரும் இன்ஸ்பெக்டர் ஷிவதாவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
சமுத்திரக்கனி மீது ஷிவதாவுக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. இந்த நிலையில் தான் மேலும் இரு கொலைகள் நடக்கின்றன. கொலையாளிகள் பெண்களின் தாலியை மட்டும் அறுத்திருக்கும் தடயம் மிகப்பெரிய சாட்சி. இதை கரெக்டாக ஸ்மெல் பண்ணும் சமுத்திரக்கனி, ஆந்திராவின் திருப்பதிக்குப் போய் அங்கும் இதே மாதிரி பல கொலைகள் நடந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள் ஷிவதாவும் சமுத்திரக்கனியும். கொலையாளிகள் யார்? ஏன் இந்தக்கொலைகள்? இதான் ‘தடயம்’.
ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் டீக்கடைகாரருக்கும் சமுத்திரக்கனிக்குமிடையிலான நட்பு, டீயில் பிஸ்கட்டை முக்கிச் சாப்பிடும் சமுத்திரக்கனியின் மேனரிசம், விசாரணையில் தனி ஸ்டைல் என அசத்துகிறார் சமுத்திரக்கனி. இன்ஸ்பெக்டர் உடுப்பு ஷிவதாவுக்கு நல்லாவே மேட்ச் ஆகியிருக்கு. இவருக்கு காதல் எபிசோட் தான் தேவையில்லாத ஆணி.
கொலையாளிகளாக ராஜ் திரேந்த்தும் பிரேமும் மிரட்டியிருக்கிறார்கள். சின்னச் சின்ன திருட்டுகளில் இறங்கிய இவர்கள் எப்படி கொலையாளிக் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்பதற்கு கரெக்டான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் நவீன்குமார் பழனிவேல். அதே போல் ஆந்திரா போலீஸின் லட்சணத்தை கோழி திருடிய கேஸ் மூலம் காலி பண்ணிவிட்டார். விபின் பாஸ்கரின் பேக்ரவுண்ட் ஸ்கோர் தடயத்தின் பிற்பகுதி விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.
முதல் மூன்று எபிசோட்கள் ரொம்பவே டல். அதுக்கப்புறம் தான் ஸ்பீட்.
அங்குசம் பார்வையில் ‘தடயம்’-வெப் சீரீஸ் 40/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.