தள்ளாடும் தளபதி ! தலைதூக்கும் டாக்டர் சரவணன் !
மதுரை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் தளபதி போட்டியிடும் நிலையில், இவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் களமிறங்கியிருக்கிறார். களத்தில் எதுவும் பெரியதாக தளபதி செய்யவில்லை என்றும்; தனது மகனை மட்டுமே முன்னிறுத்தி வருகிறார். என்றும் சொந்தக் கட்சியினரே அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். தொகுதிக்கென்று எதுவும் செய்யாமலேயே, திமுக அரசின் திட்டங்களை போஸ்டர் அடித்து ஒட்டினாலே, ஜெயித்துவிடலாம் என்ற கணக்கில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதிமுக தரப்பில் களமிறங்கியுள்ள டாக்டர் சரவணன், தலைமையோடு மல்லுக்கட்டித்தான் இந்த தொகுதியை தன்வசமாக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர். ஜெயித்த தொகுதி, எப்படியும் ஜெயித்துவிடுவேன் என்று சபதமேற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். பாணியில், மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி, கால்வாய்சீரமைப்பு , அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், கலைஞர் நூலகம், நடைபாதைசீரமைப்பு, கம்மாய் தூர்வாருதல், வைகை ஆற்றை சுத்தம் செய்தல், ரோடுபோடுதல் என தொகுதிக்கான தேவைகள் ஒவ்வொன்றையும் தானே முன்னின்று செயல்படுத்தி வந்திருக்கிறார், டாக்டர் சரவணன் என்கிறார்கள். அதோடு, சரவணா கிச்சன் என்ற பெயரில் தொகுதி முழுவதும் நடமாடும் உணவகத்தையும், அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களையும் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார். மேலும், தொகுதியில் கட்சி நிர்வாகிகளின் காதுகுத்து, சடங்கு, கல்யாணம் என சகலத்திலும் தலை காட்டி சென்றிருக்கிறார், டாக்டர் சரவணன் என்கிறார்கள்.

ஏற்கெனவே, மேற்கு தொகுதியாக இருந்த நிலையில், தற்போது வடக்கு தொகுதியாகியிருக்கிறது. இந்த தொகுதியில் முதல்முறை வெற்றிபெற்றவர்கள் அடுத்தமுறை வெற்றிபெற்றதில்லை என்ற சரித்திரம் தனக்கு சாதகமாகவே இருக்கிறது என்கிறாராம் டாக்டர் சரவணன். தொகுதியில் நிறைந்திருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த அதிலும் குறிப்பாக அகமுடையார் சமுதாயத்தினருடன் நட்பை பராமரித்தும் வருகிறாராம். அதேபோல, தொகுதியில் நிறைந்திருக்கும் சிறுபான்மையினர், சிறு – குறு தொழில் செய்பவர்கள், தறி நெய்யும் நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரையும் டாக்டர் சரவணன் கவர் செய்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தொகுதியின் நல்லது கெட்டதும் தெரியாத, முக்குலத்தோர் நிறைந்த தொகுதியில் நாயுடு சமூகத்தை சேர்ந்த தளபதியை திமுக களமிறக்கியிருப்பதும் டாக்டர் சரவணனுக்கே சாதகமாயிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, மாவட்ட செயலாளர் என்ற முறையில் மதுரை மாவட்டத்தில் வெற்றிக் கணக்கை காட்டவில்லை என்றால், கட்சிப்பதவி பறிக்கப்படும் என்ற தலைமையின் எச்சரிக்கையோடுதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாராம் தளபதி.
கொஞ்சம் விளம்பரம் தூக்கலாக இருந்தாலும், டாக்டர் சரவணன் செய்த அளவுக்கு, திமுகவின் தளபதி தொகுதிக்கென்று எதுவும் செய்யவில்லை என்பதே களநிலவரம் என்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
ஷாகுல்,படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.