82 வயது இலக்கிய இளைஞன் கவிஞர் கடல் நாகராசன் !
அவர் அடிப்படையில் கவிஞர், எழுத்தாளரும்கூட. தமிழக அரசின் கடலூர் மாவட்ட தமிழ்ச்செம்மல் விருதுக்குச் சொந்தக்காரர். மாவட்ட பாரதிதாசன் இலக்கிய பேரவையின் தலைவர். டாக்டர் அப்துல் கலாம் நினைவு நூலகப் பொறுப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இளமைத்துடிப்போடு இலக்கியத் தளத்தில் பயணித்து வரும் அந்த ஆளுமையின் வயது வெறும் 82. ஆம், இந்த வயதில் என்ன செய்துவிட முடியும் என்று பலரும் விரக்தியின் விளிம்பில் தத்தளிக்கும் 82 வயதில்தான், 28 வயது இளைஞனைப்போலவே இலக்கிய உலகில் வலம் வருகிறார் கவிஞர் கடல் நாகராசன்.
அப்துல்கலாம் பிறந்த அதே இராமேஸ்வரத்தில் பிறந்தவர். கலாம் படித்த அதே திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தவர். அவரது குடும்பமே ஆசிரியர் குடும்பம். அப்துல் கலாமின் கணித ஆசிரியர் இவரது பெரியப்பா காலஞ்சென்ற சிவசுப்ரமணியம். இவரது தாய்மாமா இராமசுப்பிரமணியம் இராமேஸ்வரம் தீவில் முதல் தனியார் தொடக்கப்பள்ளியை 1930 – ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கி, தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக பள்ளியை நடத்திய சாதனைக்கு சொந்தக்காரர். அந்த பள்ளியின் பெயர் சரஸ்வதி இந்து ஆதாரப்பாடசாலை.
இத்தகைய கல்வி ஆர்வலர்களின் பின்புலத்தில் பிறந்தவர்தான், கவிஞர் ஆ.நாகராஜன். தொலைபேசித்துறையில் பணி கிடைத்து கடலூருக்கு குடி பெயர்ந்தவர். 40 ஆண்டு சேவை நிறைவுற்று பணிஓய்வுக்குப் பின்னரும் அதே கடலூரில் வசித்து வருகிறார்.
”அமரகவி பாரதியும் புரட்சி க்கவிஞர் பாரதிதாசனும் தனது இலக்கிய வாழ்வின் இரு கண்கள்” என்கிறார். பாரதிதாசனை 1960 இல் ஒருமுறை புதுவையில் நேரில் சந்தித்ததாக சொல்கிறார். பாரதிதாசன் மன்றத் தலைவராக, 42 ஆண்டுகளில் தொடர்ந்து 650-க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்.
1918-இல், கடலூரில் மத்திய சிறைச்சாலையில் அமரகவி பாரதி கைதியாக இருந்த அந்த அறையை நினைவு நூலகமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றியவர். இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது தமிழ்ப்பணிகளைப் பாராட்டி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட இறையன்பு ஐ.ஏ.எஸ். உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு இலக்கியவாதிகளுடன் எழுத்தாளர்களுடன் நல்ல நட்பை பேணி வருபவர். இவரது மனைவி மாலதி திருச்சியை சேர்ந்தவர். மாமியார் ஊர் என்பதால் மட்டுமல்ல; திருச்சி தமிழ்ச்சங்கத்தோடும் நல்ல நட்பு பாராட்டி வருபவர். இங்கு நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் இவரையும் காண முடியும்.
காலம் போன காலத்தில், ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி காலத்தை தள்ளாமல், தள்ளாத வயதிலும் இலக்கிய தளத்தில் தொடர்ந்து இயங்க வேண்டுமென்ற இவரது உள்மன உந்துதல் இளந்தலைமுறைக்கான முன்னுதாரணம்!
– கலைமதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.