பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் தேவேந்திர குல மக்களே!
- தினகரன் ஜெய்
‘தேவேந்திர குல சமுதாயம் ஆதிதிராவிடர்கள் அல்ல, பட்டியல் இனத்தவர்கள் அல்ல அவர்கள் பூர்வகுடிகள்’ என்று கூறும் மள்ளர் நாடு கட்சி செயல் தலைவர் சோலை பழனிவேல்ராஜ்
யார் தேவேந்திர குல மக்கள்.. ?
நாங்கள் பூர்வீக குடிகள். வேளாண் குடிகள், மருத நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இந்திரனை தெய்வமாக வணங்குபவர்கள், உழவுத் தொழிலுக்கு வித்திட்டவர்கள்… நாங்கள் தலித்துகள் அல்ல.
தற்போதைய நிலையில் தேவேந்திர குல மக்களின் அரசியல் அதிகாரம் ?
தேவேந்திர குல மக்களை காங்கிரஸ் கைவிட்டது. ஆனால் இன்று பாஜக கையில் பிடித்து இருக்கிறது. தேவேந்திரகுல வேளா ளர்கள் யார் என்று பாஜகவினர் அறிந்திருக்கிறார்கள், தெரிந்திருக்கிறார்கள், கீழ்மட்டத் தலைவர்கள் முதல் மேல்மட்டத் தலைவர்கள் வரை தேவேந்திர குலவேளாளர் வரலாறை உணர்ந்து இருக்கிறார்கள். அதனால் தான் இன்று பாராளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர் குறித்து பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் 5 பாஜக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு எங்களுடைய வாக்கு வங்கி தான் முக்கிய காரணம். எங்களுடைய வாக்கு வங்கியும், எங்களுடைய செயல்பாடும் தான் வெற்றிக்கு காரணம். ஏன் பாரதப் பிரதமர் கூட நான் நரேந்திரன், நீங்க தேவேந்திரன் என்று உச்சரித்தார். இந்த நன்றிக்கு இலக்கணமாக எங்கள் மக்கள் செயல்படுகிறார்கள். மேலும் தேர்தலில் தேவேந்திரகுல வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் களம் இறக்கு கிறார்கள்.
அரசியல் கட்சிகள் தேவேந்திரகுல மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை தருகின்றனவா?
இது எப்போதும் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. மிகப்பெரிய மக்கள் தொகை, மிகப் பெரிய செயல்பாடு என்று இருந்தாலும் மற்ற மற்ற கட்சிகள் அரசிய லில் தேவேந்திரகுல மக்களுக்கு முன்னுரிமை தர மறுக்கின்றனர். ஏனென் றால் அவர்கள் எல்லாம் முன்னேறிவிட்டால் தங்க ளால் செயல்பட முடியாது என்ற பயத்தின் வெளிப்பாடு தான் என்று நான் கருதுகிறேன். சமூகநீதியை கடைபிடிக்கிறேன் என்று சொல்லக்கூடிய தமிழக முதல்வர் கூட சட்டமன்ற தேர்தலில் சமூகநீதியை கடைபிடித்தாரா…. மதுரை மாநகராட்சி தேர்தலில் சமூகநீதி கடைபிடிக்கப்பட்டு இருக்கிறதா, 100 வார்டுகளில் 18% கொடுத்திருக்க வேண்டும், கொடுக்கப்பட்டதா.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள். அங்கு சமூகநீதி கடைபிடிக்கப்பட்டு இருக்கிறதா சமூகநீதி கடைபிடிக்கப்பட்டிருந்தால் பட்டியல் சமூக மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். அதேநேரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கி றோம். எங்களுக்கு எஸ்சி வார்டுகளில் சீட்டு கொடுக்காததால் எங்களை எஸ்சி பட்டிய லிலிருந்து மு.க.ஸ்டாலின் விலக்கி விட்டார் என்று எடுத்துக் கொள்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது?
நகர்ப்புற உள்ளாட்சியாக இருக்கட்டும். ஊரக உள்ளாட்சியாக இருக்கட்டும். இரண்டு தேர்தல்களிலும் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய நட்புகள், தெரிந்த முகங்கள், பழக்கவழக்கம் என்ற அடிப்படையில் தான் தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலை பார்த்திருக்கின்றனர். தேவேந்திரகுல சமூக மக்களின் வாக்கு பெருமளவில் பாஜகவிற்கு சென்றிருக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் பாஜகவினுடைய ஓட்டு சதவீதம் அதிகரித்தி ருக்கிறது. பாஜகவின் சின்னம் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறது. தாமரை மலராது, தாமரை யை தமிழ்நாட்டில் மலரை விட மாட்டோம் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று கூனிக்குறுகி நிற்கிறார்கள். இப்படி பாஜகவின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் வித்திட் டவர்கள் எம் இன மக்கள். தேவேந்திர குல மக்களின் ஓட்டு பெருமளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றி ருக்கிறது.
பொதுவாக தேவேந்திர குலம் இணக்கமாக, நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் விசுவாசத்திற்கும் பெயர் போன சமூகம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்த்திருக்கலாம். கட்டபொம்மனுக்கு பின்னால் மாவீரன் சுந்தரலிங்கம் நம்பிக்கைக்கு பெயர் போனவர், பிறகு பூலித்தேவனுக்கு போர்ப்படைத் தளபதியாக, நம்பிக்கையாக வெண்ணிக்காலாடி இருந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ச்சிக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக தேவேந்திர சமூக மக்கள் இருந்திருக்கிறார்கள். வரும் காலங்களில் தேவேந்திர குல மக்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்,
ஒற்றுமையாக செயல்பட்டால் பெயர் மாற்றம் அடைந்தது போல பட்டியலில் இருந்து வெளியேற்றமும் அடைய முடியும்” என்றார்.