60 வயது மூதாட்டி கொடூர கொலை ! தீவிர விசாரணையில் காவல்துறை!
தேனி நகர் பகுதியில் பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடை தெரு பகுதியில் ராதா என்கிற 60 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார்.
திருமணம் முடிந்து கணவரை பிரிந்து இவருக்கு மகன், மகள் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் அருகே தனது சகோதரருக்கு சொந்தமான செக்கு எண்ணெய் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் 25.7.2026 காலை மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் வாய் மற்றும் கழுத்துப் பகுதியில் கயிற்றால் இறுக்கி கட்டிக் கொலை செய்துள்ளதாகவும். மேலும் தலையிலும் பலமாக தாக்கியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் நேரில் சென்று கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்தார்.
மூதாட்டியின் விவரங்கள் குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை மற்றும் சுமார் 28 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மூதாட்டி இடம் பணம் இருப்பதை அறிந்து பணத்திற்காக கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி நகரின் மையப் பகுதியில் நடந்த மூதாட்டி கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.