கட்டிய வீட்டிற்கு வரி ! லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் ! 3 ஆண்டுகள் சிறை !
திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரில் வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் முத்துராமலிங்கம் என்பவர் தனது பெயரில் உள்ள இடத்தில் திருச்சி மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வது தொடர்பாக கடந்த 08.09.2009ஆம் தேதி சுமார் 12.00 மணியளவில் மேலகல்கண்டார்கோட்டை, வார்டு அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் உதவியாளர் சுபேர் அலி முகமது என்பவரை சந்தித்து தனது வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.8,000/- லஞ்சமாக கேட்டு, பின்னர் ரூ.6,500/- லஞ்சம் கொடுக்கும்படி சுபேர் அலி முகமது கேட்டது தொடர்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 08.09.2009ஆம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 09.09.2009ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறி வைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் முத்துராமலிங்கம் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.6,500/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி சுபேர் அலி முகமது, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று 13.08.2025ஆம் தேதி விசாரணை முடிவுற்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு அவர்கள், சுபேர் அலி முகமது, வயது 54/2025, த/பெ.முகமது இஸ்மாயில், முன்னாள் வருவாய் உதவியாளர், 30வது வார்டு அலுவலகம், மேலகல்கண்டார்கோட்டை, பொன்மலை கோட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, திருச்சி என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும்,
மேலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேற்படி வழக்கினை DSP மணிகண்டன், Inspector அ.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.