தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு – இனியாவது சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் !
சௌந்தர்யாவுக்கு என் அஞ்சலி
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்… அதில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்தவர்.
இந்த வாரம் நான் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்த போது 23.07.2024 அன்று பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு சௌந்தர்யா என்பவருக்கான கடிதத்தை என் உதவியாளர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். நான் அதை பிரிண்ட் அவுட் எடுத்து உடனே கையொப்பமிட்டு விரைவு தபாலில் அவருக்கு அனுப்பி வைத்தேன்.

சௌந்தர்யாவின் குடும்பத்தினரும் (25.07.2024) விழுப்புரத்திலுள்ள எனது அலுவலகத்திலிருந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுச் சென்றிருந்தனர். ஆனால் அந்தக் கடிதம் அவருக்குச் சென்று சேர்வதற்கு முன்பே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்து விட்டது. அவருக்கு என் அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 225 பேருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நான் உதவி பெற்றுத் தந்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் புற்று நோயாளிகள் தான். அந்த நிதி உதவி மூலம் பெற்ற சிகிச்சையினால் பலர் குணமடைந்திருக்கிறார்கள், உயிர்பிழைத்திருக்கிறார்கள்.

மீண்டும் நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 13 பேருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு கடிதம் தந்துள்ளேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏன் இவ்வளவு அதிகமாக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைப்பற்றி தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
அவ்வாறு ஆய்வு செய்து அதற்கான மூல காரணம் கண்டறியப்பட்டால் நிச்சயம் பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியலாம். மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்..
இதே போன்று மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா தன்னுடைய முகநூலில்…
பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்து வந்த சகோதரி சவுந்தர்யா அவர்கள் ரத்தப் புற்றுநோய்க்கு எதிரான பேராட்டத்தில் மரணமடைந்த செய்தியை அறிந்து மனம் சொல்லொணாத் துயர் கொள்கிறது.
சகோதரியைப் பிரிந்து வாடும் அவரது தாய் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தவனாய் இந்த விழிப்புணர்வுப் பதிவை எழுதுகிறேன்.
இவருக்கு ஏ.எம். எல் எனும் ரத்தப் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதை அக்யூட் மயலாய்டு லூக்யீமியா என்கிறோம். அதன் சுருக்கம் தான் AML . அக்யூட் என்றால் குறுகிய காலகட்டத்தில் பிரச்சனை ஏற்படுத்துதல்
க்ரானிக் என்றால் நெடு நாள் தொடர்ந்து இருக்கும் பிரச்சனை என்று அர்த்தம். நமது உடலைப் பொருத்த வரை ரத்தம் என்பது மிக முக்கியமான திரவ நிலையில் இருக்கும் உறுப்பு.
எப்படி இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகங்கள் முக்கியமோ அதே போல நமது ரத்தம் எனும் உறுப்பின் நலனும் முக்கியமாகும்.இத்தகைய ரத்தத்தில் குருதி நீர் ( ப்ளாஸ்மா) மற்றும் அதில் கலந்துள்ள ரத்த செல்களான.
சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் தட்டணுக்கள் ஆகியவை இருக்கின்றன. இவை அனைத்தும் பெரிய எலும்புகளுக்கு உள் இருக்கும் மஜ்ஜையில் இருந்து ஊற்றெடுக்கின்றன.
நமது எலும்புகளின் மஜ்ஜைக்குள் புதிதாக ரத்த செல்களை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் உள்ளன. அவற்றில் இருந்து நாள்தோறும் ஏன் நொடிக்கு நொடி பழைய ரத்த செல்களைப் புதுப்பிக்க புதிய ரத்த செல்கள் தோன்றுகின்றன. இந்த ரத்த ஸ்டெம் செல்கள் இருவகைகளில் ரத்த செல்களை உருவாக்குகின்றன .
முதல் வகை லிம்ஃபோசைட்ஸ் – இவை தான் நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தின் அடிப்படை செல்கள். இரண்டாம் வகை மயலாய்டு செல்கள் இந்த மயலாய்டு செல்களில் இருந்து தான்.
சிகப்பணுக்கள் – இதில் தான் ஹீமோகுளோபின் உள்ளது. இந்த செல்கள் மூலம் தான் உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் சென்று சேருகிறது.
வெள்ளை அணுக்கள் தட்டணுக்கள் ( ரத்த உறைதலுக்கு உதவும் ) ஆகியவை உருவாகின்றன.
ஏ.எம்.எல்லில் என்ன நடக்கிறது?
இந்த மயலாய்டு செல்கள் மிதமிஞ்சி உற்பத்தி ஆகத் தொடங்கி சராசரியாக இருக்க வேண்டிய நார்மல் செல்கள் அளவில் குறைந்து விடுகின்றன.
நாளடைவில் மயலாய்டு செல்கள் மிகவும் அதிகமாகி ரத்தத்தில் சிகப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகியவை அளவில் மிகவும் குறைந்து விடுகின்றது.
நாளடைவில் எலும்பு மஜ்ஜை முழுவதுமாக செயலிழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இத்தகையோருக்கு
– அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல், – உடல் மெலிதல் , – ரத்த சோகை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும் நோயைக் கண்டறிந்தவுடன் இந்த பிரச்சனைக்குரிய மயலாய்டு செல்களை அழிக்குமாறு மருந்துகள் ரத்த நாளம் வழியாக வழங்கப்படும். இவை கீமோதெரபி என்கிறோம்.
கூடவே தற்போது நவீன மற்றும் காஸ்ட்லியான மருந்துகளான மோனோ குளோனல் ஆண்ட்டிபாடி கள் வழங்கப்படும்
சிலருக்கு இந்த சிகிச்சையிலேயே நோய் கட்டுப்பட்ட நிலைக்கு வரும்.
ஆனால் சிலருக்கு கட்டுப்பாடு வராது. அவர்களுக்கு எலும்பு மஜ்ஜையில் ஊடுகதிர் சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் எலும்பு மஜ்ஜையில் புற்று நோய் உண்டாக்கும் மயலாய்டு செல்கள் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும்.
இந்த நோய்க்குரிய தீர்வு என்பது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அல்லது ரத்த ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.
அதாவது நார்மலாக இருக்கும் வேறொரு இருந்தோ அல்லது நோயாளியின் நல்ல எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்களை எடுத்து அவருக்கு மீண்டும் உட்செலுத்தும் போது மீண்டும் எலும்பு மஜ்ஜை புத்தாக்கம் பெற்று புதிய செல்களை நல்ல நிலையில் உருவாக்கத் துவங்கும்.
இதற்கு நார்மல் மனிதர் ஒருவரிடம் இருந்து எப்படி ரத்த தானம் பெறுகிறோமோ அதே போல ரத்த நாளம் வழி ஸ்டெம் செல்களைப் பெற முடியும்.
ஸ்டெம் செல்கள் கொடையாக வழங்க உள்ளவருக்கு சில நாட்களுக்கு முன்பு நன்றாக ஸ்டெம் செல்களை வளர்க்கும் ஊசி செலுத்தப்படும்.
பிறகு அவரது ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு அது லூகீமியா உள்ள நோயாளிக்கு வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்பட்ட ஸ்டெம் செல்கள் நோயாளியின் உடலில் சென்று வேலை செய்யத் துவங்கும். நிலைமை சரியாகும் எனினும் இது சொல்வதைப் போல நிஜத்தில் எளிதானதல்ல.
வெளியால் ஒருவரின் ஸ்டெம் செல்களை சில நேரங்களில் நோயாளியில் எதிர்ப்பு சக்தி எதிர்த்து ஒன்றுமில்லாமல் செய்து விடவும் வாய்ப்பு உண்டு. இதை மாற்று மஜ்ஜை செயலிழப்பு என்று கூறுகிறோம்.
இந்த சகோதரிக்கு இந்த ஸ்டெம் செல் ட்ராண்ஸ்ப்ளாண்ட் செய்யப்பட்டும்
அது ரிஜெக்ட் ஆகிவிட்டது துரதிர்ஷடமானது.
மீண்டும் மற்றொரு முறை ட்ராண்ஸ்ப்ளாண்ட் செய்ய காத்திருக்கும் போது தான் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறு நடக்கும் போது ரத்தத்தில் உள்ள அனைத்து செல்களும் அளவில் மிகவும் குறைந்து விடும்
எனவே இத்தகைய நோயாளிகள் தொடர்ச்சியாக ரத்தம் ஏற்றப்படுவதால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற சூழ்நிலையில் இருப்பார்கள்.
எனவே இத்தகைய நோயாளிகளின் நலன் கருதி நல்ல நிலையில் இருக்கும் நாம் அனைவரும் தொடர்ச்சியாக குருதி தானம் வழங்குவதை பழக்கமாக வைத்துக் கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.
அன்னாருக்கு எனது பிரார்த்தனைகள்
தொடர்ந்து ரத்த தானம் செய்வோம்
பல உயிர்களைக் காப்போம்
இதுவே எனது பதிவின் செய்தி
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்