திருச்சியில் தவெக விஜய் ! கூட்டத்தை கட்டுப்படுத்தியது எப்படி ?
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக திருச்சிக்கு வந்திருந்தார். கடந்தமுறை சுற்றுப்பயணத்திற்கான பிரச்சார கூட்டத்தின்போதே, திருச்சி திக்குமுக்காடி போயிருந்தது. விஜயின் வளர்ச்சியை பிடிக்காமல், ஆளும் திமுக அரசுதான் போலீசை பயன்படுத்தி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.

சிரித்தால் குற்றம், தொட்டால் குற்றம் என்று எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறார்களே என்று போலீசாரும் பெரிய கெடுபிடி காட்டாமல், அவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டார்கள். த.வெ.க.வினரும் திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திருச்சியில் குவிய வைத்திருந்தனர். அப்போது, ஏர்போர்ட்டிலிருந்து பிரச்சார இடமான மார்க்கெட் – பாலக்கரை வரையிலான தோராயமாக ஆறு கிலோமீட்டர் தூரத்தை கடந்துவர ஆறுமணி நேரத்துக்கும் மேலானது. அசம்பாவிதம் ஏற்படவில்லை என்ற போதிலும், அன்றைய நாள் முழுவதும் திருச்சி மாநகரமே அல்லோலகல்லோலபட்டது. திருச்சி சம்பவத்துக்குப்பிறகுதான், கரூர் கொடுந்துயர் நிகழ்ந்தேறியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியிலிருந்துதான், இந்தமுறை திருச்சி மாநகர போலீசார் த.வெ.க. தொண்டர்களை சற்றே இருக்கிப்பிடித்தனர். திருச்சி மாநகரில் சுமார் ஆயிரம் போலீசார்களை களமிறக்கிவிட்டு, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பத்துக்கும் மேற்பட்ட தடுப்புகள் :
சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர் பிரசார வேனில் ஏறி மனு தாக்கல் செய்யும் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பின் தொடர்ந்து வந்தன. அதைத்தொடர்ந்து காவல்துறையினர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பின் தொடர்ந்த வாகனங்களை வழிமறித்து பிடித்தனர். அதன் பின்னர் காவல் துறை வாகனங்கள் முன்னும் பின்னும் தொடர அவரது பிரச்சார வேன் புறப்பட்டது.
மேலும், வயர்லெஸ் ரோடு, டி மார்ட், கோழிப்பண்ணை, ஜெயில் கார்னர், ஜமால் காலேஜ் ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், பாலக்கரை மேம்பாலம், வேர் ஹவுஸ், பிரபாத், மாட்ட ஆஸ்பத்திரி என பல பகுதிகளில் இரும்பு தடுப்புக் கம்பிகள் வைக்கப்பட்டு விஜய் வாகனத்தை பின் தொடர போலீசார் தடை விதித்தனர்.
அதுமட்டுமல்லாமல் விஜய் வாகனம், மனு தாக்கல் செய்யும் பகுதிக்கு வந்த போதிலும் பல இடங்களிலும் போக்குவரத்தை முடக்கி வைத்திருந்தனர். திருச்சி விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி பிரச்சாரம் செய்யும் இடம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு பெரும் கூட்டத்தை காவல்துறையினர் சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தினர்.
மனு தாக்கல் செய்யும் இடமான பாலக்கரை பகுதிக்கு விஜய் வந்து சேர்ந்த உடனேயே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் போலீசார் பாலக்கரை மேம்பாலத்தின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைத்து எந்த வாகனத்தையும் பாலக்கரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நடு பாலத்தில் கொளுத்தும் வெயிலில் காத்துக் கிடந்தனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் வாகனத்தை பின்தொடர விடவில்லை :
விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பல இடங்களில் த.வெ.க. தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களை பேரிக்காடு அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்தனர். விஜய் வருகையின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொன்மலை ஜி- கார்னர் பகுதியில் கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. கொளுத்தும் வெயிலால் சாலையில் தண்ணீர் லாரிகள் மூலம் தெளிக்கப்பட்டன. விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையம் முதல் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி வரை விஜய் வருகையால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.போலீசார் போக்குவரத்தை சரி செய்து, பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர கமிஷனர் காமினி தலைமையிலான திருச்சி போலீசாரின் பக்கா பிளான் ஒர்க் அவுட் ஆகி, எந்தஒரு சலசலப்பும் இல்லாமல், அசம்பாவிதங்களுக்கு இடம் தராமல் த.வெ.க. கூட்டத்தை கட்டுப்படுத்தி சபாஷ் வாங்கியிருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.