நல்ல நேரம் வரும்வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த விஜய் !
திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் த.வெ.க வேட்பாளராக கட்சித் தலைவர் விஜய் ஏப்ரல்-02 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகர் விஜயை பார்க்க அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
காலை முதலே திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி -2 மண்டல அலுவலக வளாகம் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளின் இருபுறமும் தொண்டர்கள் திரண்டனர். அருகில் இருந்த பழைய கட்டிடத்தின் மேல் ஏராளமான மக்கள் ஏறி நின்றனர்.
இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் விஜயின் பிரச்சார வேன் கோட்ட அலுவலக வளாகத்துக்குள் வந்தது. ஆனால், அப்போது ஏற்கனவே ஒரு சுயேட்சை வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதே சமயம் நல்ல நேரமும் இன்னும் வராததால், விஜய் தனது பிரச்சார வேனிலேயே சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார்.
அந்த நேரத்தில் அலுவலக வளாகத்திற்கு வெளியே சாலையில் திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இடைவிடாமல் விசில் அடித்து கோஷங்கள் எழுப்பினர். விஜயின் வருகையால் பாலக்கரை சாலை முழுவதையும் திருச்சி மாநகர போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
பின்னர் சரியாக மதியம் 12 மணிக்கு விஜய் தனது பிரச்சார வேனில் இருந்து இறங்கி கோட்ட அலுவலகத்துக்குள் சென்றார். அவருடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன், அவரது மகனும் மாற்று வேட்பாளருமான சஞ்சீவி ஆகியோர் சென்றனர்.
பின்னர், கோட்ட அலுவலகம் 2-ன் உதவி கமிஷனர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான முத்து முருகேச பாண்டியன் முன்னிலையில் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளர் உட்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், மற்ற நிர்வாகிகள் வெளியில் காத்திருந்தனர். காட்சி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் என 15 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசார் மற்றும் நிருபர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சில நிருபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் ஏராளமான போலீசார் கோட்ட அலுவலக வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர். அலுவலகத்தைச் சுற்றிய 100 மீட்டர் தூரத்தில் 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி, ஒலிபெருக்கி கட்டுப்பாடு, கூட்ட நெரிசல் தடுப்பு, முழு வீடியோ பதிவு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வேட்பு மனுவுடன் Form 2B, Form-26 பிரமாணப் பத்திரம், சொத்து விவரங்கள், வருமானம், கல்வித் தகுதி, நிலுவை வழக்குகள், கட்சி அங்கீகார Form A மற்றும் Form B, பாதுகாப்பு வைப்பு தொகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டன.
மனு தாக்கல் முடிந்த பின்னர் செய்தியாளர்கள் பேட்டி கேட்டனர். அப்போது விஜய் சிரித்துக் கொண்டே கையை அசைத்தவாறு சென்று விட்டார்.
– அங்குசம் செய்திப்பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.