வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி மோசடி ! சர்ச்சையில் சிக்கிய V CRORE இன்டர்நேஷனல் !
மதுரையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி பணம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தபட்ட நிறுவனத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மனைவியோட தாலிய அடகு வச்சு கட்டுன காசு சொந்தகாரங்க நகைய அடகு வச்சுகாசு குடுத்து வட்டிகட்டுறோம் எங்க பணத்தை வச்சு என நகைக்கடையை தொடங்கி விஐபி காரில் வலம்வரும் பாரதிராஜா, நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
”பணம் கிடைக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் அலுவலகத்திற்குள்ளயே தூக்கிட்டு சாகும் நிலைக்கு செல்வோம்” எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மதுரை காளவாசல் நாவலர்நகர் 3 ஆவது தெரு பகுதியில் உரிமையாளரான சாய்ராம் பாரதிராஜா மற்றும் மேலாளர் நவீன் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து V CRORE இன்டர்நேஷனல் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பணிகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அமெரிக்கா, ஐரோப்பா, லண்டன் , ரஷ்யா, துபாய், கிர்கிஸ்தான் என பல்வேறு நாடுகளுக்கு பணிக்கு அனுப்புவதாகவும் மாதம் ரூபாய் ஒன்றரை லட்சம் ஊதியம் வரும் எனகூறி 3 லட்சம் வரை பெற்றுள்ளனர். இது குறித்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாம் விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தில் சிலர் வெளிநாடு செல்வது போலவும் அவர்கள் அதிக ஊதியம் பெறுவது போன்ற வீடியோவையும் பதிவு செய்துள்ளனர். இதனை நம்பி ஆன்லைன் மூலமாக இந்நிறுவனத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்களும் பணம் செலுத்தியுள்ளனர்.
கடந்த மே மாதம் தொடங்கி பணம் செலுத்தியவர்கள் தங்களது பணிக்கான விசா குறித்து கேட்டபோது முறையான எந்தவித பதிலும் அளிக்கவில்லை. கடந்த இரண்டு வாரம் கால அவகாசம் ஆகும் எனக்கூறி அனுப்பியதோடு, திடீரென வழக்கறிஞர் பெயரில் பணம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பணம் கொடுத்து வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்த ஏராளமானோர், மதுரை காளவாசல் நாவலர் நகர் பகுதியில் உள்ள V CRORE இன்டர்நேஷனல் அலுவலகத்திற்கு ஜன-20 ஆம் தேதி காலை முதல் அலுவலகத்திற்குள் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்திற்கு புகார் மனு அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்டோர்கள் பேசுகையில், “மதுரை காளவாசல் பகுதியில் V CRORE இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தினோம், 300-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி அதனை கேட்டபோது பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனர். மனைவி நகையை விற்று உறவினர்களின் நகையை அடகுவைத்து பணம் செலுத்தி ஏமாந்துள்ளோம். பணத்தை கேட்டால் தர முடியாது என மிரட்டுகின்றனர். மேலும், நிறுவனர் பாரதிராஜா புதிய நகைக்கடை ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் அதில் ஏராளமான பெண்களை வேலைக்கு வைத்து விஐபி ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து இறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற DSP ஒருவர் எங்களிடம் பேசி மிரட்டுகிறார். உறவினர்களின் நகையை அடகு வைத்து கொடுத்த பணத்தை இழந்து நிற்கிறோம். மாதம் தோறும் வட்டி கட்டி மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம். ஆனாலும், எங்கள் பணம் கிடைக்காதவரை இந்த இடத்தில் இருந்து செல்லமாட்டோம்” என தெரிவித்தனர்.
மேலும், சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய நிலையில் அவர்கள் வேலைக்கு செல்லாமல், நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். எங்களது பணத்தை திரும்ப தராவிட்டால் நாங்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே சாகவேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என தங்களது மன வேதனையை வெளிப்படுத்தினர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்










Comments are closed, but trackbacks and pingbacks are open.