நவீனத் தீண்டாமையை தவெகவில் புகுத்திவிட்டாரா விஜய்?
ஜெயலலிதாவுக்கு ஆரம்பக் காலத்தில் சபாரி படை (பழுப்பு நிற சபாரி உடை அணிந்தவர்கள் என்பதால் சபாரி படை என்ற பெயர் வந்தது) என்றால், விஜய்க்கு பவுன்ஸர்கள். போயஸ் கார்டன் வீட்டை மறைக்கும் அளவுக்குப் பிரமாண்ட கேட் போல பனையூரிலும் அதைவிடப் பெரிய கதவு. இந்த வரிசையில் இப்போது ஜெயலலிதாவின் கொள்கையையும் தவெக கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
தவெகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசனின் இல்ல விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டதும். அவருக்கு வரவேற்பு அளித்ததும் சர்ச்சை ஆகியிருக்கிறது. தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், தன்னுடைய தன்னிலை விளக்கத்தை விஜய்க்கு அனுப்பியிருக்கிறார்.
அதில், ’’எனது புதிய இல்ல புதுமனை விழாவுக்கு அனைவரையும் அழைத்தேன். அதில் மாற்றுக் கட்சி அமைச்சரையும் அழைத்தேன். குடும்ப நண்பர் என்பதால், அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன். இச்செயலுக்காக நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில், என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களைத் தவிர வேறு எந்த ஒரு மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்’’ எனச் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா காலத்தில் தங்கள் இல்ல நிகழ்வுகளுக்கு திமுகவினரையும் அதிமுகவிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர்களையும் அழைக்க மாட்டார்கள். அப்படி அழைத்தால் அது ஜெயலலிதாவின் கோப பார்வைக்கு ஆளாக நேரிடும். இப்போது இந்த கலாச்சாரம் தவெகவில் பரவ தொடங்விட்டது. அதனால்தான் தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசனிடம் இருந்து இப்படியொரு கடிதம் வந்திருக்கிறது. இதனைப் பார்க்கும் போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஜெயலலிதாவுக்கும் சசிகலா கணவர் நடராசனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருந்த போது, தனது 70-வது பிறந்த நாள் விழாவில் நடராசன் ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.
‘சிலர் (ஜெயலலிதா) யாரையும் முழுவதுமாக நம்புவதில்லை. ஏன்…அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. நான் யாரை எதற்காகச் சொல்கிறேன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எழுதப்படாத சட்டத்தைப் போடுகிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், நவீனத் தீண்டாமை, கட்சிகளின் பெயரால் நடக்கிறது’’ என்றார்.
அந்த நவீனத் தீண்டாமையை தவெகவில் புகுத்திவிட்டாரா விஜய்?
— பரகத்அலி – மூத்த பத்திரிகையாளர்