ஆசிரியர்கள் என்ன தீவிரவாதிகளா ? தமிழகத்தில் மீண்டும் டெஸ்மாவா ?
ஆசிரியர்கள் என்ன தீவிரவாதிகளா ? தமிழகத்தில் மீண்டும் டெஸ்மாவா?
“ஆசிரியர்கள் என்ன தீவிரவாதிகளா ? கிரிமினல் குற்றவாளிகளா? பணியாற்றிவரும் பள்ளிக்கு சென்று கைது செய்வதா ? வீட்டுக் காவலில் வைப்பதா? கோரிக்கைகளைக் கேட்டால் கோரத்தாண்டவமாடுவதா ? தமிழகத்தில் மீண்டும் டெஸ்மாவா?”
கெடுப்பார் இலேனும் கெடுவோம் நாம்!
மக்களைத் தேடி மருத்துவத்திட்டப் பணியாளர்கள் 15 ஆயிரம் பேர் பேரணி நடத்த வந்தவர்களை வளைத்து வளைத்து கைது செய்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் இதயக் குமுறல் ஒலி கேட்கவே இல்லையா?
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் முதிர்ச்சியற்ற நிர்வாகமே ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களுக்கு காரணமாகி வருகிறது என்பதை எங்களைப் பாதுகாத்து வந்த தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலிருந்து கூறுகிறோம் இது சத்தியம்! இது சத்தியம்!
வாய்ப்பளித்தால் நீதிமன்றத்தில் ஏறி நின்று நாங்கள் சொல்வது எல்லாம் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சாட்சி சொல்லவும் தயாராக உள்ளோம்.
நடந்தது என்ன? நடைபெறுவது என்ன ?
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் சார்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது அமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்ட 12 கோரிக்கைகளுக்கு அரசாணைகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை!
மரபை அழிக்கத் துணிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்..!
60 ஆண்டுகளாக தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதனை மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியலாக்கி நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வினை நடத்த வேண்டுமென்ற வணிக உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது தான் அரசாணை எண் 243, நாள் 21.12.2023 ஆகும்.
இந்த அரசாணையால் 10 சதவீதம் பேர் நன்மை அடைவார்கள், 90 சதவீதம் பெண் ஆசிரியைகள், மாறுதல், பதவி உயர்வு வாய்ப்பினை இழப்பார்கள் என மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களிடம் மனந்திறந்து கலந்துரையாடினோம். வலியுறுத்தினோம். செவி மடுக்கவே இல்லை.
அரசாணை எண் 243 கொண்டு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்திய இரண்டு சங்கங்கள் மாநாட்டில் பங்கேற்று ‘நான் இருக்க பயமேன்’ என்ற வாக்குறுதியினையும் அளித்து அமைச்சர் பறைசாற்றி வந்துள்ளார்.
நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வில் சத்தியமங்கலம், தளி, தாளவாடி, மேட்டூர், ஏற்காடு மற்றும் குக்கிராமங்களில் உள்ள ஆசிரியர்கள் மாறுதல் பெற்று சென்று விட்டார்கள்.
140 பிள்ளைகள் படித்துவரும் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் ஓராசிரியர் கூட பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை.
ஒன்றியத்திற்கு 100,80,70,60 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசாணை எண்.243 படுத்தும் பாடு ?
அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் சுயநிதிப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று தானே கேட்கிறோம்? பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துங்கள்!
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய நிர்ணயம் செய்யும் வரை இடைக்கால நிவாரணம் PP யுடன் வழங்கிட வலியுறுத்துகிறோம்.
முடக்கப்பட்ட சரண் விடுப்புப் பயன் தொடரவேண்டும். ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு, பழைய நடைமுறைப்படியே மீண்டும் வழங்க வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்புதல் அளித்தபடி அரசாணைகள் வெளிவரவேண்டும்.
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாத்திட ஆசிரியர்கள் நியமனம் நிரந்தரம் அல்லது அனைத்து காலிப் பணியிடங்களிலும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்திட வேண்டும்.
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிதித்துறை அரசாணைப்படி தேர்வு நிலைக்கு வழங்கப்பட்ட ரூ.5400 தர ஊதிய தணிக்கைத் தடையினை உடன் இரத்து செய்து அறிவித்திட வேண்டும்.
உள்நோக்கத்துடன் தடை செய்யப்பட்டுள்ள தணிக்கைத் தடையினை உடன் இரத்து செய்திட வேண்டும்.
அனுமதி பெறாமல் கூடுதல் கல்வித் தகுதியினை உயர்த்திக் கொண்டவர்களின் பின்னேற்பு அனுமதி வழங்க வேண்டும். உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை கேட்டு டிட்டோஜாக் போராடி வருகிறது.
கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் இயேசுபிரான். சொன்னீங்களே! செய்தீங்களா! சொன்னதையே செய்யல! சொல்லாததையா செய்வீங்க! எங்களரசு, எங்களரசு என்றோமே ஏறெடுத்தும் பார்க்கலையே! நமது அரசு, நமது அரசு என்றோமே நம்பிகை இழந்து நிற்கிறோமே!
மூன்று நாள் முற்றுகைப் போராட்டத்திலும் அன்றாடம் 5 ஆயிரம் பேருக்கு குறையாமல் போர்க்களத்தில் நின்றிருக்கிறார்கள்.
3 நாள் 15 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்பு, தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் பங்கேற்றோர் 70 ஆயிரம் பேர் ஆவர்.
ஆகஸ்டு மாதத்திற்குள்ளாக முடிவு வருமா?
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் 30 ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் ஆகஸ்டு மாதத்திற்குள்ளாக அரசாணை எண் 243-க்கு தீர்வு காண முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இணக்கமான நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பொதுத் தேர்தல் அறிவிப்பு வரும் நாள் வரை ஆசிரியர்கள் போராட்டக் களத்தில் தான் நிற்க வேண்டுமா?
எங்கள் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண தொடரும் போராட்டமாகும்..!போராட்டமாகும்..!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தீர்வு காண முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
“நான் செய்யாமல் வேறு யார் உங்களுக்கு செய்யப் போகிறார்கள்” முதலமைச்சரின் சந்திப்பில் கேட்ட கொள்கை வரிகள்.
அரசின் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கத்தின் மூத்தப் பொறுப்பாளர்.
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் தமிழக ஆசிரியர் கூட்டணி,