யார் இந்த சேவை (SEVAI) கோவிந்தராஜூ ?
2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடமிருந்து ‘சிறந்த சேவைக்கான விருதை’ (Outstanding Service Award) தன்வயப்படுத்திய, சேவை (SEVAI) அமைப்பின் நிறுவனர் கே. கோவிந்தராஜு, பொது சேவையில் அரை நூற்றாண்டு காலத்தை அர்ப்பணித்தும் இன்றும் தொடர்ந்து வருகிறார்.
1952-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி, குளித்தலைக்கு அருகிலுள்ள மேலப்பட்டி கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் கிருஷ்ண ரெட்டியார் – போலம்மாள் தம்பதியினரின் மூத்த மகனாக பிறந்தவர்.

தனது சொந்தக் கிராமத்தில் தொடக்கக் கல்வியை முடித்தவர், பனிகம்பட்டியில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு நடந்தே சென்று பயின்றார். பின்னர் குளித்தலை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்தார். பிஷப் ஹீபர் கல்லூரியில் முன்-பல்கலைக்கழகக் (Pre-University) கல்வியையும்; திருச்சிராப்பள்ளி நேஷனல் கல்லூரியில் பட்டப் படிப்பையும் நிறைவு செய்தார். அவரது கல்வித் தாகம் தொடர்ந்து படிக்கத்தூண்டியது. தும்கூரில் உள்ள சித்தார்த்தா கல்வியியல் கல்லூரியில் பி.எட். (B.Ed.); தொலைதூரக் கல்வி மூலம் எம்.எஸ்சி. (M.Sc.) மற்றும் எம்.ஏ. (M.A.) பட்டங்களையும், பாரதிய வித்யா பவனில் இதழியல் துறையில் முதுகலை பட்டயப் படிப்பையும் (Post Graduate Diploma in Journalism) அடுத்தடுத்து முடித்தார்.
கல்லூரி படிப்பை நிறைவு செய்தவுடனே, 1975-ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள Village Reconstruction Organisation (கிராம மறுசீரமைப்பு அமைப்பு) நிறுவனத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக தனது சமூகப் பணிப் பயணத்தைத் தொடங்கியவர், நிலையான கிராமப்புற மேம்பாடு என்ற தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, 1984 -ஆம் ஆண்டில் SEVAI (சேவை) என்ற அமைப்பை ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
அவரது தலைமையின் கீழ், திருச்சிராப்பள்ளி, கரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ‘சேவை’ (SEVAI) அமைப்பு பன்முகத்தன்மை கொண்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சுகாதார வசதிகளுடன் கூடிய 4,000-க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகளைக் கட்டித் தந்தது; நீர்ப்பிடிப்புப் பகுதி மேலாண்மை; சுமார் 2,000 பெண்களுக்குத் தொழில்சார் கல்வி; மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பராமரிப்பு; பசுமை எரிசக்தித் திட்டங்கள்; இயற்கை விவசாயம், மூன்று பள்ளிகளை நிர்வகித்தல் மற்றும் பருவநிலை மாற்றத் தழுவல் திட்டங்கள் என எல்லையின்றி நாலாபுறமும் விரிகிறது, இவர்களின் பன்முகத்தன்மை வாய்ந்த பங்களிப்புகள்.
சமூக சேவை தொடர்பான ஆய்விற்காக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இவர், பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் அண்டை நாடுகளில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளார். இந்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ‘தொடர் கல்விக்கான மாநில வள மையத்தின்’ (State Resource Centre for Continuing Education) தலைவராகவும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான இந்திய அரசின் சுற்றுச்சூழல் குழுவில் நிபுணர் குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளாகத் திருச்சிராப்பள்ளி மாவட்ட நல நிதிக் குழுவின் பொருளாளராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.
இவரது சேவைகளைப் பாராட்டி, 2007-ஆம் ஆண்டில் CNRI அமைப்பால் ‘பாரத் சேவக் விருது’ (Bharat Sevak Award) வழங்கப்பட்டது. (இதனை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்); மேலும், 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடமிருந்து ‘சிறந்த சேவைக்கான விருது’ (Outstanding Service Award) இவருக்கு வழங்கப்பட்டது.
எளிய கிராமத்து பின்னணியிலிருந்து தேசிய அளவிலான சமூகத் தலைவராக உயர்ந்த சேவை கே. கோவிந்தராஜுவின் சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பு, இன்றைய தலைமுறையினருக்கான சிறந்த முன்னுதாரணம்!
– கிருஷ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.