பிரபல எழுத்தாளன் யார் ?
சுமார் 30 வருடங்கள் இருக்கும். ஒரு தினசரி மாலைப் பத்திரிகையில் வாரம்தோறும் இணைப்பாக 40 பக்க அளவில் ஒரு குறுநாவல் வெளியிட்டார்கள்.
நானும் ஒன்றை அவர்கள் பிரசுரத்திற்காக எழுதி அனுப்பினேன். மாதங்கள் கடந்தது. பதில் இல்லை. எனவே அதன் நிலை கேட்டு Reply Card ஒன்று அனுப்பினேன். பதில் வந்தது. அதில், ‘நாங்கள் பிரபலமானவர்கள் கதைகளை மட்டும் பிரசுரித்து வருகிறோம். அதனால் உங்கள் குறுநாவலை பாிசீலிக்க வாய்ப்பில்லை!” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அக்கடிதத்தில் ஆசிரியருக்காக என்ற இடத்தில் அழகான கையெழுத்து. இன்றைக்கு அந்தக் கையெழுத்துக்குரியவர் தற்போது பலரும் அறிந்த திரைப்பட பாடலாசியர்.
ஆயினும் அவர் வைரமுத்து அளவுக்கு மிக மிக பிரபலமானவர் அல்லர். ஒரு வேளை அவர் ஞானபீடம், சாகித்ய அகடாமி போன்ற விருதுகளுக்கு நூல்கள் பரிந்துரைத்து, அது என்ன ஆயிற்று எனக் கேட்டால் மிக மிக பிரபலமானவர்களுக்கு ம ட் டுமே நாங்கள் விருதுகள் அளிக்கிறோம் என்று பதில் தருவார்களாக இருக்கும்.
நிற்க, நான் அந்தக் குறு நாவல் எழுதின காலத்திற்கு முன்பே 100க்கும் மேற்பட்ட சிறு கதைகள் தாய், கல்கி, விகடன், சாவி, ஜன ரஞ்சனி, போன்ற இதழ்களில் எழுதி இருந்தேன். பிரபலம் என்பது எழுதும் பத்திரிகைகளிலோ, எழுதின கதைகளின் எண்ணிக்கைகளிலோ இல்லை என்று உணர்ந்த தருணம் அது. ஆகவே விருதுகளுக்கு ஆசைப்படும் எழுத்தாளர்களே நீங்கள் எத்தனை கூடைகள், பொதிமூட்டைகள் எழுதிக் கிழித்தீர்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல.
பால்ய வயசிலே யாரைப் பிடித்தால் பால புரஸ்கார் கிடைக்கும், இளைஞராக இருக்கும் போதே யாரின் கால் அமுக்கினால் யுவபுரஸ்கா கிடைக்கும், யாருடன் கூடிக் கூத்தடித்தால் சாகித்ய அகடாமி கிடைக்கும், யாருக்குத் தோல்பை சுமந்து மாநாடு நடத்தினால் பாரதீய ஞானபீடம் கிடைக்கும் என்பதை நீக்கமறத் தெரிந்து செய்து செயலாற்றி எழுதத் தொடங்குங்கள். அப்போதுதான் பிரபலப்பட்ட எழுத்தாளனாகி, பிரபலப்பட்ட விருதுக்குரியவனாகி மேதினியில் வைத்துக் கொண்டாடப்படுவீர்கள்.
– கா.சு. வேலாயுதன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.