தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியைச் சேர்ந்த முரளி.
24 வார்டுகளை கொண்ட துறையூர் நகராட்சியில் 10வது வார்டில் எதிர் தரப்பு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகி விட, அங்கு போட்டியிட்ட திமுக நகரச் செயலாளரான முரளி போட்டியின்றி வெற்றி பெற்று, தேர்தல் அலுவலரிடம் வெற்றிச் சான்றிதழையும் பெற்று விட்டார்.
கடந்த 2011-ல் இருந்து 2016 வரை, அப்போதிருந்த அதிமுக ஆட்சியின் போது, துறையூர் நகராட்சியை திமுக கைப்பற்றி, நகர்மன்ற தலைவராக முரளி தேர்ந் தெடுக்கப்பட்டார். தற்போது நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், முரளி நகர்மன்ற துணைத் தலைவராகக்கூடும் என்ற பேச்சு திமுகவினரிடையே பலமாக எழுந்துள்ளது. இந்நிலையில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் யார் நகர்மன்ற தலைவராக வருவார் என்பதே இப்போது ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக உள்ளது.
மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 17வது வார்டு சுமதி மதியழகன், 18வது வார்டு செல்வராணி மலர்மன்னன், 23வது வார்டு சுதா செங்குட்டுவன் உள்ளிட்ட மூன்று பேரில் ஒருவர் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
மூவரில் முதன்முறையாக போட்டியிடும் வேட்பாளர் சுமதியின் கணவர் மதியழகன் கட்சியின் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். 23வது வார்டில் போட்டியிடும் சுதா செங்குட்டுவன் ஒரு முறை நகர்மன்ற உறுப்பினராகவும், 18ம் வார்டில் போட்டியிடும் செல்வராணி மலர்மன் னன் 2முறை நகர்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள் ளனர். இந்நிலையில் யார் நகர்மன்ற தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டாலும் துணைத் தலைவரின், “ஆசியோடு” தான் செயல்பட முடியும் என்ற பேச்சும் துறையூர் திமுகவில் பலமாகவே எதிரொலிப்பதைக் காண முடிகிறது.