திருவையாறு: உதயசூரியன் உதிக்குமா? குக்கரில் – விசில் வருமா?
திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதி முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி. விவசாயக்கூலித் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. கனிசமாக சிறுபான்மையினரை கொண்ட தொகுதி. 2,56,377 வாக்காளர்களை கொண்ட தொகுதி.
திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், தே.ஜ.கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளராக வி.கார்த்திகேயன், நாம்தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் து.செந்தில்நாதன், த.வெ.க. சார்பில் மணிகண்டன் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரன் அடிப்படையில் வழக்கறிஞர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இதே தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றவர் என்ற வலுவான அடித்தளத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்கிறார். அரசியலில் நெளிவு சுளிவு தெரிந்தவர். தொகுதிக்கென்று பெரிதாக எதையும் செய்துவிடவில்லை என்ற போதிலும், அமைச்சர் கே.என்.நேருவின் ஆசியுடன் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்ற ராசியும் அவருக்கு சாதகமாக இருக்கிறது.
அமமுக கார்த்திகேயன் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவராக இருக்கிறார். கட்சி ரீதியில் தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்புகள் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று 37,469 வாக்குகளை பெற்றிருக்கிறார் என்பதும்; இதே தேர்தலில் பாஜக 49,560 வாக்குகளை பெற்றிருக்கிறது என்பதும் இவருக்கு ஆறுதலான விசயம்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பேராசிரியர் து.செந்தில்நாதன் படித்தவர். பண்பாளர். பொதுப்பிரச்சினைக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற நல்ல பெயர் இருந்தாலும் அவையெல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். முற்றிலும் புதிய முகமாக போதிய அரசியல் அனுபவம் இல்லாத விஜய் ரசிகரான மணிகண்டனுக்கு தொகுதி மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்துவிடுவார்கள் என்பதுதான் கேள்வி.
— தஞ்சை க.நடராசன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.