4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?

நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுபோல இடத்திற்குத் தகுந்தாற்போல குறி வைத்து செயல்படுகின்றன அரசியல் கட்சிகள்.

0

4 முனைப் போட்டியில யாருக்கு யார் எதிரி?

ல்லாக் கட்சிகளுக்கும் முன்பாக வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பா.ஜ.க.வையும் காங்கிரசையும் சீமான் விமர்சித்தாலும் அவருக்கும் அவர்களது தம்பிகளுக்கும் நம்பர் ஒன் எதிரி, தி.மு.க.தான். “திராவிடத்தை வீழ்த்துவோம் உறவே” என்பதுதான் அவர்களுடைய அசைன்மென்ட். திராவிடம் என்பது தி.மு.க. மட்டும்தான். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சித்தப்பா. சசிகலா, சின்னம்மா. அதனால், நாம் தமிழர் கட்சியின் முதன்மை இலக்கு, தி.மு.க எதிர்ப்பு.

https://businesstrichy.com/the-royal-mahal/

“சர்க்கரை எங்கேன்னா எறும்பு தின்னுடிச்சி. சாக்கு எங்கேன்னு கேட்டா எலி தின்னுடிச்சி” என்று சர்க்காரியா கமிஷன் விசாரணையில் சொன்னவர்தான் கருணாநிதி என்று அரை நூற்றாண்டு காலத்திற்கு முந்தைய விவகாரங்களை இந்தத் தேர்தல் களத்தில் பேசுகிறார் சீமான். இவையெல்லாம், அ.தி.மு.க. மேடையில் தி.மு.க.வை விமர்சிப்பதற்காகப் பேசப்பட்டவை. சர்க்காரியா அறிக்கையில் அப்படியான வாதங்கள் எதுவுமில்லை. தி.மு.க. மீது ஊழல் புகார் கொடுத்த எம்.ஜி.ஆரே, சர்க்காரியா கமிஷனில் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. சேலம் கண்ணன் என்பவர் என்னிடம் கொடுத்ததைத்தான் புகாராகக் கொடுத்தேன் என்றவர் எம்.ஜி.ஆர். ஆனாலும், எறும்பு, எலி என்று சீமான் வரை தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனத்திற்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளரான காளியம்மாள், “ஆயிரம் ரூபாய்க்கு பொறந்தவங்க” என்று தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை விமர்சித்து பரபரப்பை உண்டாக்கினார்.


பா.ஜ.க நேரடியாக தி.மு.க.வைக் குறிவைத்து தேர்தல் களத்தில் பரப்புரை செய்தாலும், அது குறிவைப்பது அ.தி.மு.க. ஓட்டுகளைத்தான். ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் போன்ற எடப்பாடி பழனிசாமியின் நேரடி அரசியல் எதிரிகளைத் தன் கூட்டணியில் பங்கேற்கச் செய்து வேட்பாளராக்கியிருப்பதுடன், அ.தி.மு.க.வில் அதிருப்தியாக இருந்த நிர்வாகிகள், அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் சமுதாயங்கள், ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றைத் தன் பக்கம் ஈர்ப்பதில்தான் பா.ஜ.க மிகத் தெளிவான கணக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் களத்தில், இரண்டாவது பெரிய கட்சி பா.ஜ.க.தான் எனக் காட்ட வேண்டும் என்பதே மோடி முதல் அண்ணாமலை வரையிலானவர்களின் கணக்கு. அதற்கேற்ப, அ.தி.மு.க. வாக்குவங்கியை சரிக்கும் வேலையை முன்னெடுத்து செயல்படுகிறார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC


“ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு விழுந்துவிடுமா?” என்று மோடியின் பரப்புரையை விமர்சித்திருப்பவர் வேறு யாருமல்ல, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே என்பது போல பழனிச்சாமியா இப்படி பேசியிருக்கிறார் என்று அரசியல் களம் ஆச்சரியப்பட்டது. அவ்வப்போது இப்படி சில முத்துகள் தவறி உதிர்ந்தாலும், அ.தி.மு.க.வுக்கு குறி எப்போதும் போல தி.மு.க.தான். சி.வி.சண்முகம் கொஞ்சம் உக்கிரமாக பா.ஜ.க.வைத் தாக்குவார். செல்லூர் ராஜூ மதுரைக்காரர்கள் பாணியில் பா.ஜ.க.வைக் கலாய்ப்பார். மற்றபடி, நேரடியாக மோடி அரசின் பத்தாண்டுகால செயல்பாடுகளையோ, பா.ஜ.க.வின் மதம் சார்ந்த அரசியலையோ அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் பேசுவதில்லை. இதைத்தான், கள்ளக்கூட்டணி என்று தி.மு.க. விமர்சிக்கிறது. அதனால், தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் கள்ளக்கூட்டணி என்று அ.தி.மு.க. மறுபடியும் தி.மு.க..வைத்தான் சீண்டுகிறதே தவிர, பா.ஜ.க. என்றால் பவ்யமாக ஓரங்கட்டிச் சென்று விடுகிறது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு அடுத்த கட்சி தாங்கள்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது அ.தி.மு.க.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy


பா.ம.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க,, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எல்லாமும் எதிரிதான். தேர்தலுக்குத் தேர்தல் பா.ம.க. எடுக்கும் கூட்டணி நிலைப்பாட்டை அ.தி.மு.க. கடுமையாக விமர்சிப்பதால், இந்த முறை பா.ம.க.வின் கடும் விமர்சனத்தை அ.தி.மு.க எதிர்கொள்கிறது. ஆனால், களத்தில் தி.மு.க.வும் விடுதலைச் சிறுத்தைகளையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது. அதனால், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., தாமரைப் போட்டியிடும் வடமாவட்டத் தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகளோ தி.மு.க.வோ ஜெயித்துவிடக்கூடாது என்று அ.தி.மு.க.வை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கிறது. கூட்டாளி ஜெயிக்காவிட்டாலும் எதிராளி ஜெயித்துவிடக்கூடாது என்பதே பாட்டாளிகளின் கணக்காக உள்ளது.


தே.மு.தி.க.வுக்குத் தனிப்பட்ட எதிரிகள் என்று யாரும் கிடையாது. எந்தக் கூட்டணியில் தங்களுக்கு அதிக சீட்டும் ராஜ்யசபாவும் ஒதுக்குகிறார்களோ அவர்களோடுதான் கூட்டணி என்று ஓப்பனாக அறிவித்தவர் பிரேமலதா விஜயகாந்த். அதனடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார். ஆனாலும், பா.ஜ.க. கூட்டணியைக் கடுமையாக விமர்சிப்பதில்லை. தி.மு.க. மீதான விமர்சனமும் ஓரளவுக்குத்தான். தேர்தல் செட்டில்மென்ட் எதிர்பார்த்தபடி அமைந்துவிட்டதால், இதுவே வெற்றிதான் என்ற மனநிலையில் பயணிக்கிறது தே.மு.தி.க.


தி.மு.க.வுக்கு களத்தில் எதிரி அ.தி.மு.க., கருத்தியலில் எதிரி பா.ஜ.க. அதனால், இரண்டையும் எதிர்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக்கூட்டத்தில் 30 நிமிடம் பேசினால் அதில் மோடி எதிர்ப்பும், எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பும் சரிசமமாக இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று தி.மு.க சொன்னாலும், பா.ஜ.க. மீதான கடுமையான விமர்சனங்களை வைத்தாக வேண்டிய சூழலில் உள்ளது. அ.தி.மு.க தனக்கு அடுத்த நிலையில் வலுவாக இருக்க வேண்டுமே என்ற கவலையும் தி.மு.க. தரப்பில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை சீண்டுவதன் மூலம், அ.தி.மு.க.வினர் தங்களின் வழக்கமான தி.மு.க. எதிர்ப்புணர்வுடன் தேர்தல் களத்தில் வேகம் காட்டட்டுமே என்று தி.மு.க. நினைக்கிறது.


காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிரிகள் வெளியில் இல்லை. சொந்தக் கட்சியில்தான் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் ராகுல்காந்தியும் மு.க.ஸ்டாலினும் பார்த்துக்கொள்வார்கள் என்பதால் மோடிக்கு எதிரான குரல்களை காங்கிரஸ் மேடைகளில் கேட்க முடிகிறது. மற்றபடி அங்கே சீரியஸாக எதுவுமில்லை.


கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் கட்சிகள் ஆகிய தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கொள்கை ரீதியாகவே பா.ஜ.க.வுக்கு எதிரானவைதான். அதனால், மோடி ஆட்சியின் அவலங்களை அதிகம் பேசுகின்றன இந்தக் கட்சிகள். தமிழ்நாட்டு மேடைகளில் காங்கிரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்டுகள், பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுபோல இடத்திற்குத் தகுந்தாற்போல குறி வைத்து செயல்படுகின்றன அரசியல் கட்சிகள்.

திருமொழி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.