துணை சபாநாயகர் ஓரம் கட்டப்படுகிறாரா?
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ரவிசங்கர் பங்கேற்காதது சர்ச்சை — பதாகைகளிலும் படம் இடம் பெறாததால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் முத்தம்பாளையம் பகுதியில் தனியார் தானிய சேமிப்பு கிடங்கை அரசு வாடகைக்கு எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கட்டிட உரிமையாளரும், அரசுத் தரப்பினரும் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் கலந்து கொண்டார். மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துறையூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
மேலும், அமைச்சர் வருகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளில் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கரின் படம் இடம் பெறாததும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
ஒரே நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற நிலையில், துறையூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் பங்கேற்காதது ஏன்? அவருக்கு நிகழ்ச்சி குறித்து முறையான அழைப்பு வழங்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.







Comments are closed, but trackbacks and pingbacks are open.