விலகிச் செல்லும்போது ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்
தன் கட்சியின் எதிர்கால நலனுக்கு எது உகந்தது; எது குறைந்த சேதாரம் கொண்டது என மதிப்பிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது விசிக. அது முழுக்க, முழுக்க அவர்களின் உரிமை. அதை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் அதில் நாகரீகம் வேண்டும். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சும், ஆ.ராசாவின் இந்த கருத்தும் அநாகரீகத்தின் உச்சம்.
இத்தனை ஆண்டுகள் உடன் பயணித்த ஓர் கூட்டணி கட்சி, ஒரு சிக்கலான நேரத்தில் விலகிச் செல்லும்போது அந்த விடைபெறலில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். காங்கிரஸை ஒப்பிடும்போது விசிக அந்த கண்ணியத்தை காப்பாற்றியுள்ளது என்றே கருதுகிறேன்.
கீழே இருக்கும் தொண்டர்கள் இரு தரப்பிலும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடலாம். மேலே இருக்கும் தலைவர்கள் நிதானம் இழக்கலாகாது. சிந்தனைச் செல்வனின் பதிவைப் பாருங்கள். அதில் கையறு நிலையும், கணத்த மனதும் நிரம்பியிருக்கிறது. ஆ.ராசாவிடம் வெளிப்படுவது, வீழ்ச்சி அடைந்த பெரிய மனிதனின் சாபம்.
விசிக-வுக்கு இது ஒரு வரலாற்று வாய்ப்பு என அவர்கள் கருதலாம். அதிகார தாழ்வாரத்தின் பல கதவுகளை இதன் மூலம் திறக்க முடியும் என திட்டமிடலாம். அதற்கு விசிக கொடுக்கும் விலை, அதன் நம்பகத்தன்மை, நற்பெயர். ஆனால் யதார்த்தத்தில் நல்ல பெயரை வைத்துக்கொண்டு ஒரு தட்கல் டிக்கெட் கூட புக் செய்ய முடியாது. அதிகாரம் வேண்டும். அந்த ஏணியில் சிறுத்தைகள் ஏறட்டும். ஏணியை பிடித்திருக்கும் ஆதவ் அர்ஜுனா மாதிரியாம நபர்களும், மொத்தத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் பாஜக-வும் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. அதை எதிர்கொண்டு, அதிகார படிநிலையில் மேலும் சில இடங்களைக் கைப்பற்றி விசிக-வின் வளர்ச்சியையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அது நடக்கும் என நம்புவோம்.
பாரதி தம்பி








Comments are closed, but trackbacks and pingbacks are open.