பொய்யாட்டம்
விசிக, காங்கிரஸ், ஐ.யு.எம்.எல் அமைச்சரவையில் இணைவதுடன் தவெக தன்னை ஒரு திமுக குளோன் கட்சியாக மாற்றிக் கொண்டு விடும். திமுகவின் அரசியலைப் பேசிக் கொண்டே தன்னை இன்னும் ஸ்டைலான திமுகவாகவும் எதிர்-திமுகவாகவும் காட்டும். அத்தோடு, இனிமேல் தவெகவை எதிர்க்கும் பொறுப்பை (அதாவது எதிர்க்கட்சி அந்தஸ்தை) பாஜக எடுத்துக் கொள்ளும். ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டும் இருப்பதாலும், அதிமுக ஏற்கனவே தவெக ‘கூட்டணியில்’ உள்ளதாலும் (என்னவொரு குழப்பம் ஐயா) அவர்கள் தம்மை எதிர்க்கட்சி என்றும் கோர மாட்டார்கள். ஆனால் அப்படியே பாவனை செய்வார்கள். இப்போதே ஒரு பக்கம் பாஜக ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தவெகவை ஆதரிப்பதையும் இன்னொரு பக்கம் சாடுவதையும் பார்க்க முடியும். இதெல்லாம் தெளிவாக அவர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது.
தவெக திமுக பொய்யுருவம் 1 என்றால் பாஜக திமுக பொய்யுருவம் 2. இந்த இரண்டு நகல்களும் இனி மோதிக் கொள்வதே நம் களமாக இருக்கும். இந்த மோதலும் நிஜ மோதல் அல்ல. ஒருவித நடிப்புதான். இதை ஒரு ‘பரவச அனுபவமாக’ நம் மீடியா மாற்றும்.
என்ன சிக்கல் என்றால் தவெகவை இனி யார் விமர்சித்தாலும் அவர்கள் இந்த பொய்யாட்டத்தின் பகுதியாக வேண்டி இருக்கும். அதை பாஜக ஹைஜேக் பண்ணும். ஒரு திமுக அனுதாபி பாஜகவை எதிர்த்துக் கொண்டே தவெகவை எதிர்ப்பார். ஒரு பாஜக அனுதாபி பாஜகவை ஆதரித்துக் கொண்டே திமுகவையும் தவெகவையும் எதிர்ப்பார். இந்த இரு தரப்பினரும் கூடவே விசக, காங்கிரஸையும் எதிர்க்க வேண்டியிருக்கும். ஆனால் விசிகவும் காங்கிரஸும் கொள்கையளவில் திமுகவுக்கும் தம்மை எதிர்ப்போருக்கும் இணக்கமாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு பயங்கர குழப்பமாக இருக்கும்.
திமுகவை குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்ட கட்சியாகவும் ஒரு எதிர்கட்சியாகவும் போலச் செய்து அபகரித்து அகற்றுவதே அவர்களுடைய செயல்திட்டம்.
— அபிலாஷ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.