”தாயை கடவுளாக வணங்குவதைவிட மனுஷியாக மதிப்பதே சிறந்தது” -’நூறு சாமி’யில் சசி சொல்லும் சேதி!
‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ பேனரில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி தயாரித்து சசி டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ‘நூறு சாமி’. இதில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், பாலாஜி சக்திவேல், காவ்யா அனில் அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : எஸ்.பி.தர்ஷன் கிர்லோஸ். இசையமைப்பாளராக பாலாஜி ஸ்ரீராம் அறிமுகமாகிறார். வரும் 19-ஆம் தேதி ‘நூறு சாமி’ ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூன்.12-ஆம் தேதி இரவு நடந்தது.
விழாவிற்கு டைரக்டர்கள் வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, சரண், கார்த்திக் சுப்புராஜ் மந்திரமூர்த்தி, பா.இரஞ்சித், மிஷ்கின், சுப்பிரமணிய சிவா, வி.இசட்.துரை, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சி.வி.குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்து படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
ஏற்கனவே டைரக்டர் சசியால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.குமரன், சிமோன், சித்துகுமார் ஆகியோர், ‘நூறுசாமி’யில் அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை அறிமுகப்படுத்தி வாழ்த்தினார்கள். அதன் பின் நிகழ்ச்சியில் பேசியவர்கள்….
வெற்றிமாறன், “தனது எல்லாப் படங்களையும் முதல் படம் இயக்குவது போல முழு அர்ப்பணிப்புடன் இயக்குபவர் சசி. நானும் அவரும் கதிரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர்கள். இந்தப் படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது”.
பா.இரஞ்சித், “இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ள விஷயங்களுக்கு இன்றைக்கும் வேல்யூ இருக்கு. அதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய தேவையும் இருக்கு”
ஏ.ஆர்.முருகதாஸ், “எனது சொந்த ஊரில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம். இதை தயாரித்து நடிக்க ஒத்துக் கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி. படத்தின் க்ளைமாக்ஸ் சீனைப் பார்த்த போது ஏதாவது தப்பு நடந்திருமோ எனபயந்தேன். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த சீனை முடித்திருக்கிறார் டைரக்டர் சசி”.
ராஜுமுருகன், “கள்ளக்காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால், பின்னூட்டத்தில் அப்பெண்ணைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது. அடேங்கப்பா..நாட்டில் கலாச்சாரக்காவலர்கள் அதிகமாகிவிட்டார்களோ என நினைப்பேன். ஆனால் அப்படிப்பட்டவர்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்த நூறுசாமி படம் மிகவும் முக்கியமான படம்”.
மற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் டைரக்டர் சசி குறித்தும் நடிகர் விஜய் ஆண்டனி குறித்தும் படத்தின் சிறப்புகள் குறித்தும் பெருமிதம் பொங்க வாழ்த்திப் பேசினார்கள்.
டைரக்டர் சசி பேசும் போது, “தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஒரு அம்மாவும் மகனும் பகிர்ந்து கொண்ட விஷயங்களைத் தான் நூறு சாமியாக்கியுள்ளேன். இந்தக் கதையின் நிஜ நபரான பாஸ்கரையும் இந்த விழாவிற்கு அழைத்து வந்திருக்கிறேன். பிச்சைக்காரனில் தாயை தெய்வமாக பார்த்தான் ஹீரோ. இதில் மனுஷியாக பார்க்கிறான். இந்தக் கதையின் கடைசி நாற்பது நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருவார். இதை அவரிடம் சொன்ன போது, உங்க கதையில ஒரு காட்சி என்றாலும் எனக்கு ஓகே என்றார் அவர். அத்துடன் முதலீடு பண்ணி படத்தையும் தயாரித்த விஜய் ஆண்டனி சாருக்கு மிகவும் நன்றி”.
விஜய் ஆண்டனி, “டிஷ்யூம்’ படத்தில் இசையமைப்பாளராக என்னை அறிமுகம் செய்தவர் சசி சார். பிச்சைக்காரன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொடுத்தார். இந்த நூறு சாமி மூலம் லவ்வர் பாயாக மாற்றியிருக்கிறார். இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் சசி சார் தான். ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம் தான் இந்த ‘நூறு சாமி”.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.