“வான்புகழ் கொண்ட” தமிழ்நாடு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.
கடந்த மே 10ஆம் நாள் தமிழ்நாட்டில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதை தொடர்ந்து, பேரவை மரபின்படி அவை முன்னவர் மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் உங்களின் கரங்களைப் பற்றி கொண்டு, அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். அவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் நீங்கள் செயல்படவேண்டும் என்பதற்கான நடைமுறை இந்தப் பேரவையிலும் பின்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் நாள் தவெக அரசின் மீது நம்பிக்கை வாக்கு கோரப்பட்டது. அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக உறுப்பினர்கள் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி வாக்களித்தனர்.
இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த மனுக்களின் மீது நீண்டநாள் முடிவெடுக்காமல் காலம் கடத்தினீர்கள். அது பற்றி பேசும்போது, அதிமுக இரண்டு குழுவாகப் (ஒரு குழு தலைவர் – பழனிசாமி, கொறடா – அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றொரு குழு தலைவர் – எஸ்.வேலுமணி, கொறடா – விராலிமலை விஜயபாஸ்கர்) பிரிந்து எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்நிலையில் நீண்ட பரிசீலனைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்கமுடியும் என்று தெரிவித்திருந்தீர்கள்.
நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் ஜூன் 9-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கொறடா உத்தரவை மீறிய இந்த 25 உறுப்பினர்களையும் அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின்படி (கட்சித் தாவல் தடைச் சட்டம்) தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று மே 13 மாலையிலேயே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்தார்.
அதன் பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட சமரசப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கடிதம் அளித்தனர்.
21 சட்டமன்ற உறுப்பினர்களின் மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் மீதான தகுதிநீக்கப் புகாரை மீட்டுக் கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு தனித்தனியாக 4 கடிதங்களை அனுப்பியிருந்தார். அக்கடிதங்களைச் சட்டப்பேரவை விதிகளின்படி பரிசீலித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிடுவதாக (Condonation) அறிவித்தார்.
இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை) – இவர்கள் நால்வரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டதால், இவர்கள் மீதான தகுதிநீக்க மேல்நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ விசாரணைகள் சபாநாயகரால் தனியாகத் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று அறிவிப்பை வெளியிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களாகிய எங்களுக்கு எழும் கேள்விகள் என்னவென்றால்,
- பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அங்கீகரிக்கப்பட்டபோது, அதிமுகவின் குழுத் தலைவராகப் பழனிசாமியும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஏன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கொடுத்த மடலின்படி தகுதி நீக்கம் என்று அறிவிக்கச் சட்டப் பேரவை விதிகளில் எங்கே இடம் இருக்கிறது? அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர், கொறடா வேண்டுகோளின்படிதான் நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.
- 25 பேரில் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை என்கிறபோது, உங்களின் அறிவிப்பு முன்னரே 4 பேர் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்துவிட்டனர். அவர்களின் விலகலைப் பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையம் அந்த 4 இடங்களும் காலியாக உள்ளதாகவும் அறிவித்து விட்டது.
- தற்போது நீங்கள், “அதிமுகவிலிருந்து விலகிய உங்கள் 4 பேர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்று நோட்டீஸ் வழங்கியுள்ளீர்கள். உங்களின் உத்தரவை மீறி நீங்களே இந்த நடவடிக்கையை எடுப்பதால் என்ன பயன் விளையப்போகின்றது? புரியவில்லை.
- முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு குறிப்பிடுவதுபோல், “இதுவரை நீங்கள் பழனிசாமியை அதிமுக குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கொறடாவாகவும் அங்கீகரிக்கவில்லை என்றால், அதிமுகவின் இன்னொரு குழுத் தலைவர் வேலுமணி, கொறடா விஜயபாஸ்கர் அளித்த வேண்டுகோள் இன்னும் பரிசீலனையில்தான் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மே 13ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரையிலான தங்களின் செயல்பாடுகளில் நடுநிலைமை தவறித் தவெக அரசுக்கு ஆதரவாகத் தாங்கள் அரசியல் செய்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. பேரவைத் தலைவர் என்னும் பொறுப்புக்கு என்று அரசியல் களத்தில் தனித்த உயரிய மரியாதை உள்ளது. அரசியல் கட்சிகள் அரசியல் செய்யட்டும். பேரவைத் தலைவர் என்ற முறையில் தாங்கள் நடுநிலைமையோடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்ளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். நன்றி.
தமிழன்புடன், ஆதவன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.