சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள்பிரகாசம் மருத்துவமனையில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேன்டீனில் ஆய்வு மேற்கொண்ட அவர், கேன்டீனை யார் நடத்துகின்றனர், யார் ஒப்பந்தம் எடுத்துள்ளனர் என்பது தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், கேன்டீனின் உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட முழுமையான விவரங்களைத் தொகுத்து சமர்ப்பிக்குமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். உணவை உட்கொண்டு நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளுமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், மருத்துவமனை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.