தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026-ஐ முன்னிட்டு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை
விரிவாக்கத்துறை – செப்பர்டு, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆகியவை இணைந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026-ஐ முன்னிட்டு, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டி மையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர், செயலர் மற்றும் முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருட்முனைவர் சகாயராஜ், சே.ச. அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். அவர், “செப்பர்டு விரிவாக்கத்துறையின் கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரி மாணவர்கள் தாங்கள் உயர்கல்வியில் கற்றதை பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்து அவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணரச் செய்ய வேண்டும்.
மேலும் இப்பயிற்சியைப் பெறுவதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு ‘வழிகாட்டி ஆசிரியர்‘ என்ற தகுதியும் சான்றிதழும் கிடைக்கும். இது அவர்களின் உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பயனுள்ளதாக அமையும்” என்று கூறினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் பேரா. முனைவர் அருண் விவேக் அவர்கள், அறிவியல் ஆய்வுத் திட்ட அணுகுமுறை, செய்முறைச் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் மேம்பாடு, எரிசக்தி மேலாண்மை, நீர் மேலாண்மை, உணவு, வேளாண்மை, சுகாதாரம் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் மற்றும் புதிய நீடித்த நிலையான தீர்வுகள் குறித்து பயிற்றுவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், இத்திட்டத்தில் பங்கேற்க அறிவியல் சிந்தனையில் ஆர்வமுள்ள 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும், இடைநின்ற மாணவர்களும் தகுதி பெறுவர். கிராம மற்றும் நகர வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அவர்களைத் தயார்படுத்த வேண்டும் என்றும் பயிற்சி அளித்தார்.திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணைச் செயலாளர் பேரா. முனைவர் ஜானி குமார் தாகூர், இந்திய பாரம்பரிய அறிவியல் சிந்தனைகளைப் பாதுகாக்கும் வகையிலும் பரவலாக்கும் வகையிலும் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, தங்களின் அறிவியல் செய்முறை மாதிரிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர வேண்டும் என்று கூறினார்.
இத்திட்டத்தில் வழிகாட்டி ஆசிரியர்களான கல்லூரி மாணவர்களையும், இளம் விஞ்ஞானிகளாகப் பங்கேற்கும் பள்ளி மாணவர்களையும் இணையவழியில் பதிவு செய்தல் மற்றும் ஆவணங்களைச் சமர்பித்தல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.இப்பயிற்சிப் பட்டறையில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டது. முன்னதாக வந்திருந்தவர்களை ஒருங்கிணைப்பாளர் யசோதை வரவேற்றார். நிறைவாக ஒருங்கிணைப்பாளர் ரட்சனா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் தொகுத்து வழங்கினார். இளங்கலை மற்றும் முதுகலை என 10 துறைகளைச் சார்ந்த 97 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன், ஜோசப், கிறிஸ்துராஜா, சுதாகர் மற்றும் அலுவலக உதவியாளர் அமலேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.