நியோமேக்ஸ் : செட்டில்மென்ட் எப்போது ? நீதியரசர் சொன்ன அந்த வார்த்தை !
ஜூலை-07 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பு கருத்துகளை முன்வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் செல்வி நேத்ரா முதல்முறையாக ஆஜராகியிருந்தார்.
டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நியோமேக்ஸ் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு வார காலத்துக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறார். ஏலநடைமுறையை பொறுத்து இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
புதியதாக 15 சொத்துகள் ஏலத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். ஏற்கெனவே, தயாராக உள்ள பட்டியலுடன் இந்த சொத்துக்களும் சேர்ந்து ஒரே அறிவிப்பாக வெளியாகும்.
மதுரை சொர்ணபூரி ஹில்டாப் சொத்துக்களை பார்வையிட அதன் உரிமையாளர் என்று கூறிக்கொண்டு விஷால் ப்ரோமோட்டர்ஸ் இளங்கோவன் தடுப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் இதற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று நீதியரசர் அறிவுறுத்தியுள்ளார்.
கும்பகோணத்தை சேர்ந்த ராஜா என்பவர் தனக்கு முன்ஜாமீன் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரும் அவரது மனைவி கலையரசி, மகன் பரணிதரன் அவரது மனைவி கீதா ஆகியோர் சேர்ந்து ஏஜெண்டுகளாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் பெயரில் பினாமி சொத்துக்கள் உள்ளது. ஆகவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சார்பில் வழக்கறிஞர் ரஜினி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேவக்கோட்டையை சேர்ந்த டி.அருள் மற்றும் பழனிவேல் என்பவர்கள் ஏ.எச்.ப்ரோமோட்டர்ஸ் என்ற பெயரில் நடத்தி வந்த நிறுவனத்தை திட்டமிட்டு வழக்கிலிருந்து மறைத்துவிட்டார்கள். இதுவும் நியோமேக்ஸ் குரூப்ஸ் நிறுவனம்தான். இவர்கள் தற்போது பல்வேறு சொத்துக்களை விற்று வருகிறார்கள் என்பதாக, தேனி சங்கத்தின் சார்பில் மணிகண்டன் நீதிமன்றத்தில் பார்ட்டி இன் பெர்சனாக தனது வாதத்தை வைத்தார்.
நிறைவாக, ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிறைக்கு அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில், முதல் இரண்டு மாதங்கள் ஏலநடைமுறை குறித்தும்; அடுத்த இரண்டு மாதங்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பது குறித்தும்தான் நீதிமன்றத்தின் கவனம் இருக்கும் என்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார். நீதியரசரின் இந்த வார்த்தைகள்தான் தற்போது, தீர்வுக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் தரும் தகவலாக அமைந்திருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.