ஆயுள் தண்டனைக் கைதிகளுக்காவது, அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் சிறையிலிருந்து சுதந்திர பறவையாக சிறகடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. தண்டனை காலத்தில் சிறைக்குள்ளாகவே, தொழிற்படிப்புகளையும், இரண்டு மூன்று டிகிரிகளையும் கூட பெற்றுவிடும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற எந்தவிதமான வாய்ப்புகளும் அற்ற, சிறப்பு ரக கைதிகளும் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படித்தான் புலம்புகிறார்கள் இரண்டாம் நிலை காவலர்களான அந்த “காக்கி கைதிகள்” !
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. வரிசையில் சீருடைப்பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் சீருடைப்பணியாளர்கள் தேர்வு வாரியம். இதன் கீழ், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு போலீசார், தீயணைப்புத்துறை போலீசார், சிறைத்துறை போலீசார் ஆகியோரை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இரண்டாம் நிலை காவலர்கள் என்ற தகுதியில் இம்மூன்று துறைகளுக்கும் ஒரே கல்வித்தகுதி; ஒரே மதிப்பீட்டு முறைதான். ஒரே மாதிரியான உடற்தகுதித்தேர்வு மற்றும் ஒரே மாதிரியான அடிப்படை பயிற்சிகள்தான். இவர்களுக்கான சம்பளமும்கூட ஒரே அலகுதான்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு போலீசில் பணியாற்றும் ஒரு இரண்டாம் நிலை காவலர் 10 ஆண்டு பணி அனுபவத்துடன் முதல்நிலை காவலராகவும்; அடுத்த ஐந்தாண்டுகளில் தலைமைக்காவலராகவும்; அதற்கடுத்த பத்தாண்டுகளில் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பதவி உயர்வை பெற முடியும். தீயணைப்புத்துறையிலும், 25 ஆண்டுகால நிறைவில் சிறப்பு உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் பதவியை பிடித்து விட முடியும். ஆனால், ஆனால், பணியில் சேரும்போது எப்படி ஏட்டையாவாக உள்ளே நுழைந்தோமா, அதே ஏட்டையாவாகத்தான் பணிநிறைவு செய்தும் வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலையை எதிர்கொண்டிருக்கிறோம் என்பதாக துயரப்படுகிறார்கள் சிறைத்துறை போலீசார்கள்.
தமிழகத்தில் தற்போது 9 மத்திய சிறைகள்; 14 மாவட்ட சிறைகள்; 9 மகளிர் சிறைகள்; 105 கிளைச்சிறைகள்; மற்றும் 3 திறந்த வெளிச்சிறைகள் இயங்கி வரும் நிலையில், இதில் சற்றேறக்குறைய 9000 தண்டனைக் கைதிகளும்; 13,000 விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களை கண்காணித்து முறைப்படுத்த இரண்டாம்நிலைக் காவலர்கள் 2090 பேர்; முதல்நிலைக் காவலர்கள் 1040 பேர்; முதல் தலைமைக்காவலர் 520 பேர்; உதவி சிறை அலுவலர் 260 பேர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டு 5468 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
தொடர்ந்து 25 ஆண்டுகள் சிறைத்துறையில் பணியாற்றி, உதவி சிறை அலுவலர்களாக பதவி உயர்வு பெறும் தகுதியைப் பெற்றாலும், 2090 பேரில் வெறும் 260 பேருக்குத்தான் அதாவது 10% பேருக்குத்தான் பதவி உயர்வுக்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த முரண்பாட்டை களையும் விதமாகத்தான், இரண்டாம்நிலை காவலர்களுக்கான கணிசமான பணியிடங்களை மீண்டும் அரசிடமே ஒப்புவித்துவிட்டு, அதற்கு நிகராக உதவி சிறை அலுவலர்களுக்கான பணியிடங்களை உயர்த்திப் பெற்றது சிறைத்துறை. இதன் நோக்கம், சிறைத்துறையிலேயே ஏட்டையாவாகவே கால் நூற்றாண்டு காலம் தள்ளிய நிலையில், கடைசி காலத்திலாவது கௌரவமான உதவி சிறை அலுவலர் பணிவாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதிலும் கட்டையைப் போட்ட தமிழக அரசு, புதியதாக உயர்த்தப்பட்ட உதவி சிறை அலுவலர் காலி பணியிடங்களை போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் நேரடி நியமனம் வழியாக நிரப்பிவிட்டது.
இதன்படி, கடந்த 2004 இல் நேரடி நியமனமாக உதவி சிறை அலுவலர்களாக சிறைத்துறையில் கால் வைத்தவர்கள் சிறைத்துறை துணைத்தலைவர், சிறைத்துறை தலைவர் வரையில் பதவி உயர்வை எட்டிவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கும் முன்பாக சிறைக்குள் நுழைந்த இரண்டாம் நிலைக் காவலர்கள் அதே குண்டு சட்டிக்குள், பாவப்பட்ட கைதிகளாய், காக்கி கைதிகளாய் சிறைபட்டுக்கிடக்கிறார்கள். இவர்களின் வாழ்நாள் ஏக்கம் கோட்டையை எப்போது எட்டும் ?
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.