அஜயன் பாலாவின் படைப்புகள் அதிகாரத்தைக் கட்டுடைப்பவை : காந்திகிராமப் பல்கலைத் தமிழ்த்துறை நிகழ்வில் எழுத்தாளர் நட.சிவக்குமார் உரை.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பாக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு 25.08.2026 அன்று தமிழ்த்துறையின் குறள் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சி.சிதம்பரம் வரவேற்புரை ஆற்றினார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் முன்னிலை வகித்தார். தமிழ், இந்தி, இந்திய மொழிகள் புலத்தின் முதன்மையர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது தலைமையுரையில் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடத்தப்படுவதன் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு “எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளை புதிய எழுத்தாளர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் ஒரு எழுத்தாளரின் படைப்புகள் குறித்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அறக்கட்டளை நிறுவனரான சுப்ரபாரதிமணியன், இன்றைய உரையாளர் நட.சிவக்குமார், அஜயன் பாலா ஆகிய மூவரது படைப்புகளும் தவிர்க்க இயலாத இடத்தைப் பெறுபவை” என்றார். குமாரகோயில் நூருல் இஸ்லாம் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் நட.சிவக்குமார் “அஜயன் பாலாவின் படைப்புலகம்” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவர் தனது உரையில் “அஜயன் பாலா திரைத்துறையில் இயங்குவதோடு சிறந்த இலக்கியவாதியாகவும் எழுத்தாளராகவும் திகழ்கிறார். அவரது சிறுகதைகள் அதிகாரத்தைக் கட்டுடைப்பவையாக அவற்றைக் குறியீட்டு நிலையில் உணர்த்துபவையாக உள்ளன. விளிம்புநிலை மக்களுக்கான படைப்பாகவும் அவரது படைப்புகள் காணப்படுகின்றன“ என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவில் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான அஜயன் பாலா காணொளி வாயிலாகப் பங்கேற்று ஏற்புரை வழங்கினார். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் கி.சிவா நன்றியுரை வழங்கினார். தமிழ் மற்றும் இந்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.