தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தீர்வை எட்ட முடியாமல் தவித்துவரும் வழக்குகளில் ஒன்றாகிப்போன, கலைமகள் சபா விவகாரத்தில், கலைமகள் சபாவின் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல், எங்களது சொத்துக்களை எப்படி விற்பணைக்கு கொண்டு வரலாம்? எங்களுக்கு நிலமாகவே பிரித்துக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் பலரும் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், கைவசம் உள்ள சொத்துக்களையும் சிலர் ஆக்கிரமித்து வருவதாக குற்றஞ்சாட்டு எழுந்திருக்கிறது.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்பட் – ஆரணி செல்லும் சாலையில், SSS மகளிர் கல்லூரி எதிரில் சுமார் 15 ஏக்கர் அளவுள்ள காலியிடத்தை பாதுகாத்து கலைமகள் சபா நிர்வாகம் “கலைமகள் சபாவுக்கு சொந்தமான இடம்” என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், பெயர்ப்பலகையை மஞ்சள் வண்ணம் பூசி அழித்திருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார், கலைமகள் சபா உறுப்பினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர்.
தமிழகத்தில் 33 மாவட்டங்களிலும், பெங்களூரு, மைசூர் மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 3880 பத்திரப்பதிவு ஆவணங்களின் அடிப்படையில், சுமார் 12,461.06 ஏக்கர் அளவுக்கு நிலங்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒருநபர் ஆணையம் மற்றும் கலைமகள் சபாவின் சிறப்பு அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். ஆகியோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வை நடத்திவரும் நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுபோன்ற, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கலைமகள் சபாவின் சொத்துக்களை மீட்டெடுப்பதே, ஒரு நபர் ஆணையத்தின் பெரும் தலைவலி பிடித்த விவகாரமாக மாறியிருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.