அறப்பணிகள் பெரும்பாலும் எத்தனை இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டன என்பதைக் கொண்டே மதிப்பிடப்படும் இக்காலத்தில், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. உண்மையான சேவை என்றால் என்ன?
பலரைப் பொறுத்தவரை, சேவை என்பது வெறும் இலைகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது போன்றதாகிவிட்டது. ஒரு நாள் பசுமையாக இருக்கும். அடுத்த நாளே வாடிவிடும். ஆனால், “வேருக்கு உரமிட்டு மரத்தை வளர்ப்பதே உண்மையான சேவை; கொடுப்பதில் மகிழ்ச்சி, வளர்ப்பதில் பெருமிதம்” — என்ற இந்தக் கோட்பாடுதான் இன்று உண்மையான அறப்பணியை மறுவரையறை செய்து வருகிறது.
சேவை என்பதை பொறுத்தமட்டில், இரண்டு மாதிரிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்று நிவாரணம் மற்றொன்று அதிகாரமளித்தல். நிவாரணம் என்பது நோட்டுப் புத்தகம், உணவுப் பொட்டலம் அல்லது மருத்துவ முகாம் என எதுவாக இருந்தாலும் உடனடித் தேவைக்கு உதவுவது. ஆனால், அது தற்காலிகமானது. அதிகாரமளித்தல் என்பது நிரந்தரமானது. ஒரு குழந்தைக்குக் கற்றுக்கொள்ளக் கற்றுக்கொடுப்பது, ஒரு பெண் தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான திறன்களை வழங்குவது அல்லது ஒரு சமூகத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை இதில் அடங்கும்.

இரண்டாவது வகை மாதிரிக்கு பொருத்தமான நடைமுறை சான்றாக களமாடி வருபவர்தான், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் SEVAI அமைப்பின் இயக்குனர் கே. கோவிந்தராஜு. “ஒரு அமைப்பு பயனாளிகளை உருவாக்கக் கூடாது; மாறாக, சுயசார்பு கொண்ட குடிமக்களை உருவாக்க வேண்டும்.” என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்து வருகிறது.
”உண்மையான சேவை மூன்று தூண்களின் மீது நிற்கிறது. முதலாவதாக, அது பிரச்சினையின் வெளிப்படையான அறிகுறியை மட்டும் கவனிக்காமல், அதன் வேர்வரை சென்று மூல காரணத்தைக் கையாள்கிறது. இரண்டாவதாக, அது நிலைத்தன்மை கொண்டது . வளர்ந்த மரத்தைப் போல, தோட்டக்காரர் சென்ற பிறகும் அது தானாகவே நிமிர்ந்து நின்று மற்றவர்களுக்கு நிழல் தருகிறது. மூன்றாவதாக, எவ்வளவு கொடுக்கிறோம் என்பதில் அல்ல, மக்கள் எவ்வளவு வளர்ச்சியடைகிறார்கள் என்பதில்தான் அது மகிழ்ச்சியைக் காண்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், அறக்கட்டளைகள் வெறும் ‘கொடையாளர்களாக’ மட்டும் இல்லாமல் ‘தோட்டக்காரர்களாக’ மாற வேண்டும். பொறுமையுடன் செடிகளைப் பராமரித்து, அந்தத் தோட்டம் தானாகவே மலரும்போது அதைக் கொண்டாட வேண்டும்.” என்கிறார், SEVAI அமைப்பின் இயக்குனர் கே. கோவிந்தராஜு.
புகைப்படங்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்படுவதா, சேவை? நிச்சயமாக இல்லை; அது மாற்றமடைந்த மனித வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது.
கிருஷ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.