ஐந்து மாநிலங்களில் மாநிலப் பறவையாக இருப்பது எந்தப்பறவை தெரியுமா?
இதை நம்மூரில் பனங்காடை என்று சொல்வார்கள். மேலும், இதற்கு காட்டுக்காடை, கோட்டைக்கிளி, நீலகந்தா, பால் குருவி, பாற்குருவி, துலுக்கமைனா, பாலக்குருவி… என்கிற பெயர்களுமுண்டு. ஆங்கிலத்தில் – Indian roller. (Coracias benghalensis) என்பார்கள்.
ஐந்து மாநிலத்தின் மாநில பறவையான இவரை விவசாயின் நண்பன் என்றே கூறலாம். கதிரை வெட்டும் வெட்டுக்கிளி, பூவை தின்னும் பூச்சிகள், நத்தை, பல்லி, தவளை, நண்டு ஆகியவற்றை உண்ணும்.
இது மீன் கொத்தி அல்ல… முதலில் பார்க்கும் போது நானும் ஏமாந்து போனேன் இது மீன் கொத்தி என்று. பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர் “பனங்காடை” என்று.
![பனங்காடை](https://angusam.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-01-26-at-9.58.41-AM.jpeg)
இப்பறவை நம் பக்கத்தில் உள்ள கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, தெலுங்கானா மற்றும் பீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக உள்ளது. முன்பு மேனாட்டுச் சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புறா அளவில் இருக்கும். இப்பறவையின் சிறகுகள் நீல நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி பவள நிறம் போல் இருக்கும். கழுத்துக்கு அடியில் சாம்பல் நிறக் கோடுகள் அமைந்திருக்கும். இதன் தலை நீல நிற தொப்பி போல இருக்கும். வால் சிறகுகள் நிறத்தில் இருக்கும். ஆண், பெண் ஒரே தோற்றத்தில் இருக்கும். இந்தப் பறவையின் கூட்டருகே காகம் போன்ற பறவைகள் வந்து விட்டால் போதும். அவற்றை “சர்ர்ர்ர்…. சர்ர்ர்ர்…..” என்று கத்தியபடி வெகு தூரத்திற்கு விரட்டிச் செல்வது பார்க்க வேடிக்கையாக இருக்கும். “எதிரியின் உருவ அளவு, பலம் இவற்றைப் பற்றி சிறிதும கவலைப்படுவது இல்லை பனங்காடை.
சில சமயம் பனங்காடை, தன்னை விட உருவத்திலும், பலத்திலும் பெரிதான கழுகு, கருடன் போன்ற பறவைகளையும் ஓட ஓட (பறக்க பறக்க என்று இருக்க வேண்டுமோ?) விரட்டுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
முதல் அடி உன்னுடையதாக இருந்தால் உன்னை விட பலசாலியாக இருந்தாலும் உன்னைக் கண்டு பயந்திடுவான். உன் எதிரி என்னும் சொல் வழக்கில் அதீத நம்பிக்கை கொண்டதோ பனங்காடை!
இப்பறவை அதிகமாக பனை மரத்தில் உட்கார்ந்திருப்பதையும் அதில் இருந்து திடீர் என்று பறந்து பறக்கும் பூச்சி ஒன்றைப் பிடித்துக் கொண்டு மீண்டும் பனை மரத்துக்கே திரும்ப வந்து உட்காரும்.
இவை அதிகமாக பட்டுப் போன மொட்டைப் பனை மரங்களிலேயே கூடுகளை அமைக்கின்றன. இதுவே இதன் தமிழ்ப் பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.
இந்த வகை பறவைகள் தமிழகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை அடுத்த தொடரில் பேசுவோம் …
தொகுப்பு- ஆற்றல் பிரவீன் குமார்.
சுற்றுச்சூழல் ஆய்வாளர்.
தொடரும்…..
பறவைகள் பலவிதம் தொடா் 2ஐ படிக்க
👇👇👇