கண்முன்னே காட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் கலைஞரின் எழுத்துக்கு உண்டு. கவிதைகள் எழுதும்போது, காட்சிகளை அவர் விவரிப்பது, ஓவியம் வரைவது போலவே இருக்கும்.
1953 ஆம் ஆண்டு, கல்லக்குடிப் போராட்டத்தில் கைதாகி, திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது கலைஞர் எழுதிய கவிதையின் தலைப்பு, பச்சைக்கிளி. கூண்டில் அடைப்பட்டிருக்கும் கிளியிடம் உரையாடுவது போன்ற படைப்பு அது. அதில் கிளியின் உருவத்தை கலைஞர் இப்படி வர்ணிக்கிறார்.
சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில்
மிளகாய்ப் பழத்தைச் செருகி – இடையில்
மல்லிகை இலைகள் சிறகாய் – பின்புறம்
தாழைமடலை வைத்தால் பச்சைக்கிளியே
உன்போல் படைப்பு உன்போல் படைப்பு
– படிக்கும்போதே வாசகரின் மனதில் ஒரு பச்சைக்கிளியை வரைகின்ற உணர்வு ஏற்படும். அதற்கேற்ற எளிமையான உவமைகளைக் கலைஞர் கையாண்டிருப்பார்.

இராவணனைப் போற்றிப் பாடாத திராவிட இயக்கப் படைப்பாளர்கள் யாருமில்லை. அந்த வரிசையில், ‘தென்னவன் காதை‘ என்ற தலைப்பில் இராவணன் பற்றி 1964ஆம் ஆண்டு கலைஞர் எழுதிய கவிதை கவனத்திற்குரியது.
கண்ணுக்குள் பாவை போல்
இலங்கைத் தீவு.
கருவிழியோ ஆழ்கடல்கள்.
இமைக் கதவு உண்டே
எழில்விழியைக் காப்பதற்கு!
அப்படித்தான் இலங்கைக்கு இராவணன்.
-கண்களில் உள்ள கருவிழியில் இருக்கும் பாவை என்பது மிகச் சிறியது. அதுபோலத்தான் இலங்கை எனும் சின்னத் தீவும் கடல்களுக்கு நடுவே இருக்கிறது. கண்களை இமை காப்பதுபோல, இலங்கையைக் காத்தவன் இராவணன் என்கிறார்.
பெரியார் பற்றிய கலைஞரின் கவிதை, மெல்லிய கோடுகளால் ஓர் உருவம் வரையப்படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
வங்கத்து தாகூர் போல் தாடியுண்டு
பொங்குற்ற வேங்கை போல்
நிமிர்கின்ற பார்வையுண்டு.
செங்குன்றத் தோற்றம்
உடலில் உண்டு.
வெண்சங்கொத்த கண்களிலே
விழியிரண்டும் கருவண்டு.
அதில் சாகும்வரை ஒளியுண்டு.

-தாகூர் போல தாடி, சிவந்த குன்றம் போல மேனி, வெண்சங்கு போல கண்கள், கருவண்டு போன்ற விழிகள் என மெல்ல மெல்ல பெரியாரின் உருவத்தைக் கண் முன், கவிதையால் வரைந்த கலைஞர், அந்த உருவத்தை உலவவிடுவார் அடுத்தடுத்த வரிகளில்..
பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின்
இவரோ படுகிழமாய் போனபின்பும்
பம்பரமாய் சுற்றி வந்தார்.
-அனிமேஷன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே எழுத்தால் ஓவியம் வரைந்து அது அசைவது போன்ற உணர்வை உருவாக்கியவர் கலைஞர் எனும் இணையற்றப் படைப்பாளி.
(தொடரும்)
— கோவி. லெனின், மூத்த பத்திரிகையாளா்







Comments are closed, but trackbacks and pingbacks are open.