அங்குசம் பார்வையில் ‘நிழற்குடை’
தயாரிப்பு : ‘தர்ஷன் பிலிம்ஸ்’, டைரக்ஷன் : சிவா ஆறுமுகம். நடிகர்-நடிகைகள் : தேவயானி, விஜித், கண்மணி, குழந்தை நட்சத்திரங்கள் : அஹானா அஷ்னி, நிஹரிகா, ராஜ்கபூர், இளவரசு, மனோஜ்குமார், நீலிமா இசை, தர்ஷன் சிவா, வடிவுக்கரசி, அக்ஷரா, பிரவின். ஒளிப்பதிவு : ஆர்.பி.குருதேவ், வசனம் : ஹிமேஷ் பாலா, இசை : நரேன் பாலகுமார், எடிட்டிங் ; ரோலெக்ஸ். பி.ஆர்.ஓ. : அ.ஜான்.
மனோஜ்குமார் நடத்தும் அக்ஷயா முதியோர் இல்லத்திற்கு தமிழ்நாடு அரசின் விருதும் உதவித் தொகையும் கிடைக்கிறது. இதெற்கெல்லாம் காரணம் அந்த இல்லத்தில் அன்பு தெய்வமாக வலம் வரும் ஜோதி [ தேவயானி ] தான் என்பதை மனப்பூர்வமாகச் சொல்கிறார் மனோஜ்குமார். ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் தனது பெற்றோர் மற்றும் கணவன், ஒரு பெண் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு தமிழ்நாடு வந்தவர் தான் இந்த ஜோதி.
லட்சக்கணக்கில் சம்பளம், உயர்தர் பிளாட், அமெரிக்கா போகும் கனவுடன் வாழும் ஐடி கம்பெனி இளம் தம்பதிகளான விஜித்தும் கண்மணியும் தங்களது மூன்று வயது பெண் குழந்தையைப் பராமரிக்க ஒரு இளம் பெண்ணை[ அக்ஷரா] வேலைக்கு அமர்த்துகின்றனர். தம்பதிகள் வேலைக்குப் போனதும் தனது காதலனை வரவழைத்து குழந்தைக்கு தூக்க மருந்து கொடுத்துவிட்டு குஜாலாக இருக்கிறார் அக்ஷரா.
ஒருநாள் அக்ஷராவும் காதலனும் குஷிமூடில் இருக்கும் போது, குழந்தைக்கு வலிப்பு வந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள். அக்ஷராவைத் தேடி வரும் இளைஞன் குறித்து விஜித்திடம் சொல்லிவிடுகிறார் பிளாட்டின் செக்யூரிட்டி. இதனால் டென்ஷனாகி அக்ஷராவை வீட்டைவிட்டுத் துரத்திவிடும் விஜித்தும் கண்மணியும் அக்ஷ்யா முதியோர் இல்லத்தின் ஜோதியை தங்களது வீட்டுக்கே அழைத்துப் போகிறார்கள் விஜித்தும் கண்மணியும்.
குழந்தை நிலா, “ஜோம்மா…ஜோம்மா..” என தேவயானியுடன் ஒட்டிக் கொள்கிறாள். விஜித்-கண்மணியின் அமெரிக்கா கனவு பலிக்கிறது. “ஜோம்மா வந்தா தான் நானும் வருவேன்” என அடம் பிடிக்கிறாள் நிலா. விஜித்-கண்மணி அமெரிக்கா போனார்களா? இல்லையா? என்பதன் உருக்கமிகு க்ளைமாக்ஸ் தான் இந்த நிழற்குடை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த குடையை தனது அனுபவ நடிப்பால், இறுக்கப் பிடித்து, படம் பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்து உருக வைத்துவிட்டார் தேவயானி. அடடா…அடடா.. முகத்தில் என்ன ஒரு பாந்தம், பரிவு, தாய்மை உணர்வு, என படம் முடிந்த பின்பும் நம் கண்களுக்குள் ஜோதியின் ஒளி வீசுகிறது. அதிலும் க்ளைமாக்ஸில் “உங்க குழந்தைய பக்கத்துல போர்ட்டிங் ஸ்கூல்ல சேர்க்க துடிக்கிறீங்க. ஆனா அவர்கள் வளர்ந்த பின்பு, தூரத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் உங்களை சேர்த்துவிடத் துடிக்கிறார்கள்” தேவயானி பேசும் இந்த வசனம் தான் படத்தின் ஹைலட்.
பணத்தாசை பிடித்த தம்பதிகளாக விஜித்தும் கண்மணியும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள். இரண்டு சீன்கள் தான் என்றாலும் இன்ஸ்பெக்டராக வரும் இளவரசு வசீகரிக்கிறார். விஜித்தின் அம்மாவாக வடிவுக்கரசி, விஜித்தின் முதலாளியாக ராஜ்கபூர், குஜால் வேலைக்கார இளம் பெண்ணாக வரும் அக்ஷரா ஆகிய அனைவருக்குமே சரியான இடத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் டைரக்டர். கன்னேங்கரேர்னு படுபயங்கர கருப்பு முகத்துடன் வரும் அந்த இளைஞன் கேரக்டரைத் தான் சகிக்க முடியல.
கதை பெரும்பாலும் நான்கைந்து இடங்களில் மட்டுமே நடப்பதால் கேமராமேன் ஆர்.பி. குருதேவுக்கு அவ்வளவாக வேலை இல்லை.
அக்னி வெய்யிலுக்கு மனசுக்கு குளிர்தரும் இந்த ‘நிழற்குடை’.
— மதுரை மாறன்.