அங்குசம் பார்வையில் ‘மையல்’
தயாரிப்பு : ‘ஐகான் சினி கிரியேஷன்ஸ்’ அனுபமா விக்ரம்சிங் & வேணுகோபால். டைரக்ஷன் : ஏபிஜி.ஏழுமலை. கதை-திரைக்கதை-வசனம்; ஜெயமோகன். நடிகர்-நடிகைகள்: சேது, சம்ரிதி தாரா, பிஎல்.தேனப்பன், சூப்பகுட் சுப்பிரமணி, ரத்னகலா, சி.எம்.பாலா. ஒளிப்பதிவு : பாலா பழனியப்பன், இசை : எஸ்.அமர்கீத் [ இசையமைப்பாளர் செளந்தர்யனின் மகன் } எடிட்டிங் : வெற்றி. பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.

கிராமத்து ஜமீன் தார் ஒருவரையும் அவரது மனைவியையும் ஒரு கும்பல் இரவில் வெட்டிச் சாய்க்கிறது. பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளில் ஒன்றைத் திருடிவிட்டு { அதே இரவுன்னு தான் நினைக்கிறோம்] ஹீரோ சேது தப்பி ஓடும் போது, கிணற்றில் விழுந்துவிடுகிறார். மறுநாள் விடிந்ததும் கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் ஹீரோயின் சம்ரிதி, அவரை கயிறுகட்டி இழுத்துக் காப்பாற்றி வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். சம்ரிதியின் பாட்டி ஒரு மந்திரவாதி.
ஊரே சேர்ந்து ஆடு திருடிய சேதுவைத் தேடுது, போலீசும் தேடுது. ஜமீனைப் போட்டுத் தள்ளியவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. ஏன்னா ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவரு அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு பணக்காரனான வில்லன் தேனப்பன்.
இதுக்கப்புறம் இந்த ‘மையல்’ எதை மையமா வச்சுப் போகுதுன்னு நமக்குப் புரியுறதுக்குள்ள படம் முடிஞ்சிருச்சு. கதை-திரைக்கதை-வசனம் ஜெயமோகனாம். இந்தப் பார்ட்டி நல்ல கதாசிரியர்னு நம்பிக் கெட்டாரு டைரக்டர் ஏழுமலை. பாவம் ஹீரோ சேது தலையிலையும் நல்லா மையத்தடவிட்டாரு போல ஜெயமோகன். ஸ்டேஷன் லாக்கப்ல அழுகிறார், கதறுகிறார், க்ளைமாக்ஸில் வெறி கொண்டு தேனப்பனையும் இன்ஸ்பெக்டரையும் போட்டுத் தள்ளுகிறார். ஆமா தேனப்பனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தாரு.
ஹீரோயின் சம்ரிதி தாரா, கொஞ்சம் ஒடிசலா இருந்தாலும் லட்சணமாத்தான் இருக்காரு. ஆனா கதையில எந்த லட்சணமும் இல்லாமப் போச்சே தாயீ…
— மதுரை மாறன்.