*குபேரா விழாவில் தத்துவ மழை பொழிந்த தனுஷ்!*
தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 20- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘குபேரா’. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரி அரங்கத்தில் ஜூன் 01- ஆம் தேதி இரவு நடந்தது. ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது அரங்கம்.
இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஃபுல் & ஃபுல் லவ் சப்ஜெக்டில் மீண்டும் தனுஷுடன் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தினார் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா. ‘குட்டி’ படம் முதல் ‘வேங்கை’ வரையிலும், தற்போது ‘குபேரா’விலும் தனுஷுடன் தனது இசைப் பயணத்தை நினைவு கூர்ந்தார் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்.
*இயக்குனர் சேகர் கம்முலா*
“குபேரா ஒரு அற்புதமான படம். மிகவும் அற்புதமான படம். குபேரா மிக மிக அற்புதமான படம். தனுஷின் ஆளுமை என்னை வியக்க வைக்கிறது”.

தமிழ்நாடு ரசிகர்கள் தன் மீது காட்டி வரும் அன்புக்கு நன்றி சொல்லிப் பேசிய *நடிகர் நாகார்ஜுனா* “குபேராவுக்குப் பிறகு, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் நடிக்கும் ‘கூலி’ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது!” என்றார் உற்சாகத்துடன்.
*தனுஷ்* மேடையில் ஏறியதும், “ஓம் நம சிவாய”
என தனது பேச்சை தொடங்கிவிட்டு “இது கலிகாலம்.வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம். தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது. பரலோகத்திலிருந்து வந்த தெய்வீக தேவதை போல தூய்மையான ஆன்மாவான சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் ஜான்வி நரங் ஆகியோரின் ‘குபேரா’ படத்தின் கதை மீதான நம்பிக்கை மற்றும் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படங்களுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு காலம் கடந்து நிற்கும். குபேரா மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் 200 சதவிகித நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” என பேசிய தனுஷ் மீண்டும் தத்துவ ஞானியாக மாறி,
இப்படத்தில் தனது முதல் காட்சியின் படப்பிடிப்பை பற்றி நினைவு கூர்ந்தபோது, “கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன், கிழிந்த ஆடைகளில் திருப்பதி மண்ணில், ஒரு பிச்சைக்காரனாக நடித்தது, தனது வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களை நினைவூட்டிய ஒரு பாத்திரம். இதேபோல் இந்தி ராஞ்சானா ஷூட்டிங் பனாரஸில் நடந்த போது பேராசை, பணம், உலக இன்பங்கள் இவையெல்லாம் ஒன்றுமில்லை. தூய்மையான ஆன்மா மட்டுமே முக்கியம் என்பதை உணர்ந்தேன்”இப்படி தத்துவ மழையாக பொழிந்தார் தனுஷ்.
— மதுரை மாறன்.