’மெட்ராஸ் மேட்னி’க்கு லைஃப் கொடுத்த ‘தக்லைஃப்’
இந்த ஜூன்.05—ஆம் தேதி கமல்-மணிரத்னம் கூட்டணியின் ‘தக்லைஃப்’, தங்கர்பச்சானின் மகன் விஜித்பச்சான் ஹீரோவாக நடித்த ‘பேரன்பும் பெருங்கோபமும்’, விமல் நடித்த ‘பரமசிவன் –ஃபாத்திமா’, புதியவர் கார்த்திகேயன் மணி என்பவர் தயாரித்து டைரக்ட் பண்ணி, காளிவெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’ உட்பட ஐந்தாறு படங்கள் ரிலீசாகின. இதில் அனைத்துப் படங்களுமே மண்ணைக் கவ்விய நிலையில் புதியவர்களின் முயற்சியில் வெளியான ‘மெட்ராஸ் மேட்னி’ மட்டும் விமர்சனத்திலும் வசூலிலும் முதலிடம் வகித்து, இரண்டாவது வாரம் கடந்தும் மக்கள் ஆதரவு இருந்ததால், பல தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் சக்தி சினிமாஸ் அதிபரான திருப்பூர் சுப்பிரமணியமும் ‘மெட்ராஸ் மேட்னி’யால் தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லியுள்ளார்.
இதனால் மிகவும் மகிழ்ச்சியான ‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினர், மீடியாக்களுக்கும் வெற்றிப்படமாக்கிய மக்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்ச்சியை சென்னையில் ஜூன்.17—ஆம் நடத்தினார்கள்.

”இந்தப் படத்திற்கு அனைத்து வகையிலான மீடியாக்களும் பேராதரவு அளித்தன. அதே சமயம் சில குறைகளையும் மனம் புண்படாமல் எழுதின, பேசின. இதுதான் மக்களிடம் இப்படம் சென்று சேர்ந்து வெற்றிபெறக் காரணம்” நடிகர்கள் சுவாமிநாதன், விஷ்வா, காளிவெங்கட்டின் மனைவியாக நடித்த ஷெல்லி, மியூசிக் டைரக்டர் கே.சி.பாலசாரங்கன் ஆகியோர் ஒருமித்த குரலில் மீடியாக்களுக்கும் மக்களுக்கும் தங்களது நன்றியைச் சொன்னார்கள்.
ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியன்,
“சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவும் ஆசையும் பெரிதாக இருந்தது. இந்த இரண்டையும் நிஜமாக்கியது மீடியாக்கள் தான். இதில் நடித்த அனைவருமே ஸ்கிரிப்ட் பேப்பரில் இருந்த உணர்வை திரையில் கொண்டு வர கடுமையாக உழைத்தோம். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது”.
வினியோகஸ்தர் ‘ட்ரீம் வாரியர்ஸ்’ குகன்,
“நாங்கள் வெளியிட்ட மூன்றாவது படத்திற்கான நன்றி சொல்லும் இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் மீடியாக்களும் மக்களும் தான். படத்தின் கதை சாதாரணம் தான். ஆனால் அதை கார்த்திகேயன் மணி படமாக்கியவிதம் தான் வெற்றிக்குக் காரணம். அதே போல் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இதுபோன்ற புதியவர்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்போம்”.

இயக்குனர் கார்த்திகேயன் மணி,
“எல்லோரும் புதுசு, பட்ஜெட்டும் சிறிசு. இப்படிப்பட நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்ககூடிய வாய்ப்புகள் தான் அதிகம். ஆனால் மீடியாக்களின் வெளிச்சத்தால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வந்து வெற்றிப்படமாக்கியதால், இப்போது உங்கள் முன்னால் நின்று நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம். அர்த்தமுள்ள ஒரு கதைக்கு மீடியாக்கள் கொடுத்த ஆதரவு தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே போல் ட்ரீம் வாரியர்ஸ் எங்களுக்கு கைகொடுத்ததாலும் இந்த வெற்றி சாத்தியமானது.
இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அளப்பரிய ஆதரவை தியேட்டர்களுக்குச் சென்று நேரில் கண்டு கண்கலங்கிவிட்டேன். தமிழ் ரசிர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள் மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டையும் கலந்து கொடுத்தால், அவர்கள் நம்மைக் கொண்டாடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். இதுபோன்ற நல்ல படைப்புகளை எங்கள் ’மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்’ தொடர்ந்து வழங்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்”.

கதையின் நாயகன் காளிவெங்கட்,
“இது என்னுடைய அப்பாவின் கதை என்பதால் நடிப்பதற்கு உடனே ஒத்துக் கொண்டேன். தியேட்டர்களுக்குச் சென்ற போது நடந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் எனது சினிமா வாழ்க்கையில் இதுவரை நடந்ததில்லை. இதற்காக இயக்குனருக்கும் மீடியாக்களுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்தில் கதை சொல்லியாக வந்த நடிகர் சத்யராஜ், ஒரு பாடலைப்பாடிய வைகைப்புயல் வடிவேலு, படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கும் படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்களுக்கும் பணிபுரிந்த டெக்னீஷியன்களுக்கும் மனமார்ந்த நன்றி”.
— மதுரை மாறன்.