6 சவரன் நகை கொள்ளை ! சின்னபொண்ணு கொடூர கொலை !
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் வெள்ளையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மனைவி 70 வயதான சின்னபொண்ணு, இவர்களுக்கு மதியழகன், ஆறுமுகம், கோவிந்தன் என மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த மூதாட்டியின் கணவர் சித்தன் மற்றும் மகன் கோவிந்தன் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டனர். மற்ற பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர். மூதாட்டி சின்னபொண்ணும் வைகுந்தம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இவரின் அன்றாட வாழ்க்கையை நடத்த, வைகுந்தம் மற்றும் அருகிலுள்ள சந்தைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்கி விற்பனை செய்வது அவர் வழக்கமான தொழிலாக இருந்தது. இந்தநிலையில், மாடு வாங்கி பால் தொழில் செய்யலாம் என்று எண்ணத்தில் இருந்த மூதாட்டி, கடந்த 23ஆம் தேதி மாடு வாங்க வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற நபரை அவரது மோட்டார் சைக்கிளில் கொங்கணாபுரம் சந்தைக்கு சென்று இருக்கிறார். அதன் பிறகு மூதாட்டி வீடு திரும்பவில்லை. ஏழுமலை மட்டும் ஊருக்கு வந்ததை கவனித்த சின்னபொண்ணுவின் மகன் மதியழகன் பல இடங்களில் தனது தாயை தேடியும் எந்த தடமும் கிடைக்காததால், சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் முதலில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்காக விசாரித்தனர். ஆனால், சந்தைக்கு அழைத்துச் சென்ற ஏழுமலையின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் பாணியில் விசாரித்ததில், உண்மையை ஒப்புக்கொண்டு நடந்தவற்றை கூறி இருக்கிறார். மூதாட்டியை சந்தைக்கு அழைத்து செல்லும்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பார்த்ததும் ஆசை ஏற்பட்டதால், மாடு வாங்கும் பெயரில் சின்னபொண்ணுவை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே கொலை செய்து அவர் அணிந்திருந்த 6 சவரன் நகையை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தான் ஏரியில் வீசி விட்டதாகவும் தெரிவித்தார்.
ஏழுமலை அளித்த தகவலின்படி, சங்ககிரி போலீசார் பவளத்தான் ஏரியில் சென்று சாக்கு மூட்டையை கண்டுபிடித்து திறந்த போது, அதில் சின்னபொண்ணுவின் உடல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, தொழிலாளி ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
— மு.குபேரன்.