மேயர் ராஜினாமா : 4 நிமிடத்தில் முடிந்த அவசர கூட்டம் ! அடுத்த மேயர் யார் ?
இந்திராணி பொன் வசந்த் ராஜினாமாவிற்கு மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 4 நிமிடங்களில் மாநகராட்சி அவசர கூட்டம் நிறைவடைந்தது.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்த நிலையில் அவசர சிறப்பு மாமன்ற கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மதுரை மாநகராட்சியில் ரூ150கோடி வரி முறைகேடு விவகாரம் எதிரொலி்யாக இந்திராணி தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா என ஆணையாளரிடம் ராஜினாமா கடிதத்தை இந்திராணி வழங்கியுள்ளார். இதனையடுத்து மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் துணை மேயர் நாகராஜன் தலைமையில் தொடங்கியது.
அதிமுக போராட்டத்தின் அடிப்படையில் இந்திராணி மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். அதிமுகவின் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. மேயர் இந்திராணி ராஜினாமா தீர்மானம் முன்மொழியப்பட்டது. தீர்மானத்தை ஒருமனதாக ஏற்று மதுரை மாநகராட்சி மன்றகூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 10.30 மணிக்கு தொடங்கிய மாமன்ற கூட்டம் 10.34 மணிக்கு என 4 நிமிடங்களில் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா அளித்த பேட்டியில் அதிமுக அழுத்தம் காரணமாக மண்டலத் தலைவர்கள் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். மேயர் ராஜினாமா அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எடப்பாடி பழனிச்சாமி மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தார். புதிய மேயரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும்.
திமுக அரசின் கையாலாகத்தனத்தால் புதிய மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. மதுரையில் உள்ள 2 அமைச்சர்களின் ஈகோவால் புதிய மேயரை தேர்வு செய்ய முடியவில்லை” என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.