அங்குசம் பார்வையில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
தயாரிப்பு: ‘திருமலை புரொடக்சன்ஸ்’ கே.கருப்பசாமி, இணைத் தயாரிப்பு: அமராவதி, எழுதி இயக்கியவர்: சுகவனம். நடிகர்–நடிகைகள்: ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், சேனாபதி, விஜயன், சித்ரா, கெளஷிகா, தமிழினியன், விகடன். ஒளிப்பதிவு: விமல், பின்னணி இசை: என்.டி.ஆர். எடிட்டிங்: சதீஷ் குரோசவா, ஆர்ட் டைரக்டர்: ஜே.கே.ஆண்டனி, பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.
கதையின் நாயகனாக இவர் நடிக்கிறார், கதையின் நாயகியாக அவர் நடிக்கிறார்னு ஏகப்பட்ட சினிமாக்கள் வந்தன, வந்து கொண்டுமிருக்கின்றன. ஆனா அந்த சினிமாக்களைப் பார்த்த பிறகு தான் நாயகனைச் சுத்தித்தான் கதை, நாயகியைச் சுத்தித் தான் கதைன்னு பல்லிளிக்கும்.
ஆனால் இந்த ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ சினிமாவில் கதையும் கதைக்களமும் தான் நாயகன் -நாயகி, மற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே. ஏன்னா இந்தப் படத்தில் ‘பரோட்டா’ முருகேசன் தான் ஓரளவு நமக்கு பரிச்சயமானவர். மற்ற கதாபாத்திரங்களில் நடித்த எல்லோருமே கொங்கு மண்ணின் மைந்தர்கள். பெரிய பண்ணாடி[ தெக்கத்திப் பக்கம் பண்ணையார். கொங்கு மண்டலத்தில் பண்ணாடி] கார்த்திகேசு மட்டும் இதற்கு முன்பு ஒரு சினிமாவைத் தயாரித்து அதில் நடித்தவர் என்பதால் வெகு சிலருக்குத் தான் அவரைத் தெரியும். அதே போல் நல்லபாடன் என்ற சொல்வழக்கும் கொங்கு மண்டலத்தில் பாட்டாளி வர்க்கத்தைக் குறிக்கும்.
இப்ப கதைக்கு வருவோம். ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது பெரிய கிணறு ஒன்றில் தவறிவிழுந்து விடுகிறான் நல்லபாடனின் [ பரோட்ட முருகேசன் ] மகன். ஊரார் கூடி அவனை வெளியே கொண்டு வந்தாலும் உயிருக்குப் போராடுகிறான் சிறுவன். அப்போது “எப்பா ஒண்டிமுனி எம்புள்ளயக் காப்பாத்து. உனக்கு கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துறேன்” என தனது குலதெய்வத்தை வேண்டுகிறார் நல்லபாடன். சிறுவன் பிழைத்து பெரியவனாகிறான்[விஜயன்]. குட்டியாக நேர்ந்துவிடப்பட்ட கிடாயும் வளர்கிறது.
பெரிய பண்ணாடிக்கும் சின்ன பண்ணாடிக்கும் இடையே இருக்கும் பழைய பகையால் வெட்டவெளியில் இருந்தாலும் பாழடைந்து கிடக்கிறார் ஒண்டிமுனி. சாமி சாட்டுனாதான் கிடா வெட்ட முடியும் என்பதால் இரண்டு பண்ணாடிகளிடமும் மன்றாடுகிறார் நல்லபாடன். பண்ணாடிகள் மனம் மாறினார்களா? நல்லபாடனால் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்த முடிஞ்சதா? மனசை உலுக்கும் க்ளைமாக்ஸுடன் முடிகிறது இந்த ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’.
எல்லா மண்ணிலும் இருப்பது போல் கொங்கு மண்ணிலும் சாதி ஆணவம் தலைவிரித்தாடுகிறது. அங்கேயும் தலித்துகள் பரிதாபத்துக்குரிய ஜீவன்களாக, பண்ணாடிகளால் பாராரிகளாக அலைகிறார்கள் என்பதை மண்ணின் மனம், குணம் மாறாமல் அச்சுஅசலாக அந்த மண்ணின் நிஜ மனிதர்களை வைத்தே.. ஜீவனுள்ள கதையை, உயிர்ப்புமிக்க திரைக்கதையால் ஆழமாகவும் மிக நேர்த்தியாகவும் திரையில் பதிவு செய்து நல்ல சினிவாத் தேடி ரசிக்கும் மக்களுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறார் இயக்குனர் சுகவனம்.
தலித்துகளிடம் வஞ்சகமாக உடல் உழைப்பைச் சுரண்டி, அவர்களுக்கே வட்டிக்குப் பணம் கொடுத்து, வட்டிக்கும் அசலுக்கும் சேர்த்து அவர்கள் நிலத்தையே அபகரிக்கும் பண்ணாடிகளின் கயமைத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள சுகவனத்திற்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
50 ஏக்கர் இருந்தாலும் அதில் அரசாங்கம் கேட்கும் அஞ்சு ஏக்கரைக் கூட மனமில்லாமல் நல்லபாடன் மூலமே சாமி ஒண்டிமுனி பேரால் அம்மக்களை ஏமாற்றி கைரேகை வாங்கும் அயோக்கிய பெரிய பண்ணாடியாக கார்த்திகேசு அளவான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நல்லபாடனாக ‘பரோட்டா முருகேசனின் நடிப்பில்தான் எவ்வளவு உயிர்ப்பு. பெரும்பாலான காட்சிகளில் கட்டாந்தரை, மொட்டப்பாறை, கரடு மண் வயல் வரப்புகளில் செருப்பே இல்லாமல் நடந்து, அலைந்து தேய்ந்து நம்மை சிலிர்க்க வைக்கிறார் முருகேசன்.
இவரது மகனாக விஜயன், இவருக்கு காதலியாக பண்ணாடி குடும்பத்தைச் சேர்ந்தவராக வித்யா சக்திவேல், முருகேசனின் மகளாக சித்ரா நாகராஜன், மருமகனாக விஜய் சேனாதிபதி என அனைவருமே அந்த மண்ணில் உலவும் ஜீவனுள்ள கதாபாத்திரங்கள்.
தங்களின் பூர்வீக நிலம் யார் யாரால்? எப்படியெல்லாம் பறிபோனது என்பதை வலியுடன் சொல்லியபடி நடந்து வரும் தலித் பாட்டாளிகளின் வேதனையை நமக்குள் கடத்தியது, கிடா வெட்டுவதற்கு முதல் நாள் இரவு பண்ணாடிப் பெண் நல்லபாடன் வீட்டில் வந்து நின்றதும்… வசனமே இல்லாமல் அந்தக் காட்சியை முடித்திருப்பது உட்பட பல சீன்களில் இயக்குனர் சுகவனம் ஜொலித்திருக்கிறார்.
கதையை மட்டுமே நம்பி களம் இறங்கிய சுகவனத்திற்கு பெரிதும் துணை நின்றிருப்பவர்கள் கேமராமேன் ஜே.டி.விமலும் பின்னணி இசையமைத்த என்.டி.ஆரும் தான். இன்னும் சொல்லப் போனால் சுகவனத்தின் கதைக்கு நிகரான ஹீரோக்கள் இவர்கள் இருவரும் தான். பெரிய பாறை இடுக்குகளின் வழியே நல்லபாடன், க்ளைமாக்ஸில் கிடாவெட்ட தலைச்சுமையுடன் மக்கள் போகும் போது, அரிவாள், அண்டா, பொங்கப்பானை, பூஜைசாமான்களை மட்டும் குளோசப்பில் காட்டி, அப்படியே மொத்த மக்களையும் வரிசையாகக் காட்டுவது என விமலின் கேமரா ஆங்கிள் அபாரம்.
அதே க்ளைமாக்ஸில் ஒண்டிமுனியை காட்டும் போது என்.டி.ஆரின் உடுக்குச் சத்தம்….இருக்கே இங்கதான் படத்தின் உயிர்ச்சத்தம் கேட்கிறது. நல்லபாடனின் பேரனாக வரும் அந்தச் சிறுவனுக்கு க்ளைமாக்ஸில் ரெண்டே வார்த்தையில் ஒரு வசனம் வச்சிருக்காரு டைரக்டர் சுகவனம்.
“கிடாவும் சாமிகிட்ட வேண்டிருக்குமோ…” படம் பார்க்கும் போது இதன் வீரியமும் வீச்சும் பார்வையாளனை அசைத்துப் போட்டுவிடும்.
‘வெட்டப்பட வேண்டியது கிடா அல்ல, கெட்ட மனிதர்கள் தான்” படம் முடிந்த பின் பத்திரிகையாளர்களிடம் டைரக்டர் சுகவனம் சொன்ன இந்த உண்மை வார்த்தையுடன் மனநிறைவுடன் விமர்சனம் நிறைவு பெறுகிறது.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.