அங்குசம் பார்வையில் ‘ரெட்ட தல’
தயாரிப்பு : ‘பிடிஜி யுனிவர்சல்’ பாபி பாலசந்திரன், டைரக்ஷன் : கிரிஷ் திருக்குமரன். தயாரிப்புத் தலைமை: டாக்டர் மனோஜ் பினோ, ஆர்ட்டிஸ்ட் : அருண் விஜய், சிட்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், யோகி சாமி, பாலாஜி முருகதாஸ், திரைக்கதை மேற்பார்வை : சுப்பிரமணிய சிவா, ஒளிப்பதிவு : டிஜோ டோமி, இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : ஆண்டனி, ஸ்டண்ட் : பி.சி. ஸ்டண்ட்ஸ், காஸ்ட்யூம் டிசைனர் : கிருத்திகா சேகர், ஆர்ட் டைரக்டர் : அருண்சங்கர் துரை, பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ]
சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்து புதுச்சேரி வீதிகளில் சுற்றுகிறான் காளி[ அருண்விஜய்]. அவனிடம் அன்பு செலுத்தி, அவன் மீது கருணைகாட்டிப் பழகுகிறாள் ஆந்த்ரே [ சிட்தி இத்னானி ]. வளர்ந்து பெரியவனானதும் பணம் சம்பாரிக்க ஐந்து வருடம் ஆந்த்ரேவைப் பிரிகிறான் காளி. ஐந்து வருடம் கழித்து மீண்டும் அவளைச் சந்திக்கிறான். ஆனால் இந்த ஐந்து வருடத்தில் புதுச்சேரி பாரில் வேலை பார்த்து பணம் சம்பாரிக்க ரொம்பவே கஷ்டத்தில் இருந்ததால்… காளியின் கல்யாணக் கோரிக்கையை நிராகரிக்கிறாள் ஆந்த்ரே. ”ஃபிரான்ஸுக்குப் போய் கைநிறைய சம்பாரிக்கணும், கார், பங்களான்னு வாழணும். ஆம்பளையா இருந்தா அலெக்சாண்டரா இருக்கணும், பொம்பளையா வாழ்ந்தா கிளியோபாட்ராவா வாழணும்” இதான் என்னோட ஆசை என போட்டுடைத்ததும் மனம் வெதும்பி போதையில் ரோட்டில் நடந்து போகும் போது, காரில் அடிபட்டு தூக்கி வீசப்படுகிறான் காளி.
காரிலிருந்து இறங்கி வருபவன் காளி மாதிரியே இருக்கும் மால்பே உபேந்திரா. ஆனால் இருவரும் இரட்டையர்கள் அல்ல. புதுச்சேரியில் உபேந்திராவின் ஆடம்பர பங்களா, காஸ்ட்லி கார், சொகுசு வாழ்க்கை இதெல்லாம் பார்த்ததும் மனம் தடுமாறுகிறான் காளி. காஸ்ட்லி காரில் காளியைப் பார்த்ததும் ஷாக்காகும் ஆந்த்ரேவின் கிரிமினல் மூளை வேலை செய்ய, உபேந்திராவைப் போட்டுத்தள்ளுகிறான் காளி. இந்த உபேந்திரா யார்? அவனைப் போட்டுத் தள்ளிய பின்பு காளிக்கு ஏற்பட்ட கதி என்ன? இதான் இந்த ‘ரெட்ட தல’.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பில்லா’வை இன்ஸ்பிரேஷனாக வைத்துத் தான் இந்த ‘ரெட்ட தல’ யை வடிவமைத்துள்ளார் டைரக்டர் கிரிஷ் திருக்குமரன். ட்வின்ஸ் என்பதாலேயே சின்ன வயசுல ஓடிப்போன கதையெல்லாம் விடாமல், கோவாவில் பெரிய கிரிமினல் தான் இந்த உபேந்திரா. அங்கே இருக்கும் இன்னொரு பெரிய தாதாவான ஹரிஷ் பெராடியின் மகள் [ தான்யா ரவிச்சந்திரன்] கணவனைப் போட்டுத் தள்ளிய வழக்கில் பாம்பே ஹைகோர்ட்டில் கண்டிஷன் பெயில் கிடைத்து, புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட வருகிறார்.
அந்த உபேந்திராவைப் போட்டுத்தள்ளிய பின்… அதே உபேந்திராவாக உருளையன்பேட்டை ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டு வந்த பின் அவனின் கிரிமினல் ரெக்கார்டுகளைப் பார்த்து ஷாக்காகிறான் காளி. உபேந்திரான்னு சொன்னா கோவா ரெட்டி [ ஹரிஷ் பெராடி] போட்டுத் தள்ளுவான், காளின்னு சொன்னா புதுச்சேரி போலீஸ் போட்டுத்தள்ளிரும். ஆனது ஆகட்டும் வாழ்ந்து பார்ப்போம் என்ற தில் முடிவுடன் ஒத்த தல காளி ரெட்ட தலயாக களத்தில் இறங்குகிறார் அருண் விஜய்.
புதுச்சேரி காளி, கோவா உபேந்திரா என இரண்டு கேரக்டரிலும் ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு இவற்றில் வித்தியாசம் காட்ட ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார் அருண் விஜய். அதிலும் சின்னச் சின்ன ஜடை போட்ட உபேந்திராவின் ஹேர் ஸ்டைல்… நல்ல ஸ்டைலாத்தான் இருக்கு. ரெட்ட கேரக்டர்களும் ஆக்ஷனுக்கு நல்ல ஸ்கோப் உள்ளவை என்பதால் ஸ்டண்ட் சீக்வென்ஸிலும் அதிரடி காட்டியுள்ளார். பேஸ்மெண்ட் கார் பார்க்கிங் ஆக்ஷனிலும் க்ளைமாக்ஸில் முதலைப் பண்ணை ஸ்டண்ட் சீனிலும்ம் செம மாஸ் காட்டியுள்ளார் அருண் விஜய். இந்த ஆக்ஷன் சீக்வென்ஸை அட்டகாசமாக கம்போஸ் பண்ணியுள்ள பி.சி.ஸ்டண்ட்ஸுக்கு கங்கிராட்ஸ்.
ஆந்த்ரேவாக சிட்தி இத்னானி உருண்டை முகம், அளவான சதைப் பிடிப்பு, நிறைவான நடிப்பு, சாங் சீனில் ஷாட்ஸில் கிளுகிளுப்பு என ஹீரோயினுக்குரிய சகல அம்சத்துடனும் வருகிறார். “வெறும் லவ்வை வச்சுக்கிட்டு சோறு திங்க முடியாது” என அருண் விஜய்யுடன் பேசும் ஆரம்பக் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை பணத்தாசை பிடித்த நெகட்டிவ் ஷேடையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார் சிட்தி இத்னானி.
தாதா கோஷ்டித்தலைவனாக ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் என எல்லோருமே புதுச்சேரிக்கு வந்து செத்துமடிகிறார்கள். இந்த ஜான்விஜய்க்கு இதிலும் அரை லூசுத்தனமான இன்ஸ்பெக்டர் வேசம் தான். இம்சை தாங்க முடியல சாமீ…
ஒரு பாடலில் சாம்.சி.எஸ். ஓகே… ஆனால் பேக்ரவுண்ட் ஸ்கோரில் இசைக்கருவிகளின் மீது ஏறி நின்னு வாசிச்சுட்டாரு போல. காது ஜவ்வு கிழியுது. ஹலோ சாம் பிரதர் கொஞ்சம் சாஃப்டா டீல் பண்ணிப் பழகுகங்க பிரதர்.
சில பல லாஜிக் ஓட்டைகள், டவுட்டுகள் இருக்கத்தான் செய்யுது. பக்கா ஆக்ஷன் எண்டெர்டெய்ன்மெண்டுக்கான கண்டெண்ட் இருந்தும் ஸ்கிரிப்ட் ஏன் ஸ்லோவா தெரியுது? “ஆசையே அனைத்து துன்பத்திற்கும் காரணம்” –புத்தரின் வார்த்தைகளுடன் படத்தை முடிக்கிறார் டைரக்டர் கிரிஷ் திருக்குமரன்.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.