அங்குசம் பார்வையில் ‘சாருகேசி’
தயாரிப்பு: அருண் விஷுவல்ஸ், டைரக்டர்: சுரேஷ் கிருஷ்ணா, ஆர்டிஸ்ட்: ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி மணிரத்னம், சத்யராஜ், ராஜ் அய்யப்பா, ரம்யா பாண்டியன், தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ், ஒளிப்பதிவு: பி.எல்.சஞ்சய், இசை: தேனிசைத் தென்றல் தேவா, எடிட்டிங்: ரிச்சர்ட், ஆர்ட் டைரக்டர்: வாசுதேவன், பிஆர்ஓ: ரியாஸ் கே.அஹமது& பாரஸ் ரியாஸ்.
நாடறிந்த கர்நாடக சங்கீத பாடகர் சாருகேசி[ ஒய்.ஜி.மகேந்திரன்]. இவரது மனைவி பாக்கியம் [ சுகாசினி மணிரத்னம்]. இவர்களது மகன் சஞ்சய்க்கு [ராஜ் அய்யப்பன்] அப்பாவின் புகழ் வெளிச்சத்தில் வாழ்வது பிடிக்காமல் குடிக்க ஆரம்பிக்கிறார். வெஸ்டன் மியூசிக்கிலும் எக்ஸ்பெர்டாக இருக்கிறார். இந்த நிலையில் தான் பாடுவதற்கு தன்னிடம் சான்ஸ் கேட்டு வந்த கெளதமி[ ரம்யா பாண்டியன்] மீது மையல் கொண்டு திருமணம் செய்து வீட்டுக்கும் அழைத்து வருகிறார். சாருகேசியின் வீட்டிற்குள் கெளதமி காலடி எடுத்து வைத்த பிறகு அங்கே பூகம்பச் செய்தி ஒன்றைக் கிளப்பி சாருகேசியையும் அவரது மனைவி பாக்கியத்தையும் நிம்மதி இழக்கச் செய்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் நிலைதடுமாறும் சாருகேசிக்கு அல்சைமர்[ முற்றிலும் நினைவுகள் மறந்து போவது} என்ற வியாதி தாக்கி, படுத்த படுக்கையாகிறார். மகா கலைஞனான சாருகேசி மீண்டெழுந்தாரா? சங்கீதத்தில் புதிய சரித்திரம் படைத்தாரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘சாருகேசி’.
இந்தக் கதையெல்லாமே சாருகேசியின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் இறங்கிய டைரக்டர் சமுத்திரக்கனியிடம் யூடியூபர் மதுவந்தி எடுக்கும் பேட்டி மூலம் ஃப்ளாஷ்பேக்காக விரிகிறது.
சாருகேசியாக ஒய்.ஜி.மகேந்திரனும் பாக்கியமாக சுகாசினி மணிரத்னமும் அற்புதமான ஜோடிப் பொருத்தம். தங்களின் வயதுக்கேற்ற அனுபவத்துடன் நடிப்பில் ஜொலிக்கிறார்கள் இருவரும். குறிப்பாக மேடையில் “அவள் தந்த வரம்” பாடலை மேடையில் பாடும் போது ஒய்.ஜி.எம்.மின் முகபாவனை, நினைவுகள் செயலிழிந்த பிறகு “பாக்கியம் நான் சாப்பிட்டேனா, நல்லா தெரியுமா?” என சுகாசினியிடம் திரும்பத் திரும்பக் கேட்கும் சீன், நினைவுகள் திரும்பிய பிறகு க்ளைமாக்ஸில் பாடும் பாடல் சீன் இதிலெல்லாம் அபாரமாக நடித்து கைதட்டல் வாங்குகிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
தான் பெற்ற மகனின் உண்மையான தகப்பன் யார் என்ற ரகசியத்தை அவனிடமே சொல்லிக் குமுறும் சீனில் சுகாசினி சூப்பர் சுகாசினி. இவர்களின் மகனாக வரும் ராஜ் அய்யப்பனைவிட, இவரது மனைவியாக வரும் ரம்யா பாண்டியன் தான் அதிகம் ஸ்கோர் பண்ணுகிறார்.
ஒய்.ஜி.எம்.மின் முன்னால் திடீரென காட்சி தந்து சில தத்துவங்களைச் சொல்லும் நடமாடும் தெய்வம் ராகதேவனாக சத்யராஜ். இவர் பேசும் வசனங்கள் எல்லாமே வாழ்க்கைத் தத்துவங்கள். வசனம் கவிஞர் பா.விஜய்.
ஒய்.ஜி.எம்.மின் கார் டிரைவர் செந்திலாக தலைவாசல் விஜய், டாக்டர் ஜேக்கப்பாக ஜெயப்பிரகாஷ் இந்த இரண்டு கேரக்டர்களுமே சாருகேசியின் ஆன்ம பலம்.
“அவள் தந்த வரம்” பாடலில் தேனிசைத் தென்றல் தேவாவின் சங்கீத ஞானம் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. கிட்டார், வயலின், பியானோ போன்ற இசைக்கருவிகளை வைத்து ராஜ் அய்யப்பனுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் எழுதிய டூயட் பாடலில் கவிஞர் பா.விஜய் தெரிகிறார்.
ஆக்ஷன் & மசாலா படங்களின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடமிருந்து இப்படியொரு சங்கீத சினிமா வந்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனால் ‘சங்கராபரணம்’, ‘சிந்து பைரவி’ படங்களுக்கு அடுத்து இந்த ‘சாருகேசி’ தான் என அவர்களே தம்பட்டம் அடித்திருப்பது ரொம்பவே ஓவர்.
அங்குசம் பார்வையில் ‘சாருகேசி’ 43/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.