”முதல்வர் ஆசைக்கு ஆப்பு ” – விஜய்யை பொளந்து கட்டிய கே.ராஜன்!
‘சங்கமித்ரன் கிரியேஷன்ஸ்’ & அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்’ பேனரில் என்.நாகராஜ் என்பவர் தயாரித்து விரைவில் திரைக்கு வரும் படம் ‘ப்ராமிஸ்’. அறிமுக இயக்குனர் அருண்குமார் சேகரன் டைரக்ட் பண்ணி ஹீரோவாகவும் நடித்துள்ள இப்படத்தின் ஹீரோயினாக புதுமுகம் நதியா நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள் தான். படத்தின் இசை : சரவண தீபன், எடிட்டிங் : ஸ்ரீராம் விக்னேஷ், பி.ஆர்.ஓ : சக்தி சரவணன்.
‘ப்ராமிஸ்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜனவரி 25-ஆம் தேதி காலை நடந்தது. படக்குழுவினரை வாழ்த்துவதற்காக தயாரிப்பாளர் கே.ராஜன், டைரக்டர் பேரரசு, கில்டு சங்கத் தலைவரும் ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.
அனைவரையும் வரவேற்றுப் பேசிய படத்தின் தயாரிப்பாளர் என்.நாகராஜ், “டைரக்டர் அருண்குமார் சேகரன் 2023-ல் என்னைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னார். எனது குடும்பத்தினருடன் ஆலோசித்துவிட்டு 2024 ஆகஸ்ட்.15-ஆம் தேதி படத்திற்கு பூஜை போட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்தோம். இப்போது ரிலீஸ் கட்டத்திற்கு வந்துள்ளோம். இயக்குனர் நல்ல திறமைசாலி, உழைப்பாளி. பரிட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவர்கள் போல மக்களின் ரிசல்ட்டுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.
படத்தின் பாடலாசிரியர் பாலா, எடிட்டர் ஸ்ரீராம் விக்னேஷ் உட்படசில தொழில்நுட்பக் கலைஞர்கள் பேசி முடித்த பின் மைக் முன் வந்தார் டைரக்டர் பேரரசு.
“பத்து இருபது வருசத்துக்கு முன்னால வந்த ரஜினி, அஜீத், விஜய் படங்கள் இப்ப ரீ ரிலீஸ் ஆகி கல்லா கட்டுது. அவர்களெல்லாம் மார்க்கெட்டின் உச்சத்தில் இருப்பவர்கள். ரீரிலீஸ் மூலம் தான் அவர்களுக்கு மார்க்கெட் சூடுபிடிக்குமா என்ன? அதனால தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் உடனடியாக உட்கார்ந்து பேசி இதற்கு ஒரு முடிவு கட்டணும். அப்பத்தான் புதுசா வர்ற சின்னப்படங்களும் அதன் தயாரிப்பாளர்களும் வாழ முடியும். சொல்றத சொல்லிட்டேன், அவ்வளவு தான்” என செம சூடானார் பேரரசு.
அருண்குமார் சேகரன் பேசும் போது,
“எங்களுக்கு எந்த பின்புலமும் இல்லை, இந்தப் படத்திலும் பெரிய நடிகர்கள் இல்லை, பெரிய பட்ஜெட் இல்லை. எங்களைத் தூக்கிவிடுவதற்கு ஆட்கள் இல்லை. ஆனாலும் பேரரசு, ராஜன், ஜாக்குவார் தங்கம் போன்ற சீனியர்கள் எங்களை வாழ்த்த வந்துள்ளார்கள். இதற்குக் காரணம் பி.ஆர்.ஓ. அண்ணன் சக்தி சரவணன் தான். எந்த டைரக்டரிடமும் வேலை பார்க்காமல் பைலட் பிலிம் எடுத்த என்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் நாகராஜ் சாருக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கேன்.
இந்தப் படத்தை புரமோட் பண்ண டைரக்டர் எச்.வினோத் சாரைக் கேட்டோம். அவரும் சரின்னு தான் சொன்னார். ஆனா இப்ப அவரோட ஜனநாயகன் படமே பெரிய சிக்கலில் மாட்டிருக்கு. இந்த நிலையில் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை டைரக்டர் சேரன் சாரும் நடிகர் நட்டி சாரும் வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தினார்கள். நாங்கள் வெறும் 12 பேர் கொண்ட குழுவாக இருந்து இப்படத்தை முடித்துள்ளோம்.
படம் பாதியிலேயே நின்றுவிடும் என்ற கஷ்டமான நிலையில் கைகொடுத்து உதவினார் ஹீரோயின் நதியா. இப்படி பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
கடைசியாக மைக் பிடித்தார் அதிரடிப் பேச்சாளரும் தயாரிப்பாளருமான கே.ராஜன். “இந்தப் படத்திற்கு ஒத்துழைத்தவர்கள், ஒத்துழைக்காதவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு வராத ஹீரோயின் உட்பட அனைவருக்கும் நன்றி சொன்னார் தயாரிப்பாளர் நாகராஜ். அதான் தமிழன் பண்பாடு. இந்த மாதிரி சின்னப்படங்கள், நல்ல கண்டெண்ட் உள்ள படங்கள் ஓடுனாத்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. 400 கோடி, 500 கோடில படம் எடுத்தா அந்த பெரிய ஹீரோக்களுக்குத் தான் நல்லது.

இப்பக்கூட ஜனநாயகன் என்ற படம் சென்சார்லயும் நீதிமன்றத்திலயும் சிக்கி லோல்படுது. இதுக்கெல்லாம் காரணம் வேறு யாருமல்ல, அந்த ஹீரோ தான். வெறும் சினிமா ஹீரோவா இருந்திருந்தா ஜனநாயகனுக்கு இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்குமா? நேத்து கட்சி ஆரம்பிச்சு நாளைக்கு முதல்வராகணும்னு ஆசையோட வந்தா சென்சார்டு போர்டு ஆப்படிக்கத்தான் செய்யும். அனுபவச்சுத்தான் ஆகணும்.
அந்தப் படத்துக்கு இவ்வளவு நடக்குதுல்ல, 250 கோடி வாங்குனா அந்த ஹீரோ வாயத்திறந்து ஏதாவது பேசியிருக்காரா? இப்ப நிலைமை என்னாச்சு 500 கோடி போட்ட தயாரிப்பாளர் தான் தவியாய் தவிக்கிறார். ஒண்ணு இரண்டு டைரக்டர்கள், சில்லு வண்டு நடிகர்கள் தான் அந்தப் படத்திற்காக குரல் கொடுத்தார்கள். பெரிய தயாரிப்பாளர்கள் யாருமே கண்டுக்கல. ஏன்னா அந்த ஹீரோ மற்றவர்களுக்கு பிரச்சனை வந்தப்ப வாயத்திறக்கல. அதனால் யாரும் கண்டுக்கல” என சகட்டுமேனிக்கு விஜய்யை பொளந்து கட்டினா கே.ராஜன்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.